தற்போதைய தொழில்நுட்ப உலகில் பணம் சம்பாதிப்பதை விட சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.
வங்கியில் இருந்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கும் நிலையில் ஃபிஷ்ஷிங் உள்பட பல்வேறு முறைகளில் நமது வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதுமே காலியாகி விடும் அபாயம் உள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை ரிசர்வ் வங்கி அவ்வப்போது ஏற்படுத்தி வந்த போதிலும் தினந்தோறும் ஆன்லைன் மூலம் மோசடி செய்வதால் பலர் தங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை இழந்து வருகின்றனர்.
சீனியர் சிட்டிசன்
நாக்பூரை சேர்ந்த சீனியர் சிட்டிசன் ஒருவர் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த 2.20 லட்சம் ரூபாயை இழந்து உள்ள தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. நாக்பூர் பகுதியை சேர்ந்த 62 வயது நபர் நீலம் சிங். இவருக்கு ரிசர்வ் வங்கி அதிகாரி பேசுவதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசியவர் நீலம்சிங் அவர்களுக்கு 7250 ரூபாய் பரிசு ஒன்று கிடைத்து இருப்பதாகவும் அந்த பரிசை பெறுவதற்கு அவர் தாங்கள் அனுப்பிய இணைப்பை கிளிக் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இணைப்பு
இவ்வாறு அனுப்பப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என ரிசர்வ் வங்கி உள்பட பல வங்கிகள் ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையிலும் பேராசை காரணமாக நீலம் சிங் அந்த இணைப்பை கிளிக் செய்துள்ளார். அடுத்த நிமிடமே அவருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரிசர்வ் வங்கி அதிகாரி என்று பேசிய மர்மநபர் 2.20 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைனில் பரிவர்த்தனை செய்துள்ளதாக தெரிகிறது.
காவல்துறையில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த நீலம் சிங் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம். தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய சட்டங்களின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஆசைவார்த்தை
ஃபிஷ்ஷிங் என்று கூறப்படும் மர்ம நபர்கள் அனுப்பும் இணைப்பை கிளிக் செய்தால் நமது வங்கி கணக்கில் உள்ள அத்தனை பணத்தையும் திருடி கொள்ளும் மோசடி இந்தியாவில் பெருவாரியாக நடைபெற்று வருகிறது. இதற்கு மோசடியாளர்கள் பயன்படுத்தும் ஒரே டெக்னிக் ஆசைவார்த்தை கூறுவதுதான்.
ரிசர்வ் வங்கி
உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என்றும் உங்கள் கணக்கிற்கு சிறப்பு பரிசு கிடைத்துள்ளது என்று ஆசை வார்த்தை கூறி ஃபிஷ்ஷிங் மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுபோன்ற எந்த பரிசு குறித்த அறிவிப்பையும் வங்கி தங்களது வாடிக்கையாளருக்கு போன் செய்து சொல்ல வாய்ப்பே இல்லை.
விழிப்புணர்வு
இந்தியாவில் பெரும்பாலான ஆன்லைன் திருட்டு ஃபிஷ்ஷிங் வழியாக தான் நடக்கிறது என்றும் இதனால் ஒவ்வொரு நாளும் தங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை பலர் இழந்து வருகிறார்கள் என்றும், ஃபிஷ்ஷிங் குறித்த புகார்கள் மட்டுமே காவல்துறையில் அதிகம் பதிவு செய்யப்பட்டு வருகிறது என வங்கி மோசடி குறித்த புள்ளிவிவரம் கூறுகின்றது. எனவே ஃபிஷ்ஷிங் உள்பட ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் வளர்த்து கொண்டால் மட்டுமே அவர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலை உள்ளது.