ஓடிடி நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது அதிகரித்து வரும் நிலையில் பிவிஆர் மல்டிபிளக்ஸ் நிறுவனம் திடீரென டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் பிவிஆர் கட்டணத்தை உயர்த்தியதால் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிவிஆர் மல்டிபிளக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் திரையரங்கு அனுபவத்தை பெறுவதற்காக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு தொடர்ந்து செல்வார்களா? அல்லது திரையரங்குகளுக்கு செல்வது தவிர்த்துவிட்டு ஓடிடி மூலம் வீட்டிலேயே படம் பார்ப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிவிஆர் மல்டிபிளக்ஸ்
இந்தியாவின் மிகப் பெரிய மல்டிபிளக்ஸ் நிறுவனமான பிவிஆர், அதிக பணவீக்கம், தொழிலாளர் செலவு மற்றும் மறுமேம்பாட்டு செலவுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் டிக்கெட்டுகளின் விலையை 23% வரை உயர்த்தியுள்ளது. 1,000 கோடி வருவாயை தாண்டிய அதன் சிறந்த காலாண்டு வருவாயை பதிவு செய்ய டிக்கெட் கட்டண உயர்வு உதவுகிறது என்று பிவிஆர் தலைமை நிர்வாக அதிகாரி கெளதம் தத்தா கூறினார்.
பராமரிப்பு கட்டணங்கள்
"ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 5-7% விலையை டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினோம், ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் எங்களால் அதை செய்ய முடியவில்லை. இந்த நேரத்தில், மின்சார செலவுகள், வாடகை மற்றும் பராமரிப்பு கட்டணங்கள் உயர்ந்துள்ளன. எனவே நாங்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தோம்' என்று பிவிஆர் சி.இ.ஓ தத்தா மேலும் கூறினார்.
திரையரங்குகளின் வளர்ச்சி
கொரோனா பாதிப்புக்கு பின்னர் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது இன்னும் கோவிட்-க்கு முந்தைய அளவை எட்டவில்லை என்றாலும் வளர்ச்சி தொடரும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார். பிவிஆர் திரையரங்குகளுக்குள் பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான புதிய வழிகளை வெளியிட திட்டமிட்டுள்ளதால், Q3 FY23க்குள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலை விளம்பர வருவாயை எதிர்பார்க்கின்றோம் எனவும் தத்தா கூறினார். தற்போது விளம்பரத்தின் வருவாய் தொற்றுநோய்க்கு முந்தைய அளவில் 68% ஆக உள்ளது.
100 புதிய திரையரங்குகள்
பிவிஆர் நிறுவனம் 2022-23ஆம் ஆண்டில் சுமார் 100-110 திரையரங்குகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டில் சராசரியாக திறக்கப்பட்ட 80-90 திரையரங்குகளை விட அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிதியாண்டில் பிவிஆர் நிறுவனம் ரூ. 400 கோடி முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா தொழில்
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளால் சினிமா தொழில் பாதிக்கப்பட்டதால், 2021ஆம் நிதியாண்டில் ரூ.748 கோடியும், 2022ஆம் நிதியாண்டில் ரூ.488 கோடியும் இழப்பு ஏற்பட்டதாக பிவிஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விளம்பர வருமானம்
பிவிஆர் நிறுவனத்தின் வருவாயில் சுமார் 11% விளம்பரத்திலிருந்து வந்தது என்றும், இது தொற்றுநோய்களின் போது கணிசமாகக் குறைந்தது என்றும், ஆனால் அதே நேரத்தில் 2023 நிதியாண்டின் Q3 க்குள் அந்த எண்ணிக்கையை எட்டும் என்றும் பிவிஆர் எதிர்பார்க்கிறது. மேலும் இந்தியாவில் முதன்முறையாக சினிமா ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக PVR 270 டிகிரி ஆன்-ஸ்கிரீன் அனுபவமுள்ள சினிமா விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.