இரண்டாவது அலை ஓய்ந்து மூன்றாவது அலைக்கு தயாராகி வரும் இந்தியாவில், தற்போது கொரோனாவின் தாக்கமானது குறையத் தொடங்கியிருந்தாலும், இதுவரையில் இரண்டாவது அலையானது ஏற்படுத்தியுள்ள இழப்பீடானது ஈடு செய்ய முடியாதது. மதிப்பீடு செய்ய முடியாதது.
ஏனெனில் பொருளாதாரம், நிதி நெருக்கடி, வேலையின்மை, வேலையிழப்பு இப்படி எந்த பிரச்சனையாக இருந்தாலும், இதனை விரைவில் மீட்க முடியும். ஆனால் ஈடு செய்ய முடியாத அளவில் மனித உயிர்களை குடித்துக் கொண்டுள்ளது இந்த ஈவு இரக்கமில்லாத கொரோனா.
மத்திய மாநில அரசுகள் என பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அது ஓரளவு கைகொடுத்துள்ளது என்றே கூறலாம். எப்படியிருப்பினும் வல்லுனர்கள் தொடர்ந்து மூன்றாவது அலை குறித்து எச்சரித்து வருகின்றனர். அதோடு தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.
ஊழியர்களுக்கு உதவி
இதற்கிடையில் பல நாடுகள் இந்தியாவுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றன. பல கார்ப்பரேட் நிறுவனங்களும். என்.ஜி.ஓக்களும், தனி நபர்கள் என பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இன்னும் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசி கேம்ப், மருத்துவ கேம்ப், கொரோனா கேர் வசதிகள் என பலவற்றையும் ஏற்படுத்தி கொடுத்து வருகின்றன.
கொரோனாவால் இறப்பு
இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்கள் கொரோனாவினால் இறந்தால், அவரின் குடும்பத்தினருக்கு பற்பல நிவாரணங்களை அறிவித்து வருகின்றன. இது குறித்து ஏற்கனவே நாம் https://tamil.goodreturns.in/news/sun-pharma-bajaj-auto-and-many-other-companies-are-offer-financial-assistance-to-families-of-employ-023582.html என்ற கட்டுரையில் விரிவாக பார்த்தோம். அதில் எந்தெந்த நிறுவனங்கள் என்னென்ன சலுகையினை அறிவித்தன என்று.
ஒயோ பற்றி
அந்த வகையில் ஒயோ நிறுவனமும் இது போன்ற நிவாரத்தினை அறிவித்துள்ளது. குருகிராமை அடிப்படையாகக் கொண்ட 25 வயதான இளம் தொழிலதிபரான ரித்தேஷ் அகர்வால் என்பவரால் நிறுவப்பட்டது தான் ஓயோ நிறுவனம், இந்த நிறுவனம் சுற்றுலா செல்பவர்களுக்கும் ஹோட்டல் ரூம் தேவைப்படுவோர்களுக்கும் பட்ஜெட் விலையில் ஹோட்டல் ரூம்களை புக் செய்யும் மிகப் பிரபலமான ஒரு இந்திய ஸ்டார்டப் நிறுவனமாகும். சாப்ட் பேங்கின் ஆதரவுடைய இந்த நிறுவனம், பல நாடுகளில் தனது சேவையினை செய்து வருகிறது.
இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவி
இது குறித்து ஓயோ நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரித்தேஷ் அகர்வால், கொரோனாவினால் இறந்த ஓயோ ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கும் விதமாக, 8 மாத சம்பளம் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குழந்தைகளின் கல்வி செலவினங்களையும் செய்வதாக அறிவித்துள்ளார்.
3 வருட சம்பளம் - இன்சூரன்ஸ் ஆக கிடைக்கும்
மேலும் கொரோனா இரண்டாவது அலையானது பலருக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. துரதிஷ்டவசமாக ஓயோ சில ஊழியர்களை இழந்துவிட்டது. அவர்களின் குடும்பத்திற்காக ஓயோவின் ஆதரவு கிடைக்கும். அதோடு அவர்களது 3 வருட சம்பளத்திற்கு ஏற்ற டெர்ம் இன்சூரன்ஸும் உண்டு. மேலும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் மூலம் மருத்துவ செலவினங்களையும் ஆதரிக்கும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஓயோவின் ஆதரவு
இது கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு உதவும். ஊழியர்களின் உறவினர்களை நாங்கள் முடிந்த எல்லாவழிகளிலும் ஆதரிப்போம் என்றும் அகர்வால் கூறியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட நகரங்களில், 200க்கும் மேற்பட்ட ஓயோ தன்னார்வலர்கள் தொடர்ந்து ஊழியர்களுக்கு உதவி வருகின்றனர்.
ஓயோவை கட்டி எழுப்பியவர்களுக்கு உதவி
அதோடு மருத்துவ பொருட்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் என பல உதவிகளையும் ஒயோவின் முன்னாள் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவி செய்து வருகின்றோம். நாங்கள் இதோடு நிறுத்த மாட்டோம். இன்னும் ஊழியர்களுக்கும் அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் பலவற்றை செய்ய விரும்புகிறோம். ஓயோவை கட்டி எழுப்பியவர்களுக்கு தற்போது நமது உதவி தேவை. ஒயோ அதனை செய்யும் என அகர்வால் கூறியுள்ளார்.
இவாங்கா பாராட்டு
கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கும் மத்தியில் அமெரிக்காவில் உள்ள ஒயோ ஹோட்டல் அன்ட் ஹோம்ஸ் நிறுவனம், அமெரிக்கா மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த ஊழியர்களுக்கு இலவசமாக தங்கும் இடங்களை வழங்கி வந்தது. இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஒயோவின் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் கொரோனாவுக்கும் மத்தியில் இதுபோன்ற உதவிகள் செய்யவும் ஒரு மனம் வேண்டும். இதற்காக நாமும் ஒயோவுக்கு ஒரு சல்யூட் வைப்போமே.