பிஸ்லெரி நிறுவனம் இந்தியாவில் மிக பிரபலமான குடிநீர் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தினை டாடா நுகர்வோர் தயாரிப்பு நிறுவனம் 7000 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய மக்கள் மத்தியில் மிக விருப்பமான தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட் மற்றும் லிம்கா போன்ற குளிர்பான பிராண்டுகளை கோகோ கோலா நிறுவனத்திடம் விற்பனை செய்த நிறுவனம், தற்போது பிஸ்லெரியையும் டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் படி 6000 - 7000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னணி விற்பனையாளர்
டாடா மற்றும் பிஸ்லெரி இடையேயான ஒப்பந்தத்தின் மத்தியில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தற்போதுள்ள நிர்வாக குழுவே நிறுவனத்தை நிர்வகிக்கும் என தெரிவித்துள்ளது. பேக்கேஜ்டு வாட்டர் நிறுவனமான பிஸ்லெரி, இந்திய சந்தையில் பல வருடங்களாக முன்னணியில் இருந்து வருகின்றது.
ஏன் விற்பனை? காரணம்?
பிஸ்லெரி இண்டர் நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகியாக ரமேஷ் செளஹான் உள்ளார். இவரது வணிகத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாரிசுகள் யாரும் இல்லாததால், இந்த நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. டாடா பிஸ்லெரி இடையேயான ஒப்பந்தம் 2 ஆண்டுகளாக பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.
ஏன் டாடாவுக்கு விற்பனை?
டாடா குழுமம் கையகப்படுத்தினால், பிஸ்லெரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனினும் பிஸ்லெரியை விற்பனை செய்வது என்ற முடிவு என்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பலரும் இந்த நிறுவனத்தினை வாங்க முன் வந்தாலும், பிஸ்லெரியை டாடா நிர்வாகம் சிறப்பாக நிர்வாகம் செய்யும். இது பிஸ்லெரி வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கும் என்றும் செளஹான் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டத்திற்கு செல்லும்
டாடா குழுமம் ஏற்கனவே ஹிமாலயன் பெயரில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள், டாடா காப்பர் பிளஸ் மற்றும் டாடா குளோகோபிளஸ் என்ற பெயரில் விற்பனையை செய்து வருகின்றது. டாடா குழுமம் பிஸ்லெரியை கையகப்படுத்தும்பட்சத்தில், அதன் வணிகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இது பயனுள்ளதாக அமையும்.
பிஸ்லெரியின் திறன்
பிஸ்லெரி 1965ல் இத்தாலியில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1969ம் ஆண்டு அதனை செளஹான் வாங்கினார். தற்போது இந்த நிறுவனம் தண்ணீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட 122 ஆலைகளை இயக்கி வருகின்றது. இதில் 10க்கும் மேற்பட்ட ஆலைகள் பிஸ்லெரிக்கு சொந்தமானது. உலகம் முழுக்க பிஸ்லெரிக்கு 4500 சப்ளையர்கள் உள்ளனர். இப்படி பல வகையிலும் வளர்ச்சி பாதையில் இருக்கும் ஒரு வணிகத்தினை வாங்குவது மேற்கொண்டு டாடாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.
பங்கு விலை நிலவரம்
இந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், டாடா கன்சியூமர் பங்கின் விலையானது 3% மேலாக ஏற்றம் கண்டு, 794 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.
இந்தியாவில் பாட்டில் தண்ணீர் விற்பனை மதிப்பானது 19,315 கோடி ரூபாயாகும். இதன் சி ஏ சி ஆர் விகிதமானது 13.25% ஆக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.