டீ யாருக்கு தான் பிடிக்காது, சொல்லப்போனால் தமிழ்நாட்டில் பல லட்சம் இளைஞர்களின் காலை உணவே வெறும் டீ மட்டும் என்றால் மிகையில்லை. நம்ம ஊரில் என்னதான் டிசைன் டிசைனா காஃபி ஷாப் வந்தாலும், டீ கடைகளை அசைக்கக் கூட முடியவில்லை. இதனாலேயே பல வெளிநாட்டு காஃபி ஷாப் நிறுவனங்கள் வர்த்தகத்தை அடுத்தடுத்து மூடி வருகிறது.
தமிழ்நாட்டில் டீ-க்கு இருக்கும் வரவேற்பு மற்றும் அதன் ஆதிக்கத்தை உணர்ந்த கரூர் மாவட்டத்தில் ஒரு சின்னக் கிராமத்தை சேர்ந்த ஜோசப் ராஜேஷ் டீ விற்பனை மூலம் சுமார் 7 கோடி ரூபாய் வர்த்தகத்தை உருவாக்கியுள்ளார்.
இவருடைய வளர்ச்சி பலருக்கும் வியப்பாக இருப்பது மட்டும் அல்லாமல் பல கோடி இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது. யார் இவர்..? இவருடைய வர்த்தகப் பிராண்டின் பெயர் என்ன..? இவ்வளவு பெரில வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது..?
ஜோசப் ராஜேஷ்
ஜோசப் ராஜேஷ் கரூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் மொச்சக்கோட்டம் பாளையத்தில் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாய் இல்லத்தரசியாகவும், தந்தை 8000 ரூபாய் சம்பளத்தில் பஸ் பாடி பில்டிங் பட்டறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி தமிழ்நாடு காவல் துறையில்
தலைமைக் காவலராக உள்ளார்.
200சதுரடி வீடு
ஜோசப் ராஜேஷ் -ன் குடும்பம் வெறும் 200சதுரடி கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். அவருடைய தந்தையின் சம்பளம் போதுமானதாக இல்லாத காரணத்தாலும் மாதம் 300 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தாலும் கான்வன்ட் பள்ளியில் 5ஆம் வகுப்பு வரையில் படித்து வந்த ஜோசப் ராஜேஷ் அதன் பின்பு அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி
பள்ளியில் படிக்கும் போதே ஜோசப் ராஜேஷ் கரூர் பகுதியில் மிகவும் பிரபலமான ஹேண்ட்லூம் நிறுவனத்தில் மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றித் தனது செலவுகளைப் பூர்த்தி செய்து வந்தார். இதன் பின்பு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் காமர்ஸ் பிரிவில் 2006 பட்டம் பெற்றார்.
தமிழகக் காவல் துறை
கல்லூரி படிப்பை முடித்த உடன் தமிழகக் காவல் துறையில் எஸ்ஐ பதவிக்குத் தேர்வு எழுதி வெற்றிபெற்றார். ஆனால் பணிநியமன ஆர்டரும் வரவில்லை இதேபோல் அத்தேர்வின் முடிவுகள் ஹோல்டு செய்யப்பட்டது. இதனால் மனம் உடைந்த ஜோசப் ராஜேஷ் 3 வருடம் MLM திட்டத்தின் கீழ் அழகு சாதன பொருட்கள் மற்றும் சுற்றுலா திட்டங்களை விற்பனை செய்யும் பணியில் பணியாற்றினார்.
வங்கி பணி
இக்காலகட்டத்தில் மாதம் 5000 ரூபாய் சம்பாதித்த ஜோசப் ராஜேஷ், 2012ல் ஆக்சிஸ் வங்கியின் ரிலேஷன்ஷிப் எக்ஸ்கியூடிவ் ஆகப் பணியில் சேர்ந்தார். அதன் பின்பு ஆந்திரா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு மாறி இன்சூரன்ஸ் விற்பனையில் ஏரியா மேனேஜர் வரையில் உயர்ந்தார். மாதம் 42,000 ரூபாய் சம்பளம் வாங்கினாலும் மன நிறைவு இல்லாமல் இருந்த ஜோசப் ராஜேஷ் வேலையை விட்டுவிட்டு 2016ல் தொழில் துவங்க முடிவு செய்துள்ளார்.
டீ கடை
இதே வருடம் ஜோசப் ராஜேஷ் சென்னை வந்து கிராண்ட் மாலில் 100சதுரடியில் Black Pekoe என்ற டீ கடையைத் திறந்துள்ளார். முதல் கடையில் வெறும் ஒரு ஊழியரை மட்டுமே வைத்து வர்த்தகத்தைத் துவங்கி ஜோசப் ராஜேஷ் ஒரு நாளுக்கு 8000 ரூபாய் வரையில் வருமானம் பெற்று அதிகப்படியான லாபத்தைப் பெற்றார்.
