உலகின் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோத்பி நிறுவனம் அரிய மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விடுவதில் மிகவும் பிரபலமானது. லாக்டவுன் காலத்தில் பல பொருட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து பல மில்லியன் டாலர்களை கமிஷனாக மட்டுமே பெற்றுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு அரிய வகை வைரத்தை சோத்பி நிறுவனம் ஏலத்தில் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்துள்ளது. இதை வாங்கியது யார், எப்படி வாங்கப்பட்டது என்பது தான் தற்போது மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது.
கருப்பு வைரம்
பொதுவாக வைரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வெள்ளை நிற வைரம் தான், ஆனால் வைரங்கள் பொதுவாகவே பல நிறத்தில் இருப்பது இயல்பு, ஆனால் கருப்பு நிறத்தில் அதிலும் பெரிய வடிவிலான வைரங்கள் கிடைப்பது மிகவும் அறிதான ஒன்று. அப்படிப்பட்ட ஒரு வைரம் தான் தற்போது சோத்பி நிறுவனத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
555.55 கேரட் தரம்
'The Enigma' என பெயர் வைக்கப்பட்டு கொழுக்கட்டை வடிவில் இருக்கும் இந்த கருப்பு வைரம் சுமார் 555.55 கேரட் தரம் கொண்ட அரிய வகை வைரமாகும். இந்த வைரத்தை ஒரு கிரிப்டோ நிறுவனத்தின் நிறுவனர் வாங்கியுள்ளார்.
32 கோடி ரூபாய்
சோத்பி இந்த கருப்பு வைரத்தை 4,292,322 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 32 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதை pulseX என்னும் கிரிப்டோ நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் ஹார்ட் வாங்கியுள்ளார். இதைப்பற்றி வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அரிய வகை வைரம்
மேலும் 555.55 கேரட் தரம் கொண்ட இந்த அரிய வகை வைரத்தை pulseX ரிச்சர்ட் ஹார்ட் கிரிப்டோகரன்சி வாயிலாக வாங்கியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. சோத்பி நிறுவனம் இந்த விற்பனையில் இடைதரகர் என்பதால் வாங்குபவர் எந்த பேமெண்ட்-ஐ ஏற்றுக்கொண்டாலும் சரி, எந்த பிரச்சனையும் இல்லை.
ஸ்பெஷலான வைரம்
இந்த குறிப்பிட்ட வகை கருப்பு வைரமானது இயற்கை இரசாயன நீராவி படிவுகளை உருவாக்கும் விண்கல் தாக்கங்களிலிருந்தோ அல்லது வேற்று கிரக தோற்றத்தில் இருந்தோ உருவாக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. இதனாலேயே இது மிகவும் ஸ்பெஷலான வைரமாக உள்ளது.