இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், புதன்கிழமை வர்த்தகத்தில் 2 சதவீதம் சரிவைச் சந்தித்ததை அடுத்துச் சென்செக்ஸ் குறியீட்டில் தொடர்ந்து 2வது நாளாக மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சரிவைக் கண்டு அதிர்ச்சியில் இருக்கும் முதலீட்டாளர்களுக்குச் சர்வதேச முதலீட்டு வங்கியான Macquarie ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தத் தொடர் சரிவின் காரணமாக முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பு கடந்த 3 நாட்களில் சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 4 வர்த்தக நாட்களாகச் சரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
சர்வதேச முதலீட்டு வங்கியான Macquarie நிறுவனத்தின் ஆதித்யா சுரேஷ் மற்றும் அபிநில் தஹிவாலே ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சரிவு பாதையின் துவக்கம் தான், இதை விடவும் பெரிய சரிவடையும் ஆபத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
சூப்பர்ஸ்டார் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் இது வெறும் டிரைலர் தான்.. மெயின் பிட்சர் இன்னும் இருக்கு..!
30 சதவீதம் வரையில் சரிவு
Macquarie நிறுவனத்தின் ஆதித்யா சுரேஷ் மற்றும் அபிநில் தஹிவாலே ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் 2022 - 2023ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் EPS அதாவது ஒரு பங்கிற்கான வருமானத்தின் அளவு 30 சதவீதம் வரையில் குறையும் என்றும், ஒரு பங்கு விலை 1,350 ரூபாய் வரையில் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெய் வர்த்தகம் கடும் பாதிப்பு
அக்டோபர் டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் EPS 9 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தாலும், இதற்கு முக்கியக் காரணம் 1 சதவீத effective tax rateம், ரீடைல் பிரிவில் கிடைத்ததை 106 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டு லாபம் ஆகியவை தான்.
ஆனால் இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் நிர்வாகம் தனது கச்சா எண்ணெய் முதல் கெமிக்கல் பிரிவு வர்த்தகத்தின் வருவாய் மற்றும் லாப அளவீடுகளைத் தனியாக அறிவித்துள்ளது.
சுத்திகரிப்பு லாபம், பெட்ரோகெமிக்கல் உற்பத்தி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வளர்ச்சியை நிர்ணயம் செய்யும் கச்சா எண்ணெய் வர்த்தகம் டிசம்பர் காலாண்டில் அதிகளவிலான சரிவை அடைந்து, வருவாயில் பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் இப்பிரிவு வர்த்தகத்தில் முக்கியக் காரணியாக இருக்கும் சுத்திகரிப்பு லாப அளவீடுகளையும், பெட்ரோகெமிக்கல் உற்பத்தி அளவீடுகளையும் ரிலையன்ஸ் குழுமம் வெளியிட மறுத்துவிட்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியிலும், சந்தை வல்லுனர்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆராம்கோ கூட்டணி
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் கச்சா எண்ணெய் முதல் கெமிக்கல் வர்த்தகத்தைத் தனியாகப் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்தத் திடீர் மாற்றம் ஆராம்கோ உடனான பங்கு விற்பனைக்கு ரிலையன்ஸ் தயாராகிறதா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ
இதேவேளையில் ரிலையன்ஸ் ஜியோ தளத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 411 மில்லியனாக உயர்ந்திருக்கும் நிலையில், 2023ல் இதன் அளவு 500 மில்லியனை தாண்டும் எனக் கணித்துள்ளது Macquarie நிறுவனத்தின் அறிக்கை. இதனால் ஜியோ நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளர்களுக்குப் பெறும் வருமானத்தின் அளவு தொடர்ந்து 10 முதல் 15 சதவீதம் வரையில் உயரும் எனவும் கணித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
இதேபோல் ரீடைல் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் 2030க்குள் 50 பில்லியன் டாலரைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டாலும், ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு கொடுக்கும் அதிகப்படியான தள்ளுபடி மற்றும் சலுகைகள் இக்குழுமத்தின் லாபத்தில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணித்துள்ளது.