நாட்டில் எரிபொருள் விலையானது அனுதினமும் உச்சம் தொட்டு வரும் நிலையில், மின்சார வாகனங்களுக்கான தேவையானது கூடிக் கொண்டே வருகின்றது.
இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது மின்சார வாகன சந்தையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்ல, அண்டை நாட்டு நிறுவனங்களும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் பல நிறுவனங்களும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
டாடா பவர் சார்ஜிங் ஸ்டேஷன்
அந்த வகையில் தற்போது டாடா பவர் நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதற்காக பணியை விரைவில் முடிக்கவும் டாடா பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அண்டை நாடுகளில் மின்சார வாகனங்களின் பயன்பாடானது அதிகம் இருந்தாலும், இந்தியாவில் இன்னும் மின்சார வாகனங்களுக்கான பயன்பாடானது அவ்வளவாக அதிகரிக்கவில்லை எனலாம்.
சார்ஜ் ஏற்றும் மையங்கள்
இதற்கிடையில் மின்சார வாகன சந்தையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள, இந்திய நிறுவனங்கள் பலவும் முயற்சி எடுத்து வருகின்றன. அந்த வகையில் டாடா குழுமமும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. இந்த நிலையில் தான் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் 1000 மையங்களை அமைக்க டாடா பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள்
பொதுவாக வாகன ஓட்டிகள் மத்தியில் பெட்ரோல் வண்டிகளுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் உள்ளன என்ற உணர்வு இருந்தாலும், சார்ஜிங் மையங்கள் வசதிகள் குறைவாக உள்ளது தயக்கத்தினை ஏற்படுத்துகிறது. இதனால் தான் இன்றைய அளவிலும் மின்சார வாகனங்கள் பெரியளவில் இந்தியாவில் வளர்ச்சி காணவில்லை. ஆக இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் முன்னர், சார்ஜ் ஏற்றும் மையங்களை, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து வருகின்றது.
மின்சார வாகன சந்தை
ஆக அந்த குறையை போக்கும் விதமாகத் தான் டாடா பவர் நிறுவனம் இந்தியா முழுவதும் 1,000 சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைத்துள்ளது. . இதன் மூலம் மின்சார வாகன சந்தையில் புதிய சரித்திரம் படைக்க டாடா குழுமம் முயன்று வருகின்றது. இதன் மூலம் எளிதில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயல்கிறது.
சார்ஜிங் ஸ்டேஷன்
டாடா பவர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இனி அலுவலக வளாகங்கள், மால்கள், சில்லறை வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் சார்ஜிங் செய்து கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த சார்ஜிங் மையங்கள் கிட்டதட்ட 180 நகரங்களில் 1,000 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மெகா திட்டம்
மேலும் 10,000 வீடுகளில் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையம் உள்ளது. இதுவும் வாகன உரிமையாளர்களுக்கு மிக வசதியாக உள்ளது. இதற்கிடையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 சார்ஜிங் மையங்களை அமைக்க டாடா பவர் திட்டமிட்டுள்ளது. இது நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா பவர் பங்கு விலை
டாடா பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது, NSEயில் 5.06% அதிகரித்து, 224.35 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்றைய உச்ச விலை 232.30 ரூபாயாகும். இதே குறைந்த விலை 214.25 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-யில் 4.99% அதிகரித்து, 224.35 ரூபாயாக அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை தற்போது வரையில் 232.40 ரூபாயாகும். குறைந்த விலை 214.40 ரூபாயாகும்.