டில்லி: இன்று சர்வதேச மகளிர் தினம். இந்த் தினத்தை ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான வழிமுறைகளில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்தியாவின் மத்திய அரசும் ஒரு விதமாக தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று அனைத்து ஏ எஸ் ஐ. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களிலும் பெண் பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். என்கிற அறிவிப்பை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் நேற்று அறிவித்து இருந்தது.
இதில் உத்திரப் பிரதேச மாநிலத்தின், ஆக்ரா நகரத்தில் உலகிலேயே அதிக நபர்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தளமான தாஜ்மஹால் கூட அடக்கமாம்.
"பண்டைய நினைவுச் சின்னங்கள் & தொல்பொருள் தளங்கள் விதிகள், 1959-ன் கீழ், விதி 6-ஐப் பயன்படுத்தி, ஏ எஸ் ஐ அமைப்பின் இயக்குநர். இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் மார்ச் 8 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மத்திய அரசின் கீழ் இருக்கும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு, பெண் பார்வையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது" என புதுதில்லியில் உள்ள ஏ.எஸ்.ஐ தலைமையகத்தில் இருந்து சுற்றறிக்கை வெளியாகி இருக்கிறது.
மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் "ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் பெண்களை கடவுளாக மதிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது" என ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்திடம் சொல்லி இருக்கிறார்.
"இந்த மகளிர் தினம் அன்று ஏ.எஸ்.ஐ நினைவுச் சின்னத்திற்கு வரும் பெண்களுக்கு, இலவச நுழைவு அளிப்பதன் மூலம் எங்கள் மரியாதையை வெளிப்படுத்துகிறோம் எனச் சொல்லி இருக்கிறார் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல்.
எனவே டெல்லியில் இருக்கும் செங்கோட்டை தொடங்கி குதுப் மினார், ஹுமாயூன் கல்லறை, தாஜ் மஹால், கோனார்க்கில் இருக்கும் பிரசித்தி பெற்ற சூரியனார் கோவில், தமிழகத்தில் இருக்கும் மாமல்லபுரம், எல்லோரா குகைகள், கஜுராஹோ நினைவுச் சின்னங்கள், அஜந்தா குகைகள் போன்ற நினைவுச் சின்னங்களுக்கு இன்ரு வரும் பெண்கள் கட்டணம் செலுத்தாமல் அனுமதிக்கப்படுவார்கள். இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.