ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை பார்க்கும், ஊழியர்களுக்கு, ஒரு விருப்ப ஓய்வுத் திட்டத்தை (VRS) அறிவிக்க இருப்பதாக பிசினஸ் லைன் வலை தளத்தில், கடந்த 02 செப்டம்பர் 2020 அன்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
எஸ்பிஐ அறிவிக்க இருக்கும் விருப்ப ஓய்வு திட்டத்தின் பெயர் 'Second Innings Tap - Voluntary Retirement Scheme - 2020 (SITVRS-2020)' எனச் சொல்லப்பட்டு இருந்தது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 25 வருடப் பணியை நிறைவு செய்தவர்கள், 55 வயதானவர்கள், தொடர்ந்து 3 முறை பணி உயர்வு வாய்ப்புகளை தவற விட்டவர்கள்... என சில அடிப்படை விஷயங்களை வைத்து தான் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்கிறார்களாம். இதில் புதிதாக எஸ்பிஐ உடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்களும் அடக்கம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
30,190 பேர்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், கடந்த மார்ச் 2020 நிலவரப்படி, மொத்தம் 2,49,448 பேர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ், 11,565 அதிகாரிகள் மற்றும் 18,625 பணியாளர்கள் என மொத்தம் 30,190 ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெறலாம் என்கிறது பிசினஸ் லைன். இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தைப் பற்றிய தன் கருத்தை, முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இது கொடூரமானது
"எஸ்பிஐ வங்கி, பொருளாதார நடவடிக்கையாக, ஒரு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன.
சாதாரண சூழலில், இதைப் பற்றி விவாதிக்கலாம். இது போன்ற அசாதாரண சூழலில், பொருளாதாரம் சீர்குலைந்து இருக்கும் இந்த நேரத்தில், வேலை வாய்ப்புகள் இல்லாத நேரத்தில், இது கொடூரமானது" எனப் பதிவிட்டு இருக்கிறார் ப சிதம்பரம்.
பெரிய வங்கிக்கே இந்த நிலையா?
"இந்தியாவின் மிகப் பெரிய வங்கியே, தன் ஊழியர்களை நீக்க வேண்டும் என்றால், மற்ற பெரிய கம்பெனிகள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என யோசித்துப் பாருங்கள்.
இந்த திட்டம் பார்ப்பதற்கு விருப்ப ஓய்வுத் திட்டம் போலத் தோன்றுகிறது, ஆனால், வங்கி வெளியேற்ற விரும்பும் ஊழியர்கள் மீது ஒரு விதமான அழுத்தம் கொடுக்கப்படும் என்பதை நாம் அறிவோம்" என ட்விட் செய்து இருக்கிறார் ப சிதம்பரம்.
எதற்கு புதிய திட்டம்
தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகள், உண்மையான விருப்ப ஓய்வைக் கொடுக்கிறது என்றால், எதற்கு இந்த புதிய திட்டம்? ஏன் 30,190 எனக் குறிப்பிட்டு ஒரு எண்ணைச் சொல்லி இருக்கிறீர்கள்? என மத்திய அரசைப் பார்த்து கேள்வி எழுப்பி இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம்.