இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த பிளிப்கார்ட் நிறுவனத்தை ஆஃபர், தள்ளுபடி விற்பனை எனப் பல வழிகளை இந்தியா வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் அமேசான் இழுத்தது, பிளிப்கார்ட் ஆதிக்கத்தைக் குறைந்தது. இதேபோல் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியச் சந்தையில் தனக்கு இருக்கும் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி ஜியோமார்ட் மூலம் ஈகாமர்ஸ் சந்தைக்குள் நுழைந்து அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பதம் பார்த்து வருகிறார்.
ஜியோமார்ட்-ன் வர்த்தக வளர்ச்சி மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கிய ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் முறையற்ற வகையில் நடந்துள்ளது என ஜியோமார்ட் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான அமேசான் சிங்கப்பூரில் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணையில் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான ஒப்பந்தத்திற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே ஜியோமார்ட் வருகையால் வர்த்தகத்தை இழந்து நிற்கும் அமேசானுக்குக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சர் குரூப் பங்குகள் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தடை..
அமேசான் தொடுத்த வழக்கின் விசாரணையில் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் இடையில் நடந்த வர்த்தக ஒப்பந்தத்திற்குத் தற்காலிக தடையும், ஒப்பந்தம் செய்யப்பட்ட 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான டீலில் எவ்விதமான வர்த்தகப் பரிமாற்றங்களையும் செய்யக்கூடாது எனச் சிங்கப்பூர் SIAC அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சர் குருப்-ஐ பெரிய அளவில் பாதித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அமேசானின் வெற்றி ரிலையன்ஸ்-க்கு மிகப்பெரிய பின்னடைவாக விளங்குகிறது. இந்தத் தற்காலிக தடையின் காரணமாகப் பியூச்சர் குரூப்-ன் எந்தொரு வர்த்தகத்தையும் ஜியோமார்ட் அல்லது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தால் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
பங்கு மதிப்பு வீழ்ச்சி
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 2,101.95 ரூபாய்க்கு வர்த்தகம் துவங்கிய நிலையில், இந்தத் தற்காலிக தடை அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் 3.70 சதவீத சரிவில் ஒரு பங்கு விலை 2,034.90 ரூபாயாகச் சரிந்துள்ளது.
பியூச்சர் ரீடைல்
இதேபோல் கிஷோர் பியானியின் பியூச்சர் ரீடைல் பங்குகள் மதிப்பு இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் அதிகப்படியாக 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் 75.00 ரூபாய் விலையில் துவங்கிய பியூச்சர் ரீடைல் வர்த்தக முடிவில் 5.14 சதவீத சரிவுடன் 73.80 ரூபாய் விலைக்குச் சரிந்துள்ளது.
என்ன பிரச்சனை..?
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் இடையிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்துச் செய்யக் கோரி அமேசான்.காம்-இன் தாய் நிறுவனம் அமேசான், சிங்கப்பூரில் வழக்குத் தொடுத்துள்ளது.
பியூச்சர் குரூப் ரீடைல் வர்த்தகத்தில் அமேசான் மறைமுகப் பங்குகளைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்திருந்தது, இந்த ஒப்பந்தத்தை மீறி பியூச்சர் குரூப் வர்த்தகம் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.
SIAC அமைப்பு
பியூச்சர் குரூப்-ல் இருந்து ரிலையன்ஸ் ரீடைல் பெறப்பட்ட சொத்துக்கள் மற்றும் வர்த்தக ஆதாரங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இவ்விரு நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தம் ரத்துச் செய்ய வேண்டும் என அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தில் (SIAC) சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தது.
இந்த வழக்கின் முற்கட்ட விசாரணையில் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்குத் தடை விதித்துள்ளது SIAC அமைப்பு.
வெளிநாட்டு விவகாரம்
Singapore International Arbitration Centre (SIAC) ஒரு லாபமற்ற அமைப்பு, இந்த அமைப்பு வெளிநாட்டு நிறுவனங்கள், தனது சொந்த நாடு இல்லாமல் வெளிநாடுகளில் சந்திக்கும் வர்த்தகப் பரிமாற்ற பிரச்சனைகளை நீதிமன்றங்களைத் தாண்டி சரிசெய்யும் ஒரு முக்கியமான அமைப்பு.
49 சதவீத பங்குகள்
2019ல் அமேசான் நிறுவனம், பியூச்சர் குரூப் குழுமத்தின் கிளை நிறுவனமான பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. இந்த 49 சதவீத பங்குகள் மூலம் அமேசான், பியூச்சர் ரீடைல் வர்த்தகத்தில் மறைமுகமாக 7.3 சதவீத பங்குகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாகப் பொருள்.
இந்தப் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் கீழ் தான் உணவு மற்றும் மளிகை பொருட்களின் வர்த்தகம், பிக் பஜார் மற்றும் ஈசிடே ஆகிய வர்த்தகங்கள் உள்ளது.
10 வருட காலம்
அமேசான் - பியூச்சர் குருப் இடையிலான இந்த 1,500 கோடி ரூபாய் ஒப்பந்தம் மூலம் அடுத்த 3 முதல் 10 வருடத்தில் அமேசான் பியூச்சர் ரீடைல் வர்த்தகத்தைக் கைப்பற்ற முடியும். ஆனால் வர்த்தகப் போட்டியின் காரணமாகவும், பியூச்சர் குருப் தலைவர் கிஷோர் பியானி எதிர்கொண்டு வரும் அதிகளவிலான கடன் பிரச்சனை காரணமாக அவசர அவசரமாகப் பங்குகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பியூச்சர் குரூப் வர்த்தக அமேசான் வாங்க முயற்சித்துக் கொண்டு இருக்கும் வேளையில் ரிலையன்ஸ் இந்நிறுவன வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது. அமேசானுக்கு முன்பாக ரிலையன்ஸ் முந்திக் கொண்டதது தான் இப்போது பிரச்சனை.