வாரத்தின் முதல் நாளான இன்று எப்படியேனும் கொஞ்சம் லாபம் பார்த்து விட வேண்டும் என்று ஆர்வத்துடன் நுழைந்த முதலீட்டாளர்களுக்கு, பேரிடியாய் பல விஷயங்கள் காத்திருந்தன.
ஏனெனில் வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே நிஃப்டியும் 10,500 கீழ் வர்த்தகமாகியது.
எனினும் வர்த்தக நாளின் முடிவில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1941 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 35,634.95 ஆக முடிவடைதுள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 538 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,451.45 ஆக முடிவடைந்துள்ளது.
கொரோனா வைரஸால் வீழ்ச்சி
இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவின் தாக்கத்திற்கு பலர் ஆளாகியுள்ளனர். சொல்லப்போனால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக இந்திய சந்தையில் அதிகளவில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. உலக அளவிலும் வெடிப்பின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச சந்தைகளிலும் வீழ்ச்சியே தொடருகின்றன. இதன் பிரதிபலன் இந்திய சந்தைகளில் மேலும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன.
சவுதியின் முடிவும் ஒரு காரணம்
சவுதி அரேபியா தங்களது வாடிக்கையாளர்களாக வருபவர்களுக்கு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலையை குறைத்து கொடுக்க போவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறக்குறைய 30% வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இது கச்சா எண்ணெய் விலையில் பெரிய விலை யுத்தத்தினையே உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 20 வருடத்தில் இல்லாத அளவுக்கு விலை சலுகையில் கிடைக்கும் என்றால்? அது உலகின் ஒட்டுமொத்த சந்தையும் தன் பக்கம் திரும்ப வைக்கவும் உதவும் இல்லையா.
ஆர்பிஐ கட்டுப்பாட்டில் யெஸ் பேங்க்
பலமான நிதி நெருக்கடி, போதுமான நிதி திரட்ட இயலாமை என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் யெஸ் பேங்கினை கொண்டு வந்துள்ளது. எனினும் தற்போது ரிசர்வ் வங்கி தற்போது இதில் முதலீடு செய்வதாக கூறியிருந்தாலும், இது முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது முதலீட்டாளார்கள் மனதில் மியூச்சுவல் பன்ட் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்வதை குறைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி
சவுதி அரேபியாவின் அறிவிப்பின் பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 30% வீழ்ச்சி கண்டுள்ளது. இது 1991ல் அமெரிக்கா ஈராக் போருக்கு பின்னர் எண்ணெய் சந்தைகள் படு வேகமாக வீழ்ச்சி கண்டன. அது உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் இடையே கூட ஒரு பெரிய விலைபோருக்கு தூண்டியது. இந்த நிலையில் கடந்த வாரத்திலேயே உலக அளவில் நிலவி வரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
தலால் வீதியில் எப்படி பாதிப்பு
இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் விலைகள் இன்று பெரும்பாலும் வீழ்ச்சி கண்டுள்ளன. இந்தியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ஹெச்பிசிஎல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட பங்குகள் சற்று அடி வாங்கியுள்ளன. இது மேலும் பவர் நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகளும் வீழ்ச்சி காண வழிவகுத்துள்ளன. இது முதலீட்டாளர்களுக்கும் பெரும் அடியை கொடுத்துள்ளது.
பொருளாதாரங்களுக்கு நல்லதல்ல
குறைந்து வரும் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு நல்ல விஷயம் தானே என்று கூறப்பட்டாலும், கச்சா எண்ணெய் விலை சரிவானது எந்தவொரு நாட்டிற்கும் நல்ல சமிக்கை தான் அல்ல என்று தி எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியானது, வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளன.
முதலீடுகள் குறையலாம்
அதே போல நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கிட்டதட்ட 3,500 பேரும் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்பட்டாலும், மற்ற நாடுகளுக்கு அதிகளவில் பரவி வருகிறது. இது முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்வதற்கு இடையூறு விளைவித்து வருகின்றன. இதனால் சர்வதேச சந்தை வளர்ச்சியில் இது மேலும் பிரச்சனைகளை கொண்டு வருகிறது.
பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம்
கொரோனா வைரஸ் காரணமாக மொத்த பொருளாதாரத்தில் சேதத்தை மதிப்பிடுவது கடினம் என்றாலும், அது உலகளாவிய செயல்பாடுகள், சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பாதித்துள்ளது. ஆக இதன் காரணமாக சர்வதேச பொருளாதாரத்திலும் இதன் எதிரொலியாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஏன் சொல்லப்போனால் சர்வதேச ஜிடிபி விகிதமே வீழ்ச்சி காண வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கியின் ஸ்திரத்தன்மை பாதிப்பு
யெஸ் பேங்கின் தாக்கம் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் இந்த வங்கியினை மீட்க சில திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும், இது இந்தியாவின் வங்கித் துறையில் உள்ள ஸ்திரத்தன்மையை பாதிக்கும் விதமாக உள்ளது. ஆக இது முதலீட்டாளர்கள் இடையே ஒரு பீதியை உருவாக்கியுள்ளது.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் தாக்கம்
அதிலும் மியூச்சுவல் பண்ட் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ்வங்கியில் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்த பணம் குறித்த கவலைகளும் எழுந்துள்ளது. இது இந்தியாவின் வங்கி யூகங்களை ஆரோக்கியம் குறித்து கவலை எழுப்பியுள்ளது. ஆக இந்த மேற்கூறிய இந்த முக்கிய மூன்று காரணங்கள் தலால் தெரிவில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை இழக்க காரணமாக அமைந்துள்ளன.