இந்த 2019 - 20 நிதி ஆண்டில் மத்திய அரசுக்கு போதுமான வரி வருவாய் வரவில்லை என்பதை பலரும் பல விதமாகச் சொல்லிவிட்டார்கள்.
இந்த சூழலில், மத்திய அரசு, தன் வரி வருவாயை, வருங்காலங்களிலாவது அதிகரிக்க, நிறைய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்தியப் பொருளாதாரத்தை முறைப்படுத்தும் (Formalization of Economy) வேலையிலும் மும்முரமாக இறங்கி இருக்கிறது மத்திய அரசு.
ஆர்கனைஸ்ட் பொருளாதாரம்
இந்தியா என்கிற 130 கோடி பேரைக் கொண்ட நாட்டில், சுமார் 10 கோடி பேர் Organized or Formalized பொருளாதார வேலைகளைச் செய்தாலே பெரிய விஷயம் தான். இந்த ஆர்கனைஸ்ட் பொருளாதார வேலைகள் என்றால் என்ன..? அதாங்க மாத சம்பளம் வாங்கி டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் வேலைகள் எல்லாம் தான், இந்த ஆர்கனைஸ்ட் பொருளாதாரத்தின் எடுத்துக்காட்டுகள்.
எப்படி
இந்தியாவில், ஒட்டு மொத்தமாக, இந்திய வருமான வரி வலைதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையே, கடந்த காலங்களில் இதுவரை 9 கோடியைத் தாண்டவில்லை. சரியாக 8.54 கோடி பேர் தான் என்கிறது வருமான வரி வலைதளம். எனவே தான் 10 கோடி பேர் என ரவுண்ட் அப் செய்து கொள்கிறோம்.
Unorganized பொருளாதாரம்
இந்தியாவில் மீதமுள்ள பல கோடி பேருக்கு உணவு உடை இருப்பிடம் எல்லாம் வழங்குவது, இந்த அன் ஆர்கனைஸ்ட் பொருளாதாரம் என்று சொல்லப்படும், அரசுக்கு முறையாக கணக்கு வழக்குகளில் வராத வேலைகள் தான். கூலித் தொழில் செய்பவர்கள், தள்ளு வண்டி இழுப்பவர்கள், ரோட்டுக் கடை போட்டிருப்பவர்கள், கொத்தனார், சித்தாள் வேலைக்குச் செல்பவர்கள், ப்ளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள், சொந்தமாக சின்ன சின்ன தொழில் செய்பவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
அன்றாட வாழ்க்கை
இந்த அன் ஆர்கனைஸ்ட் பொருளாதாரத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பெரும்பாலும், பெரிய அளவில் பணம் எல்லாம் புரளாது. அன்றாடம் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும். இப்போது இந்த அன் ஆர்கனைஸ்ட் பொருளாதாரத்தில் வேலை பார்க்கும் ப்ளம்பர்கள், எலெக்ட்ரீஷையன்கள் போன்ற proessional-களை, ஜிஎஸ்டி வட்டத்துக்குள் கொண்டு வர அரசு யோசித்துக் கொண்டு இருப்பதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இ காமர்ஸ் மூலம் வேலை
ப்ளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள், பியூட்டீஷியன்கள், ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள் என பல professional-கள், அர்பன் க்ளாப் (Urbanclap), ஹவுஸ் ஜாய் (House Joy), ப்ரோ 4 யூ (Bro4u) போன்ற இ-காமர்ஸ் கம்பெனிகள் வழியாக ஆன்லைனிலேயே தங்களுக்கான வேலைகளைப் பெறுகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்குக் கீழ் தான் டேர்ன் ஓவர் இருக்கும்.
