இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாகப் பல முன்னணி நிறுவனங்களின் வர்த்தகம் பாதித்து நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொருளாதாரச் சரிவை ஈடுசெய்யும் வகையில் ரிசர்வ் வங்கி சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை Targeted Long Term Repo Operations (TLTRO) கீழ் குறைந்த வட்டிக்குக் கடன் அளிக்க முடிவு செய்வதாக மார்ச் 27ஆம் தேதி அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ் தான் ரிசர்வ் வங்கி அறிவித்த மொத்த தொகையில் சுமார் 10 சதவீத தொகையை முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ரிசர்வ் வங்கி
கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் சாமானிய மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலையை உணர்ந்து மார்ச் 27ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைந்தது. இதோடு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கச் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைக் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுப்பதாக அறிவித்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 1 லட்சம் கோடி ரூபாய் நிதியில் சுமார் 10,000 கோடி ரூபாய் அதாவது 10 சதவீத தொகையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பத்திர விற்பனை மூலம் பெற வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது கொடுக்கப்படும் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி அனைத்தும் பெரும் தனியார் நிறுவனங்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் தான் செல்லும்.
முக்கிய நிறுவனங்கள்
தற்போது ஹெச்டிஎப்சி வங்கி சுமார் 7.20 சதவீத வட்டியில் 2,500 கோடி ரூபாயும், அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப், பார்த் பெட்ரோலியம் கார்ப் மற்றும் NHB ஆகிய நிறுவனங்கள் இணைந்து சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை பெற்றுள்ளது.
வட்டி வித்தியாசம்
வங்கிகள் தற்போது Targeted Long Term Repo Operations (TLTRO) கீழ் கொடுக்கப்படும் கடனுக்கான வட்டி பெரும் நிறுவனங்களுக்கும், சிறு நிறுவனங்களுக்குமான வட்டி 0.80 சதவீதம் முதல் 0.90 சதவீதம் வரையில் மாறுபடுவதாகப் பவர் பைனான்ஸ் கார்ப் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கிகள் இத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் கடனுக்கான வட்டி குறைந்தபட்சம் ரெப்போ விகிதத்திற்கு 2.60 சதவீதம் அதிகமாகத் தான் உள்ளது.
பிரச்சனை
தற்போது கொடுக்கப்படும் நிதி அனைத்தும் பெரு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அரசு நிறுவனங்களுக்குச் சொல்லும் காரணத்தால், நடுத்தரக் கார்ப்ரேட் நிறுவனங்களும், NBFCயும் போதுமான நிதி இல்லாமலும், கூடுதல் வட்டிக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.