இந்தியாவில் வங்கிகள் கடந்த சில வருடங்களாகவே இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் காரணத்தால் அடுத்தடுத்து வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
2019ல் பிஎம்சி கூட்டுறவு வங்கியைத் தொடர்ந்து 2020ல் யெஸ் வங்கியில் நடந்த பல்வேறு மோசடிகள் வெளியானதில் இவ்வங்கியின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி கையில் எடுத்தது. இதன் யெஸ் வங்கியைக் காப்பாற்ற எஸ்பிஐ பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்து இவ்வங்கியைக் காப்பாற்றியது.
இதேபோல் தற்போது ரிசர்வ் வங்கியின் கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கி மீது ஒரு மாத காலம் moratorium கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் துவங்கிய சில நிமிடத்தில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 19 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
20 சதவீதம் சரிவு
புதன்கிழமை வர்த்தகம் துவங்கிய சில நிமிடத்திலேயே மும்பை பங்குச்சந்தையில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 19 சதவீதம் வரையில் சரிந்தது, அடுத்த சில நிமிடத்தில் இவ்வங்கியின் Lower Circuit அளவான 20 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது.
பங்கு மதிப்பு
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் லட்சுமி விலாஸ் வங்கியின் ஒரு பங்கு 15.50 ரூபாய் விலையில் வர்த்தகம் முடிவடைந்த நிலையில், தற்போது 20 சதவீத வீழ்ச்சியை அடுத்து 12.40 ரூபாய் அளவை தொட்டுள்ளது.
DBS வங்கியுடன் இணைப்பது குறித்த ரிசர்வ் வங்கி வெளியிட்ட திட்டத்திற்குத் தீர்வு காணும் வரையில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் சரிவு பாதையில் தான் இருக்கும். நவம்பர் 20ஆம் தேதிக்குள் இரு வங்கிகளும் ரிசர்வ் வங்கிக்குப் பதில் அளிக்க வேண்டும்.
நிர்வாகக் குழு
லட்சுமி விலாஸ் வங்கி ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் PCA விதிமுறையின் கீழ் கண்காணிப்பில் இருக்கும் நிலையில் இவ்வங்கி நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தை முழுமையாகக் கையில் எடுத்துத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் மற்றும் நிதி நிலையில் தொடர் ஆய்வுகளைச் செய்து வந்தது.
மத்திய நிதியமைச்சகம்
ரிசர்வ் வங்கியின் லட்சுமி விலாஸ் வங்கியில் செய்த ஆய்வுகளைத் தொடர்ந்து, ஆர்பிஐ-யின் கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் நிர்வாகம் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு நவம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையில் moratorium கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
25,000 ரூபாய் மட்டுமே
இந்த ஒரு மாத தடை காலத்தில் இவ்வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு 25,000 ரூபாய்க்கு அதிகமாகத் தொகையைக் கொடுக்கக் கூடாது என்றும், இதேபோல் வங்கி 25,000 ரூபாய்க்கு மேல் யாருக்கும் கடன் அளிக்கக் கூடாது என்றும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது.
ரிசர்வ் வங்கி நம்பிக்கை
மக்களின் மத்தியிலும், இவ்வங்கியில் டெப்பாசிட் செய்தவர்களின் நம்பிக்கையைக் காப்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவே இந்த moratorium கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கியில் டெப்பாசிட் செய்துள்ளவர்கள் பணம் குறித்துப் பயப்பட வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
வங்கி இணைப்பு
மத்திய நிதியமைச்சகம் moratorium கட்டுப்பாடுகள் விதித்த அடுத்த ஒரு மணிநேரத்தில் ரிசர்வ் வங்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இப்புதிய திட்டத்தின் படி நிர்வாகம் பிரச்சனையாலும், நிதி நெருக்கடியாலும் மோசமான நிலையில் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கியுடன் இணைக்கத் திட்ட வடிவத்தை வெளியிட்டுள்ளது.
2,500 கோடி ரூபாய்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின், நிர்வாகப் பிரச்சனையில் மூழ்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கி, DBS பேங்க் இந்தியா உடன் இணைக்கப்படுவதன் மூலம் இக்கூட்டணி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்காகச் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான மூலதன நிதியை DBS வங்கி கொண்டு வரும் எனத் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் DBS பேங்க் லிமிடெட் -ன் இந்திய கிளை நிறுவனம் தான் இந்த BS பேங்க் இந்தியா.
நவம்பர் 20 கடைசி நாள்
ரிசர்வ் வங்கி தற்போது இரு வங்கிகளுக்கும் தனது திட்ட வடிவத்தை அனுப்பியுள்ளது. இரு வங்கிகளும் தனது முடிவை நவம்பர் 20ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.
இரு வங்கிகளும் ஒப்புதல் அளித்தால் வங்கி இணைப்பிற்கான பணிகளைத் துவங்கும் போது லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.