இந்திய வங்கிகளில் 13,500 கோடி ரூபாய்க் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுவிட்டுத் தலைமறைவாக இருப்பவர்கள் நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேகுல் சோக்ஸி.
2017-ம் ஆண்டு இவர்கள் கடனைச் செலுத்த முடியாமல் வெளிநாகளில் தலைமறைவான நிலையில், இப்போது இண்டஸ்ட்ரியல் ஃபைனான்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் போலியான வைர நகைகளை அடமானம் வைத்து 25 கோடி ரூபாய்க் கடன் பெற்று இருப்பது தெரிய வந்ததுள்ளது. இந்த புகாரை பெற்ற சிபிஐ புதிய வழக்கு ஒன்றை மேகுல் சோக்ஸி மீது பதிவு செய்துள்ளது.
புகார்
இண்டஸ்ட்ரியல் ஃபைனான்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா அளித்துள்ள புகாரில், 2016-ம் ஆண்டு ஆண்டு மேகுல் சோக்ஸி தனது பங்குகள், தங்க நகை மற்றும் வைர நகைகளை அடமானம் வைத்து வணிக முதலீட்டுக்காக 25 கோடி ரூபாய்க் கடனாகப் பெற்றார்.
அடமானம் வைத்த சொத்துக்கள்
பங்குகள், தங்க நகை மற்றும் வைர நகைகளை 4 வெவ்வேறு மதிப்பீட்டாளர்களை வைத்து மதிப்பாய்வு செய்தபோது, அவற்றின் மதிப்பு 34 முதல் 45 கோடி ரூபாய் வரையில் இருக்கும் எனத் தெரிவித்தனர். அதை ஏற்று மேகுல் சோக்ஸிக்கு 25 கோடி ரூபாய்க் கடன் வழங்கினோம்.
நீண்ட காலமாக அந்த கடன் தொகை திரும்ப வராததை அடுத்து, அவரி அளித்த பங்குகள் மற்றும் நகைகளை விற்று பணத்தைப் பெற அவை கையகப்படுத்தப்பட்டது.
பங்குகள் நிலை
மேகுல் சோக்ஸி பங்குகளைத் தேசிய செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் நிறுவனம் முடக்கியுள்ளது. எனவே அடமானம் வைத்த 20,60,054 பங்குகளில் 6,48,822 பங்குகள் மதிப்பு 4.07 கோடி ரூபாயை மட்டுமே இண்டஸ்ட்ரியல் ஃபைனான்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் விற்க முடியும் நிலை உள்ளது.
போலி நகைகள்
தங்களிடம் உள்ள தங்க நகைகள் மற்றும் வைரங்களை விற்று பணம் திரட்டலாம் எனப் பார்த்த போது அவற்றின் மதிப்பு அடமானம் வைத்த போது கூறப்பட்டதிலிருந்து 98 சதவீதம் கூட்டிக் காட்டப்பட்டு மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இவற்றை இப்போது விற்றால் 70 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரையில் மட்டுமே பணம் திரும்பக் கிடைக்கும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேகுல் சோக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி கேரண்டி உதவியுடன் துபாய், மொரீஷியஸ், ஹாங் காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகள் 6,344.97 கோடி ரூபாய்க் கடன் பெற்று அதை செலுத்தாமல் மோசடி செய்துவிட்டதாகப் புகார் அளித்தது.
வெளிநாட்டுக் குடியுரிமை சர்ச்சை
ஆனால் மேகுல் சோக்ஸிக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு ஆண்டிகுவா குடியுரிமை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் மேகுல் சோக்ஸி வெளிநாடு சென்றுவிட்டார். அதன் பிறகு பஞ்சாப் நேஷ்னல் வங்கி சாவகாசமாக வந்து புகார் அளித்துள்ளது என அப்போது செய்திகள் வெளியாகின.
நாடு கடத்த முயற்சி
இப்போது ஆண்டிகுவாவில் உள்ள மேகுல் சோக்ஸியையும் லண்டனில் உள்ள நீரவ் மோடியையும் கைது செய்து நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.