கடந்த சில மாதங்களாகவே, பொதுத் துறை வங்கிகள் இணைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் செய்திகள் இணைய தளத்தில் வந்து கொண்டிருக்கின்றன.
இப்போது அதிகாரபூர்வமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பை அறிவித்து இருக்கிறார்.
இந்த வங்கிகள் இணைப்பைப் பற்றி அதிகம் இண்ட்ரோ செய்யத் தேவை இல்லை. நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.
ஒப்புதல்
மத்திய அரசின் அமைச்சரவை, 10 பொதுத் துறை வங்கிகளை வெறும் நான்கு பொதுத் துறை வங்கிகளாக இணைக்க, ஒப்புதல் கொடுத்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அரசு தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கிகளோடு தொடர்பில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். ஏர்கனவே பொதுத் துறை வங்கிகளை இணைக்க, வங்கிகளின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்து இருக்கிறார்களாம்.
இரண்டாவது பெரிய வங்கி
ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது போல, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டு வங்கிகளும் நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல் பேங்க் உடன் இணைக்கப்பட இருக்கிறது. இந்த இணைப்புக்குப் பின், இந்த ஜோடி தான் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியாக இருக்கும்.
அடுத்தடுத்த ஜோடிகள்
சிண்டிகேட் வங்கி, தென் இந்தியாவின் புகழ் பெற்ற கனரா வங்கி உடன் இணைக்கப்பட இருக்கிறது.
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி உடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட இருக்கிறது.
ஆந்திரா வங்கியும் கார்ப்பரேஷன் வங்கியும், யூனின் பேங்க் ஆஃப் இந்தியா உடன் இணைக்கப்பட இருக்கின்றன.
எதிர்ப்பு
அரசுக்கு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதில் ஆர்வம் என்றால், வங்கி யூனியன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கின்றன. வங்கித் துறையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு, வங்கி இணைப்பு ஒரு நல்ல தீர்வு அல்ல என தங்கள் எதிர்ப்புகளை பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
டிசம்பர் 2018
கடந்த டிசம்பர் 2018 வாக்கில் தான், பொதுத் துறை வங்கிகளை இணைப்பது குறித்த விஷயங்கள் பொது வெளிக்கு வந்தது. மத்திய ரிசர்வ் வங்கி கூட, இந்திய பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்ட ஒரு வலுவான வங்கி உருவானால், உலக அளவில் ஒரு பெரிய வங்கியாக உருவாகலாம் எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது.