மும்பை: ரிசர்வ் வங்கியின் கடன் மறு சீரமைப்புத் திட்டத்துக்கு எந்த பெரிய நிறுவனங்களும் ஆர்வம் காட்ட முன்வரவில்லை. அப்படி செய்தால் தங்கள் நிறுவனத்தின் மதிப்பு பாதிக்கப்படும் என்று கருதி, விசாரித்து விட்டு ஒதுங்கிவிட்டன. இதனால் வங்கிகளில் வாராக்கடன் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் கடந்த ஆறு மாதங்களாக தொழில் துறை கடுமையாக முடங்கியது. இதனால் பெரிய அளவில் அரசுக்கும், நிறுவனங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் கடன் சுமை கடுமையாக அதிகரித்துள்ளது.
வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் பெருநிறுவனங்கள் எல்லாம் திணறுகின்றன. இதனால் அவற்றில் பல கடன் வாராக்கடன் ஆகும் நிலையில் உள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த மாதம் சமர்ப்பித்த கே.வி.காமத் அறிக்கையின்படி, பெருநிறுவனங்களின் கடன் ரூ.15.52 லட்சம் கோடி, கொரோனாவால் வராக்கடனாகும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வாரக்கடன் அதிகரிப்பை கட்டுப்படுத்த பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனால் எந்த பலனும் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் இருந்து மீள வழிவகுப்பதாக அமையவில்லை.
கடனை கட்டுவது சுலபம்
இந்நிலையில், கடன் மறு சீரமைப்பு திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடன் சீரமைப்பு திட்டப்படி கடனை செலுத்த வேண்டிய காலத்தை நீட்டிப்பது, வட்டி விகிதத்தை குறைப்பது என இரு வழிகளில் மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக கடன் பெற்றவா்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகை குறையும். இதனால், சிக்கலில் இருக்கும் கடனாளிகள் சற்று சுலபமாக தங்கள் கடனை திருப்பிச் செலுத்துவார்கள். இதன் மூலமாக வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்காது என்பதும் கடன் மறுசீரமைப்பின் நோக்கம்.
கடன்கள் அதிகரிப்பு
ஆனால், இப்போதைய சூழ்நிலையில், இந்தியாவில் கடன் மறுசீரமைப்பு என்பது எதிர்பார்த்த பலன் இருக்காது என்றே கடன் மதிப்பீட்டு நிறுவனங்களால் கூறப்பட்டது. கடன் மறுசீரமைப்பு என்பது பிரச்னையை ஒத்திவைக்க மட்டும் பயன்படுமே தவிர பிரச்னைக்கு முழுமையான தீா்வாக அமையாது. பொது முடக்க தளா்வுக்குப் பிறகு நிறுவனங்கள் எந்த அளவுக்கு வேகமாக லாபம் ஈட்டத் தொடங்கும் என்பதை இப்போதே கூறி விட முடியாது. இது தவிர இந்திய வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது சிறப்பு திட்டங்கள் மூலமாக கடன்களை அளித்து வருகின்றன. இந்திய வங்கிகளின் வாராக்கடன் 2020 நிதியாண்டில் 8.5 சதவீதமாக உள்ளது.
தொழில்துறை ஆர்வம்
இதனிடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. கடன் மறுசீரமைப்பு செய்யப்படும்போது வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படும், அதே நேரத்தில் கடன் தவணை காலம் நீட்டிக்கப்படுவதால் கடன் தவணைத் தொகை வெகுவாக குறையும். எனவே, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது எளிதாக இருக்கும் என்று தொழில்துறை தரப்பில் கூறப்பட்டது.
கடும் கட்டுப்பாடு
கடந்த 2008-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, இந்தியாவில் பல்வேறு பெரு நிறுவனங்களுக்கு கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை ஆா்பிஐ அறிவித்தது. அப்போது, அதன் மூலமாக கிடைத்த பலன்களை பல பெரு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக தவறாக பயன்படுத்திக் கொண்டன. இதையடுத்து, 2015-ஆம் ஆண்டு கடன் தொடா்பான விதிகளை ஆா்பிஐ மேலும் கடுமையாக்கியது. இந்த முறை கடன் மறுசீரமைப்பு திட்டத்தை மேற்கொள்ளும்போது அப்போது ஏற்பட்ட பிரச்னைகளையும் ஆா்பிஐ கவனத்தில் கொண்டு செயல்பட்டது.
கலக்கத்தில் நிறுவனங்கள்
எனினும் இந்த திட்டத்தில் கடன்களை மறு சீரமைப்புச் செய்யும் நிறுவனங்கள், வராக்கடனாக கருதப்பட மாட்டாது என கூறப்பட்டது. இருப்பினும், இந்த திட்டத்தில் வங்கிகள் ஆர்வம் காட்டவில்லை என்று வங்கிகள் கூறுகின்றன. இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நிறுவனங்கள் கடன் மறு சீரமைப்பு திட்டத்துக்கு ஆர்வம் காட்டவில்லை. இதுதொடர்பாக நான்கைந்து நிறுவனங்கள்தான் விசாரித்துள்ளன. அவையும் சீரமைப்பை செயல்படுத்த முன்வரவில்லை. கடன் மறு சீரமைப்பால் தங்கள் நிறுவனத்தின் தர குறியீடு பாதிக்கப்படலாம். ரேட்டிங் நிறுவனங்கள் குறைத்து மதிப்பிட்டால் என்ன செய்வது என்ற கலக்கத்தில் உள்ளன" என்றார்.