பிரதமர் நரேந்திர மோடி-யின் 2வது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி அதாவது நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் அறிக்கை முன்பு மத்திய அரசு தாக்கல் செய்யும் முக்கியமான ஆவணமான Economic Survey இன்று தாக்கல் செய்யப்படும் காரணத்தால் பொருளாதார வல்லுனர்கள், நிதி துறை வல்லுனர்கள் எனப் பல தரப்பினர் மிகவும் ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ப. சிதம்பரம், மோடி அரசு நாளை தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் எதற்கு முக்கியதுவம் அளிக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துள்ளார்.
ப சிதம்பரம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் பிஜேபி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் சில முக்கியமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதார வளர்ச்சியில் உலகளாவிய மந்தநிலையின் தாக்கம், ஏற்றுமதி வீழ்ச்சி, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்பு, பெருகி வரும் மொத்த அரசாங்க கடன் போன்ற பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்த வேண்டும் என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மோடி அரசு
இது மட்டும் அல்லாமல் மோடி அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அதிக வேலையின்மை விகிதம், ஆட்குறைப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்தது மூலம் நுகர்வு அளவுகளிலும் பெரிய வீழ்ச்சி அடைந்துள்ள ஆபத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
ப.சிதம்பரம் பேட்டி
ப.சிதம்பரம் பிடிஐக்கு அளித்த பேட்டியில், மோடி அரசின் இந்தப் பட்ஜெட் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், மோடி அரசின் முந்தைய பட்ஜெட்-ஐ பார்க்கும் போது பெரும் ஏமாற்றத்திற்கும் தயாராக இருப்பதாகச் சிதம்பரம் கூறினார்.
தளர்வு
இதோடு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கி, மக்கள் கைகளில் அதிகப் பணத்தை வீட்டுக்குக் கொண்டு செல்வதற்கான வழிகளை அரசு கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வரிச் சேமிப்பு
2014 ஆம் ஆண்டுக்கு பின்பு வரிச் சேமிப்பு அளவுகளில் எவ்விதமான மாற்றமும் இல்லை, இந்த 8 வருடத்தில் விலைவாசி மற்றும் வாழ்க்கை முறை மிகப்பெரிய மாற்றங்கள் நடந்துள்ளது.
பட்ஜெட் 2023-24
இதை ஈடு செய்ய மத்திய அரசு கட்டாயம் வரிச் சலுகை அல்லது தளர்வுகள் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கைக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் உள்ளது.
முக்கிய எதிர்பார்ப்பு
இதேவேளையில் தற்போது மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் விஷயம் இதுதான்.
1. 5 லட்சம் ரூபாய் வரையிலான அடிப்படை வரிச் சலுகை
2. வருமான வரி விதிப்புக் குறைப்பு
3. மலிவு விலை வீடுகளுக்கான வரம்பு 45 லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்தப்பட வேண்டும்.
4. உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
5. வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டங்கள்