இந்தியா சீனா எல்லையில் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன.
எனினும் தற்போது வரையில் இதற்கு ஒரு சுமூக தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனாலும் சீனாவில் இருந்து முதலீடுகள் மட்டும் அதிகரித்து வருகின்றன.
இதுவரை ஸ்டார்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வந்த நிறுவனங்கள், தற்போது நிதித் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளன.
மூன்று முதலீடுகள்
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி மற்றும் தனியார் துறையின் முன்னணி வங்கியாக திகழும் ஐசிஐசிஐ வங்கியில், பீப்பிள்ஸ் பேங்க் ஆப் சீனா ஏற்கனவே முதலீடு செய்திருந்தது. இந்த நிலையில் மூன்றாவதாக மற்றொரு நிதித் துறையினை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்த சீன வங்கி முதலீடு செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறைவான முதலீடு
இந்த முதலீடானது ராகுல் பஜாஜின் நிதி சேவைகளில் 1.0% குறைவாகவே உள்ளது. ஆகவே இது பங்கு சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளிலும் பிரதிபலிக்கவில்லை. அதோடு இது எப்போது முதலீடு செய்யப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால் இது கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் இறுதிக்குள் இருந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலை நிலவரம்
ஏனெனில் அந்த சமயத்தில் கொரோனாவின் தாக்கம் சந்தையில் இருந்ததால், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது அப்போது 4,800 ரூபாயில் இருந்து, 2,200 ரூபாயாக சரிந்தது. இன்று அதன் விலை 4.24% சரிந்து, 3327.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது சீனா மக்கள் வங்கியின் மூன்றாவது முதலீடாகும், ஏனெனில் கடந்த மார்ச் மாதத்தில் தான் ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தின் 1.01 சதவீத பங்குகளை வாங்கியது. அதுவே இந்திய சந்தையில் ஒரு வித பதற்றத்தினை உண்டாக்கியது.
அன்னிய நேரடி முதலீடுகளில் மாற்றம்
இதற்கிடையில் தான் மத்திய அரசு கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார மந்த நிலையை, வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த புதிய விதிகளின் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள எந்த வெளிநாடுகளும், நேரடி முதலீடு செய்ய முடியாது என்றும், மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே முதலீடு செய்ய முடியும் எனவும் கூறியது இந்தியா.
ஐசிஐசிஐ வங்கியில் முதலீடு
ஆனால் இத்தனை பிரச்சனைகளுக்கும் மத்தியிலும், ஐசிஐசிஐ வங்கி, 15 ஆயிரம் கோடி ரூபாயை, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டின் மூலம் திரட்ட முன்வந்தது. இதையடுத்து, 357 தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள், முதலீட்டை மேற்கொண்டனர். இவற்றில் உள்நாட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், சிங்கப்பூர் அரசு உள்ளிட்ட பல நிறுவனங்கள் அடங்கும். இந்த வகையில் சீனாவின் மக்கள் வங்கியும், 15 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பில்லை
ஹெச்டிஎஃப்சி லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸில் சீனா வங்கியின் முதலீடு என்பது மிக சிறிய அளவே. ஆக இது வங்கித் துறையில் பெரிய தாக்கத்தினையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தாது. வங்கிகளில் எந்தவொரு தனிப்பட்ட முதலீட்டாளரும் 15% மேலாக முதலீடு செய்ய அனுமதி இல்லை. அதே நேரத்தில் 5% அப்பால் முதலீடு செய்ய வேண்டுமெனில் கூட ஆர்பிஐயின் அனுமதி தேவை.