4 மாதத்தில் கடை மூடல்
இதில் முழுமையாக இறங்கிய ஜோசப் ராஜேஷ் 20 லட்சம் வங்கி கடன் மூலம் பணத்தைத் திரட்டி ஆலந்தூர் பகுதியில் 900 சதுரடியில் பெரிய கடையைத் திறந்தார். ஆனால் அங்குப் பார்கிங் பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது அதனால் வெறும் 4 மாதத்தில் கடையை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜோசப் ராஜேஷ்.
அடுத்தடுத்து விரிவாக்கம்
ஆனால் ஜோசப் ராஜேஷ் முயற்சியைக் கைவிடாமல் 3வது கிளை ராமானுஜம் ஐடி சிட்டி பகுதியில் 3 லட்சம் ரூபாய் முதலீட்டில் திறந்தார். இதேவேளையில் Black Pekoe என்ற பிராண்ட் மற்றும் வர்த்தகத்தை பிரான்சைஸ் மாடலாக அறிமுகம் செய்தார்.
பிரான்சைஸ் மாடல்
இந்தப் பிரான்சைஸ் மாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், ஒவ்வொரு கடையும் சுமார் 40000 முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தை ஒரு மாதத்தில் பெற துவங்கியுள்ளது. மேலும் பெண் தொழிலாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகச் சலுகை விலையில் பிரான்சைஸ் உரிமத்தை வழங்கிய நிலையில் தற்போது 13 பெண்கள் Black Pekoe பிரான்சைஸ் பெற்று மாதம் 5 லட்சம் ரூபாய் வரையிலான வர்த்தகத்தைப் பெற்று வருகின்றனர் என ஜோசப் ராஜேஷ் கூறுகிறார்.
2017 டூ 2021
2017ல் வெறும் 50,000 முதலீட்டில் துவங்கிய டீ கடை வர்த்தகம் தற்போது பிக்பில்லியன் புட் நிறுவனத்தின் கீழ் Black Pekoe மற்றும் Tea Boy chai ஆகிய இரு பிராண்டு கீழ் சுமார் 798 கிளைகளைக் கொண்டு சென்னையில் பல முக்கியப் பகுதிகளில் இயங்கி வருகிறது.
7 கோடி ரூபாய் வர்த்தகம்
2020-21ஆம் நிதியாண்டில் பிக்பில்லியன் புட் நிறுவனத்தின் மொத்த வர்த்தகம் 7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 10 கோடி ரூபாய் வரையில் உயரும் என எதிர்பார்ப்பதாகவும். நடப்பு ஆண்டில் புதிதாக 60 கிளைகளைத் திறக்கவும் திட்டமிட்டு உள்ளதாகக் கூறுகிறார் ஜோசப் ராஜேஷ்.
ஐடி மற்றும் வங்கி ஊழியர்கள் ஆர்வம்
6 முதல் 7 லட்சம் ரூபாயில் Black Pekoe பிரான்சைஸ் பெற முடியும். மேலும் இன்டீரியர், கடைக்குத் தேவையான அனைத்து பொருட்களும், உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எப்படி வர்த்தகம் நடத்த வேண்டும் என்பதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐடி மற்றும் வங்கி ஊழியர்கள் பலர் ஆர்வமாகப் பிரான்சைஸ் பெறுவதாக ஜோசப் ராஜேஷ் கூறுகிறார்.
விலை குறைவு அதிக வர்த்தகம்
இக்கடைகளில் ஒரு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் மக்கள் எவ்விதமான தயக்கமும் இல்லாமல் வாங்குகின்றனர். இக்கடையில் டீ மட்டும் அல்லாமல் முட்டை பப்ஸ், பன்னீர் பப்ஸ், சிக்கன் பப்ஸ், வாழைப்பழ கேக் போன்ற பல தின்பண்டங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1 கோடி கப் டீ விற்பனை
ஜோசப் ராஜேஷ் 500 கடைகளைத் திறக்க வேண்டும் என்றும், தினமும் 1 கோடி கப் டீ விற்பனை செய்ய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறார். ஜோசப் ராஜேஷ் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து மாபெரும் வெற்றியைத் தனது வர்த்தகத்தின் மூலம் அடைந்துள்ளார். பணம் இருந்தால் மட்டும் போதாது கடுமையான உழைப்பும் ஸ்மார்ட்டான ஐடியாவும் வேண்டும்.