இந்திய மக்களையும் பொருளாதாரத்தையும் கொரோனா வைச்சு செய்கிறது என்றால் யாரும் மறுக்க முடியாது. ஏற்கனவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த இந்திய பொருளாதாரத்தைக் கொரோனா வெறும் 2 சதவீதம் மட்டும் வளரும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
கொரோனா மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள இந்தச் சூழ்நிலையில் இந்திய மக்கள் மத்தியில் பணப் புழக்கம் அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 0.75 சதவீதம் குறைந்தது 4.4 சதவீதமாக அறிவித்துள்ளது. நாட்டு மக்களின் நலன் கருத்து அடுத்த 3 மாதத்திற்கு மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ வசூல் செய்ய நிறுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தது.
ஆனால் இதனால் மக்களுக்கு லாபம் என்றாலும், அதை வங்கி எப்படிக் கையாளப் போகிறது..??
கொரோனா
மக்கள் கொரோனாவினால் பயந்து வீடுகளுக்குள்ளே பயந்து, தங்களது வருவாய், சம்பளம் இழந்து வருகின்றனர். இதன் எதிரொலி அத்தியாவசிய தேவையைக் கூட நிவர்த்திச் செய்து கொள்ள முடியாமல் தவித்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
3 மாத ஈஎம்ஐ
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் 3 மாதத்திற்கு மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ வசூல் செய்ய நிறுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தது. இதை எப்படி வங்கிகள் செயல்படுத்தப் போகிறது என்பது தான் இப்போதைய கேள்வி.
பொதுவாக வங்கி தங்களின் வருமானத்தை ஒருபோதும் இழக்காது, அதுவும் குறிப்பாகச் சாமானிய மக்களிடம் இருக்கும் வரும் வட்டி வருமானத்தை எக்காரணத்தைக் கொடும் இழக்க முன்வராது. இப்படியிருக்கும் நிலையில் 3 மாத ஈஎம்ஐ-ஐ எப்படிக் கணக்கிடப்போகிறது என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
கணக்கீடு
முதலில் 3 மாதம் ஈஎம்ஐ சலுகைக்கு வங்கியில் ஒப்புதல் பெற வேண்டும் இதன் பின்பு தான் இச்சலுகையில் 3 மாத விலக்கு பெற முடியும்.
தற்போது சந்தை வல்லுனர்களின் ஆய்வின் படி இந்த 3 மாத ஈஎம்ஐ வங்கிகள் எளிதாக மக்களிடம் இருந்து வசூல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது மக்களுக்குச் சுமை தெரியாமல் எளிதாக முறையில் வசூலிக்க முடிவு செய்துள்ளது இந்திய வங்கிகள்.
முதல் கணக்கு
இந்த 3 மாதத்திற்கு அசல் கணக்கில் கொள்ளப்படமாட்டாது, வட்டி மட்டும் கணக்கிட்டு அதை 3 மாதத்திற்குப் பின் செலுத்தப்படும் ஈஎம்ஐ-யில் பிரித்து, இயல்பாகச் செலுத்தப்படும் ஈஎம்ஐ தொகையுடன் சேர்ந்து வசூலிக்கப்படும்.
உதாரணமாக நீங்கள் வாங்கிய கடனுக்கான மாத வட்டி (அசல் தொகை இல்லாமல்) 10000 ரூபாய் எனில் 3 மாதத்திற்கு 30000 ரூபாய். இந்த 30,000 ரூபாயை அடுத்து நீங்கள் செலுத்தப்படும் ஈஎம்ஐயில் சேர்க்கப்படும். நீங்கள் தனிநபர் கடன் பெற்று 30 ஈஎம்ஐ மீதம் செலுத்த வேண்டியிருந்தால் பழைய ஈஎம்ஐ தொகை உடன் மாதம் 1000 ரூபாய் சேர்ந்து செலுத்த வேண்டும்.
2வது கணக்கு
இது ரொம்பச் சிம்பிள். தற்போது 3 மாதம் ஈஎம்ஐ செலுத்தவில்லை எனில் கடனை முடிக்கக் கூடுதலாக 3 ஈஎம்ஐ செலுத்த வேண்டும்.
உதாரணமாக நீங்கள் உங்கள் கடனை முடிக்க 10 ஈஎம்ஐ செலுத்த வேண்டுமெனில், இந்த 3 மாத சலுகையின் மூலம் 13 மாதம் ஈஎம்ஐ செலுத்த வேண்டி வரும்.
வங்கி முடிவு
இந்தக் கணக்குகளில் வங்கி தரப்பு எதைத் தேர்வு செய்யப்போகிறது என்பது வங்கிகளின் கையில் தான் உள்ளது. இதைத் தேர்வு செய்ய வாடிக்கையாளராகிய நமக்கு உரிமை இல்லை என வங்கித்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியிருந்தாலும் நிறுவனங்களுக்கும், கொரோனாவால் வேலையில்லாமல் சம்பளம் கிடைத்த ஊழியர்களுக்கும் அது நல்ல சலுகை தான்.


Click it and Unblock the Notifications