இந்தியன் ரயில்வே தனது வருமானத்தை அதிகரித்து கொள்ளும் வகையில் அவ்வப்போது சுற்றுலா விபரங்களை அறிவிக்கும் என்பதும், ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த சுற்றுலா ஏற்பாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஐ.ஆர்.சி.டி.சி என்ற இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' என்ற புதிய சுற்றுலா அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீராமரின் புனித தலங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்வதற்கான இந்த சிறப்பு சுற்றுலா18 நாள்களை கொண்டது.
ஸ்ரீ ராமாயண யாத்திரை
இந்த ஸ்ரீ ராமாயண யாத்திரை ஜூன் 23ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. ஜூன் 23-ஆம் தேதி டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து பாரத் டூரிஸ்ட் ரயில் மூலம் பயணம் தொடங்கும் என்றும், அயோத்தி, ஜனக்பூர், சீதாமர்ஹி, பக்சர், வாரணாசி, பிரயாக்ராஜ், ஷிரிங்வெர்பூர், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராச்சலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் இந்த சுற்றுப் பயணத்துக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது எனவும் லக்னோவின் ஐஆர்சிடிசி முதன்மை மண்டல மேலாளர் அஜித் குமார் சின்கா அவர்கள் அறிவித்துள்ளார்.
600 பேர்கள்
ஸ்ரீ ராமாயணம் யாத்திரையில் 600 பேர்கள் வரை பங்கு கொள்ளலாம் என்றும், இந்த யாத்திரையில் பங்குகொள்ளும் பயணிகளுக்கு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் கொண்ட வசதி செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்
18 நாள்கள் கொண்ட இந்த பயணத்திற்கு ரூபாய் 62,370 கட்டணமாக வசூலிக்கப்படும். எந்த ரயில் நிலையத்திலிருந்து ஏறினாலும் ஒரே கட்டணம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஸ்ரீராமர் தொடர்புடைய அனைத்து முக்கிய இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் இந்த பயணம் பக்தர்களுக்கு பெரும் பயன் உள்ளதாக இருக்கும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
வழிகாட்டும் நபர்கள்
மேலும் ராமாயணம் வரலாற்றை விரிவாக விளக்கி கூறும் வகையிலும், ஒவ்வொரு ராமர் தலத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்க, வழிகாட்டும் நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. மேலும் 18 நாட்கள் பயணத்தில் தங்கும் இடம், உணவு ஆகியவையும் தரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள ஐஆர்சிடிசி, டெல்லி, அலிகார், துண்ட்லா, கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய இடங்கள் புறப்படும் இடங்களாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
ராம பக்தர்கள்
18 நாள் ஒரே பயணத்தின் மூலம் இந்தியாவிலுள்ள ராமரின் தலங்கள் அனைத்தையும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐஆர்சிடிசியின் இந்த ஸ்ரீ ராமாயண யாத்திரை ரயிலை ராம பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.