டெல்லி: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உட்பட, சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இதை நிரூபிக்கும் விதமாக இந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அமைச்சரவை, கடந்த புதன் கிழமையன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சில நிறுவனங்களின் நிர்வாகக் கட்டுப்பாடுகளை மாற்றுவதோடு, குறிப்பாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அரசு பங்குகளான 53.29 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த நிறுவனங்கள் விற்பனை
பாரத் பெட்ரோலியம் தவிர இன்னும் மற்ற நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளும் விற்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Shipping Corp of India), கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Container Corp of India), டி.ஹெச்.டி.சி இந்தியா அன்ட் நார்த் ஈஸ்டர்ன் எலக்ட் ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (THDC India and North Eastern Electric Power Corporation Ltd) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சில நிறுவனங்களின் பங்குகள் 51% கீழ் விற்பனை
இந்த நிலையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 53.29 சதவிகித பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது. இதே டி.ஹெச்.டி.சி இந்தியா அன்ட் நார்த் ஈஸ்டர்ன் எலக்ட் ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை அரசுக்கு சொந்தமான என்.டி.பி.சி நிறுவனத்திற்கு விற்கப்போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிர்வாக கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு தேர்தெடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் அரசாங்கத்தின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கு கீழாக குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
திடீர் மாற்றம்
முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று அரசு பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை மட்டும் விற்பனை செய்ய அரசு இலக்காகக் கொண்டிருப்பதாகவும், இந்த விற்பனை மூலம் நடப்பு நிதியாண்டில் அரசின் இலக்கை அடைய உதவியாக இருக்கும் என்றும் கூறியிருந்த நிலையில், தற்போது 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்கன் ஸ்டான்லி கருத்து
இது குறித்து சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி கருத்துப்படி, பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கல் அரசாங்கத்தின் தலையீட்டு அபாயத்தை இது குறைக்கும். மேலும் சந்தைப்படுத்துதல் போன்றவைகளை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் இதன் பங்கு விலை 16 ரூபாய் குறைந்து 528 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.