69 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பியுள்ள ஏர் இந்தியா நிறுவனம், முறைப்படி டாடாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியா விமானங்களின் பயணத்தின் போது நிர்வாக மாற்றம் தொடர்பான தகவல் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
இது குறித்து விமானத்தில், அன்பான பயணிகளுக்கு, நான் உங்கள் விமானி பேசுகிறேன். வரலாற்று சிறப்பு மிக்க பயணத்திற்கு உங்களை வரவேற்கிறோம். 69 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடா வசம் வந்துள்ளது.
ஒவ்வொரு ஏர் இந்திய விமானத்திலும் புதுப்பிக்கப்பட்ட சிறப்பான சேவையை உங்களுக்கு அளிக்க காத்திருக்கிறோம். ஏர் இந்தியாவின் எதிர்காலத்திற்கு உங்களை வரவேற்கிறோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல சிக்கல்கள்
ஏர் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு விடிவுகாலம் வந்து விட்டது என்பது சந்தோஷமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், ஏர் இந்தியாவின் இந்த புதிய பயணத்தின் மத்தியில், சில பிரச்சனைகளும் காத்துக் கொண்டுள்ளன. ஏனெனில் பழைய விமானங்கள், பழைய கேபின்கள், மனிதவள பிரச்சனைகள் போன்ற சிக்கல்களால் நிறைந்ததாக இருக்கும்.
பெரும் போட்டியாளர்
எனினும் சர்வதேச அளவில் ஏர் இந்தியா விமான நிறுவனம் ஒரு போட்டியாளராக மாறலாம். இது சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ஒரு கடும் போட்டியாளராக மாறக்கூடும் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
தற்போதைய நிலையில் சர்வதேச விமானங்களில் ஏர் இந்தியா மிகப் பெரிய நிறுவனமாகும். எனினும் சர்வதேச விமான நிறுவனங்கள் பெரிய சந்தை பங்கை கொண்டுள்ளன.
கடினமான பணி
ஆக ஒரு மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க ஏர் இந்தியாவை மீட்டெடுப்பது மிக கடினமான பணியாக இருக்கும். அப்படி ஏர் இந்தியாவினை பழையபடி மீட்டெடுத்து விட்டால் ஏர் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும். அதற்கு டாடா கடினமான பாதைகளை கடக்க வேண்டியுள்ளது. இது சவலானதாக தான் இருக்கும்.
மாற்றங்கள்
ஏர் இந்தியா நிறுவனம் டாடா வசம் சென்றுள்ள நிலையில் முதல் கட்டமாக, பயணத்தின் போது அளிக்கப்படும் உணவுகளில் புதிய மெனுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் விமான சேவையில் பொருளாதார பிரிவில் பயணிக்கும் அசைவ உணவு வழங்கப்படுகின்றது. இனி உணவு பட்டியலில் அசைவ உணவும் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல புதிய மாற்றங்கள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.