சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி, இந்தியாவில் 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 566 வங்கிக் கிளைகளும், 918 ஏடிஎம்-களும் வைத்திருக்கிறதாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே, லட்சுமி விலாஸ் வங்கிக்கு நேரம் சரி இல்லை.
சிறு குறு நிறுவனங்களுக்கு (MSME) அதிகம் கடன் வழங்கிக் கொண்டு இருந்த லட்சுமி விலாஸ் வங்கி, ஒரு கட்டத்தில், பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கத் தொடங்கியது. லட்சுமி விலாஸ் வங்கியின் பிரச்சனைகளும் அங்கிருந்து தொடங்கிவிட்டன.
என் பி ஏ திடீர் உயர்வு, டெபாசிட் சரிவு
2017 கால கட்டத்தில் 2.67 சதவிகிதமாக இருந்த லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்படாத கடன் (NPA), மார்ச் 2020-ல் 25.39 சதவிகிதமாக அதிகரித்தது. அதே நேரத்தில் லட்சுமி விலாஸ் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் 31,000 கோடி ரூபாயில் இருந்து சுமாராக 21,000 கோடி ரூபாயாக சரிந்து இருப்பதாகச் சொல்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
பி சி ஏ திட்டம்
செயல்படாத கடன் (என் பி ஏ) அதிகரித்ததால், கடந்த செப்டம்பர் 2019 காலத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை பி சி ஏ (Prompt Corrective Action) திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது ஆர்பிஐ. இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள், கிட்டத்தட்ட ஆர்பிஐ அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை கொடுப்பது அல்லது பெரிய டெபாசிட்களை வாங்குவது போன்ற எந்த காரியத்தையும் செய்ய முடியாது.
வழக்கு
கடந்த செப்டம்பர் 2019-ல் லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் சிங் சகோதரர்களுக்கு (மல்விந்தர் சிங், ஷிவேந்தர் சிங்) எதிராக, ஃபிக்ஸட் டெபாசிட் முறைகேடு தொடர்பாக, டெல்லி பொருளாதார குற்றப் பிரிவினர் வழக்கு பதிவு செய்தார்கள். சமீபத்தில் இரண்டு லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகளைக் கூட கைது செய்து இருக்கிறார்கள்.
தடை மேல் தடை
ஜனவரி 2019-ல், பிளாக் ஸ்டோன் கம்பெனியிடம் இருந்து சுமாராக 2,000 கோடி ரூபாய் ஈக்விட்டி முதலீட்டைப் பெற இருந்தது, சில செயல்படாத கடன் ப்ரொவிசனிங் காரணங்களால் அந்த டீல் தடைபட்டது.
லட்சுமி விலாஸ் வங்கியை, இந்தியா புல்ஸ் உடன் இணைக்க, ஆர்பிஐ இடம் அனுமதி கேட்டது. அக்டோபர் 2019-ல் நிராகரித்தது ஆர்பிஐ.
ராஜினாமா
கடந்த ஆகஸ்ட் 2019-ல் லட்சுமி விலாஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி பார்த்தசாரதி முகர்ஜி ராஜினாமா செய்தார். இவருக்கு ஆர்பிஐ ஜனவரி 2019-ல் தான் 2 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படி பல உயர் அதிகாரிகள், கடந்த சில வருடங்களில், இந்த வங்கியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
ஆர்பிஐ அனுமதி
மேலே சொன்ன பிரச்சனைகள் எல்லாம் போக, கடந்த வெள்ளிக்கிழமை, லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள், நிர்வாக இயக்குநர் உட்பட, 7 இயக்குநர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள். எனவே, லட்சுமி விலாஸ் வங்கியின் தினசரி நடவடிக்கைகளை நிர்வகிக்க,
மீதா மகன் (Meeta Makhan), சக்தி சின்ஹா (Shakti Sinha), சதீஷ் குமார் கால்ரா (Satish Kumar Kalra) என 3 பேர் கொண்ட இயக்குநர் கமிட்டிக்கு ஆர்பிஐ அனுமதி கொடுத்து இருக்கிறது.
வங்கியில் பிரச்சனை
தற்போது, லட்சுமி விலாஸ் வங்கிக்கு உடனடியாக ஒரு முதலீட்டாளர் தேவை. கடந்த ஒரு வருட காலமாக, லட்சுமி விலாஸ் வங்கி கடன் கொடுக்க முடியாமல் பி சி ஏ திட்டத்தின் கீழ் இருக்கிறது. தற்போது Clix Capital என்கிற கம்பெனி, லட்சுமி விலாஸ் பேங்கை வாங்குவதற்கான வேலையில் இறங்கி இருக்கிறதாம். இந்த டீலை விரைவுபடுத்தும் வேலையில் ஆர்பிஐ இருக்கிறதாம்.
பயப்பட வேண்டாம்
வங்கியின் Liquidity Coverage Ratio (LCR) 250 சதவிகிதமாக இருக்கிறது. எனவே லட்சுமி விலாஸ் வங்கியில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து இருப்பவர்கள் பயப்பட வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறது வங்கி தரப்பு. லட்சுமி விலாஸ் வங்கியை செப்டம்பர் 2019 கால கட்டத்திலேயே பி சி ஏ திட்டத்தில் வைத்திருக்கும் ஆர்பிஐக்கு நம் பாராட்டுக்கள். கூடிய விரைவில் லட்சுமி விலாஸ் வங்கியை வேறு வங்கி உடன் இணைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்