மும்பை: தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பங்கு சந்தைகள் இன்றும் வீழ்ச்சி கண்டுள்ளன. அதிலும் வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் சுமார் 1,119 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டு 38,626 ஆக வர்த்தகமாகி வருகிறது.
இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 335 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,297 ஆக வர்த்தகமாகி வருகிறது.
இது இப்படி எனில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 71.97 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
முதலீட்டாளர்கள் கடந்த 6 டிரேடிங் செசன்களில் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஏன் என்ன காரணம்? இந்த அளவுக்கு படு வேகமாக வீழ்ச்சி கண்டு வர என்று கேட்கிறீர்களா? சீனாவின் தோற்றுவிப்பான கொரோனாவால் நாளுக்கு நாள் உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில், இன்னும் கூட சீனாவில் பெரும்பாலான நகரங்களில் தொழில் சாலைகளும், மற்ற உற்பத்தி ஆலைகள், அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இது இப்படி எனில் தொழில் சாலைகள் தொடங்கப்பட்டிருந்தாலும், போதிய ஆள் இல்லை என்றும், இதனால் சீனாவின் இன்றளவிலும் பெரும்பாலான வர்த்தகம் முடங்கி போயுள்ளதாக கூறப்படுகிறது. ஆக இதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன.
ஏனெனில் கணிக்க முடியாத அளவில் உள்ள பொருளாதார வீழ்ச்சியால், தங்கள் முதலீடுகள் பாதிக்கப்படுமே என்ற பயத்திலேயே ஒருபுறம் முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளில் முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். மறுபுறம் செய்த முதலீடுகளையும் வெளியே எடுத்து வருகின்றனர். இதன் எதிரொலி இந்திய சந்தைகளிலும் காணப்படுகிறது.
குறிப்பாக இந்திய பங்கு சந்தையில் உள்ள அனைத்து இண்டெக்ஸ்களின் குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. அதிலும் ஆட்டோமொபைல் துறை குறியீடு, மெட்டல் துறை குறியீடு, வங்கி துறை குறியீடு படு வீழ்ச்சி கண்டுள்ளன. எனினும் மொத்த குறியீடுகளும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சொல்லவேண்டுமானால் இந்தியாவில் சுற்றுலா துறை, ஆட்டோமொபைல் துறை, உலோகங்கள் துறை, ஸ்மார்ட்போன் உற்பத்தி என பல துறைகளும் நிச்சயம் வீழ்ச்சி காணக்கூடும் என்ற நிலை நிலவி வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறைகள் வீழ்ச்சி கண்டால், அது பொருளாதாரத்திலும் வீழ்ச்சி காணலாம் என்பதால் ரூபாய் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது.
இந்த நிலையில் பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், வேதாந்தா, ஜே.எஸ்.டபள்யூ உள்ளிட்ட பங்குகள் பலத்த வீழ்ச்சி கண்டுள்ளன.