அவர் பெயர் குல்தீப் கவுர் விக். வயது 64. சமீப காலங்களாக அதிகம் ஊடகங்களில் வரும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் தான் இவர் தன் சேமிப்பு பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தார்.
குல்தீப் கவுர் விக், செக்டார் 10, கர்கார், நவி மும்பை பகுதியில் தான் வாழ்ந்து வந்தார். வங்கியில் இருந்து பணத்தை எடுக்க முடியாத வருத்தத்தில், கடந்த செவ்வாய்க் கிழமை இரவு மரணம் அடைந்தார். குல்தீப் கவுர் விக், தன்னுடைய கணவர் வரீந்தர் சிங் விக், உடன் தான் வாழ்ந்து வந்தார்.
"அவளுக்கு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் போட்டிருந்த டெபாசிட் பணத்தை முறையாக திரும்ப எடுக்க முடியாததை நினைத்து அதிகம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள். அடிக்கடி, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்து இருப்பவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதை எல்லாம் டிவியில் பார்த்து மேலும் மன அழுத்தத்தில் இருந்தாள்" என வருத்தமாகச் சொல்கிறார் குல்தீப்பின் கணவர் வரிந்தர் சிங்.
இவர்கள் நிலை
வரீந்தர் சிங் விக், ஜிடிபி நகர் பகுதியில் இருக்கும், குரு தேஜ் பஹதூர் உயர் நிலைப் பள்ளியில் பயிற்சியாளராக இருக்கிறார். இவருடைய சம்பளக் கணக்கு கூட பிரச்சனைக்குரிய பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் தான் இருக்கிறது என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக இவர் பிஎம்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கிறாராம். அதோடு சில ஃபிக்ஸட் டெபாசிட் தொகையும் இந்த பிஎம்சி வங்கியில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
இன்சூரன்ஸுக்கு பணம் இல்லை
எங்கள் கையில், எங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு பிரீமியம் செலுத்தக் கூட பணம் இல்லை எனச் சொல்லி வருத்தப்படுகிறார் வரீந்தர் சிங் விக். இப்படி பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் எத்தனை பேர் தங்கள் சொந்த பந்தங்களை எல்லாம் இழந்து தவிப்பார்கள் எனத் தெரியவில்லை. இப்படி பிஎம்சி வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாமலும், அந்த மன அழுத்தத்திலுமே குல்தீப்பையும் சேர்த்து ஏழு பேர் இறந்து இருக்கிறார்கள்.
சஞ்ஜய் குலாதி
51 வயது, சஞ்ஜய் குலாதி என்கிற பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர் சமீபத்தில் நிலை குலைந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது. இவருக்கு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் சுமார் 90 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் இருந்ததாகச் சொல்கிறார்கள். இவரின் மகன் சிறப்புத் திறன் கொண்டவர் என்பதால், அவருக்கான மருத்துவ செலவுகளுக்காக எப்போதுமே இவருக்கு பணத் தேவை இருந்து கொண்டே இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஃபதுமல் பஞ்சாபி
அதே போல ஃபதுமல் பஞ்சாபி என்பவரும் மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் தன் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்ததை ஏ என் ஐ செய்தி நிறுவனம் உறுதி செய்து இருக்கிறது. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதித்ததில் இருந்தே அதிக மன உளைச்சலில் இருந்தார் என ஃபதுமல் பஞ்சாபியின் குடும்பத்தினர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
நிவேதிதா பிஜ்லானி
நிவேதிதா பிஜ்லானி என்பவர், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை எடுத்துக் கொண்டு, தன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இவருக்கும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதுவரை இவரின் தற்கொலைக்கும் வங்கிக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லவில்லை காவல் துறை. இன்னும் இப்படி எத்தனை பேர் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் தங்கள் உயிரை விடப் போகிறார்களோ தெரியவில்லை. பாவம் வயதானவர்கள் வங்கி வட்டிக் காசை நம்பித் தானே வாந்து வருவார்கள். இப்போது அதற்குள் பிரச்னை என்றால், யாரிடம் சென்று பணம் கேட்பது..?