கொரோனா வைரஸ் காலத்தில், நாம் கண்ணத்தில் கை வைத்துக் கொண்டு, இருக்கும் வேலை தொடருமா அல்லது இந்த மாத சம்பளம் முழுமையாக வருமா..? போன மாதம் மேலாளருடன் போட்ட சண்டையில் நம் சீட்டி கிழித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்களா? என்கிற பயத்திலேயே நாம் எல்லாம் உறைந்து போய் இருக்கிறோம்.
ஏழை எளிய மக்களோ, அடுத்த வேளை உணவுக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். எப்போது வேலை கிடைக்கும், எப்போது கூலி கைக்கு வரும் என அரசை அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் முகேஷ் அம்பானி, இந்த கொடூர கொரோனா வைரஸ் பரவி மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் கூட, தன் வியாபார விஸ்தரிப்புகளை வழக்கம் போலத் தட்டி விட்டு இருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு தான், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸப்பில் இருந்தே, அருகில் இருக்கும் மளிகை கடைகளில் பொருட்களை ஆர்டர் செய்து, பணத்தை செலுத்திவிட்டு, பொருட்களை கடைக்காரர் எடுத்து வைத்த பின் போய் வாங்கிக் கொள்ளலாம் என ஜியோமார்ட் தன் வியாபாரத்தைத் தொடங்கியது.
"WhatsApp-லேயே ஜியோ மார்ட்டில் ஆர்டர் செய்வது எப்படி? களம் இறங்கிய ரிலையன்ஸ்!" என்கிற தலைப்பில், வாட்ஸப் வழியாக ஜியோமார்ட்டில் எப்படி ஆர்டர் செய்யலாம் என விரிவாக எழுதி இருக்கிறோம். https://tamil.goodreturns.in/news/jio-mart-how-can-we-place-an-order-on-jio-mart-using-whatsapp-018747.html
முதலில் மும்பையின் சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே தொடங்கிய இந்த ஜியோமார்ட் வியாபாரம், சில தினங்களுக்கு முன், இந்தியாவின் 200 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தினார்கள்.
இப்போது ஜியோமார்ட் வழியாக, மக்கள் செய்யும் ஆர்டர்கள் பெரும்பாலும், ரிலையன்ஸின் துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் ஸ்மார்ட் (Reliance Smart), ரிலையன்ஸ் ஃப்ரெஷ் (Reliance Fresh), ரிலையன்ஸ் ரீடெயில் (Reliance retail) போன்றவைகளில் இருந்து தான் சப்ளை செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
என்னங்க மளிகை கடைகள் கிட்ட ஆர்டர் கொடுப்பேன்னு சொன்னீங்களே என்றால் "மளிகை கடைகள் ஜியோமார்ட்டில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள், அதனால் தான்..." என இழுக்கிறார்கள்.
இந்தியாவில் மொத்தம் 621 ரிலையன்ஸ் ஃப்ரெஷ் & ரிலையன்ஸ் ஸ்மார்ட் ஸ்டோர்கள் இருக்கின்றனவாம். இந்த கடைகள் வழியாக நாள் ஒன்றுக்கு 200 மெட்ரிக் டன் பழங்கள், 300 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பதாகச் சொல்கிறார்கள்.
தற்போது, ரிலையன்ஸ் ஜியோமார்ட், வாடிக்கையாளர்களை வளைக்க, "எந்த பொருளை வாங்கினாலும் எம் ஆர் பி விலையில் குறைதபட்சம் 5 % தள்ளுபடி" என்பதை தாரக மந்திரம் போலச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களாம்.