ஜிஎஸ்டி வட்டம்
இப்படிப்பட்ட ப்ரொஃபெஷனல்களையும் ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் கீழ் கொண்டு வந்தால் என்ன..? என அரசு யோசித்துக் கொண்டு இருக்கிறதாம். இந்த ப்ரொஃபெஷனல்கள், அரசுக்கு ஜிஎஸ்டி எல்லாம் எதுவும் செலுத்த வேண்டாம், எந்த ஒரு ஜிஎஸ்டி படிவத்தையும் சமர்பிக்க வேண்டாம். வெறுமனே பதிவு செய்து கொள்ளச் சொல்லலாம் என்கிற யோசனையில் அரசு தரப்பு இருக்கிறார்களாம்.
டேட்டா பேஸ்
இதனால், இந்தியாவின் ஒரு பகுதி அன் ஆர்கனைஸ்ட் பொருளாதாரத்தில் வேலை செய்பவர்களின் விவரங்கள் அரசுக்கு கிடைக்க வரும். இதுவரை ப்ளம்பர்கள் மற்றும் எலெக்ட்ரீஷியன்கள் யார் யார் என்கிற விவரங்கள் கூட கண்டு பிடிக்க முடியாமல் அரசு இருக்கும் நிலையில், இது ஒரு நல்ல டேட்டா பேஸாக இருக்கும் என ஒரு அரசு உயர் அதிகாரியே சொல்லி இருக்கிறார்.
எப்படி செய்யப் போகிறார்கள்
மேலே சொன்ன அர்பன் க்ளாப் (Urbanclap), ஹவுஸ் ஜாய் (House Joy), ப்ரோ 4 யூ (Bro4u) போன்ற ஆன்லைன் அப்ளிகேஷன்களில், ஜிஎஸ்டி-யில் பதிவு செய்து இருக்கும் ப்ளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள் போன்ற ப்ரொஃபெஷனல்களை மட்டும் சேர்த்துக் கொள்ளச் சொல்லலாமா..? என யோசித்து வருகிறார்களாம். ஆக ஒரு ப்ளம்பர், எலெக்ட்ரீஷியன் போன்ற ப்ரொஃபெஷன்கள், மேலே சொல்லி இருக்கும் இ காமர்ஸ் நிறுவனத்தின் வழியாக வேலைகளைப் பெற வேண்டும் என்றால்... இனி ஜிஎஸ்டி பதிவு அவசியமாகிவிடும்.
அட இது சாதாரணம் தானே
ஜிஎஸ்டி கொண்டு வந்த போதே, வியாபாரிகளோ அல்லது தனி நபர்களோ, தாங்களே முன் வந்து கூட ஜிஎஸ்டியில் பதிவு செய்து கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். எனவே ப்ளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள் போன்ற முறைசாரா பொருளாதாரத்தில் வேலை பார்ப்பவர்களை, ஜிஎஸ்டியில் பதிவு செய்யச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமோ அல்லது புதிய விஷயமோ அல்ல என்கிறார் அந்த அரசு உயர் அதிகாரி.
எப்போது
இப்படி ப்ளம்பர், எலெக்ட்ரீஷியன், பியூட்டீஷியன், ஃபிட்னெஸ் டிரெயினர்கள் போல அமைப்பு சாரா பொருளாதாரத்தில் வேலை பார்க்கும் professional-களை, ஜிஎஸ்டியில் பதிவு செய்யச் சொல்வது தொடர்பான அறிவிப்புகள், இந்த 2019 - 20 நிதி ஆண்டின் இறுதிக்குள் வர வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தயாராக இருங்கள்
எனவே ப்ளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள், பியூட்டீஷியன்கள், ஃபிட்னெஸ் ட்ரெயினர்கள் போன்ற ப்ரொஃபெஷனல்கள் இ-காமர்ஸ் வழியாக வேலைகளைப் பெற வேண்டும் என்றால், தங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்து கொள்ள தயாராக இருங்கள். ஆனால் இ-காமர்ஸ் நிறுவனங்கள் வழியாக தங்களுக்கான வேலைகளைப் பெறாதவர்களை, ஜிஎஸ்டி வட்டத்துக்குள் கொண்டு வருவது பற்றி, இதுவரை செய்திகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.