இந்தியாவின் மிகப்பெரிய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகள் மூலம் முதலீட்டாளர்களுக்குப் போதுமான நம்பிக்கை அளிக்காத காரணத்தால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் 80 ரூபாய்க்கு மேல் சரிந்தது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், டிசிஎஸ் நிறுவனத்திற்குப் பெரும் நன்மையை அளித்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது 70 சதவீத ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அப்போ மற்ற ஊழியர்களின் நிலை என்ன..?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
இந்திய ஐடி துறையில் வருவாய் அடிப்படையில் பல ஆண்டுகளாக முதல் இடத்திலேயே இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் திங்கட்கிழமை மாலை காலாண்டு முடிவுகளை வெளியிட்டு இருக்கும் நிலையில், டிசம்பர் 31 வரையில் முடிந்த காலாண்டுக்கான ஊழியர்களின் வேரியபிள் பே தொகையைக் குறித்து இன்று அறிவித்துள்ளது.
70 சதவீத ஊழியர்கள்
டிசிஎஸ் நிறுவனத்தின் 70 சதவீத ஊழியர்களுக்கு டிசம்பர் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகையை 100 சதவீதம் வரையில் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் டிசிஎஸ் ஊழியர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர்.
வேரியபிள் பே
இதேவேளையில் மீதமுள்ள 30 சதவீத உயர் அதிகாரிகளின் வேரியபிள் பே அவர்களின் வேலை செய்யும் திறன் அடிப்படையில் இத்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் உயர் அதிகாரிகளின் செயல்திறன் வியக்க வைக்கும் அளவில் இருந்தால் 100 சதவீதத்திற்கும் அதிகமாகக் கூடக் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
டிசிஎஸ், இன்போசிஸ்
டிசிஎஸ் நிறுவனம் 2023 ஆம் நிதியாண்டில் 2வது காலாண்டில் தனது ஊழியர்களுக்கு ஆப்ரேட்டிங் மார்ஜின் பிரச்சனை இருந்த காலத்திலும் 100 சதவீத வேரியபிள் பே கொடுத்தது, ஆனால் இதே காலகட்டத்தில் இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு 65 சதவீத வேரியபிள் பே மட்டுமே கொடுத்தது.
மிலிந்த் லக்கார்ட்
இந்த நிலையில் இன்று டிசிஸ் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவரான மிலிந்த் லக்கார்ட் டிசிஎஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் C2 பிரிவில் வரையில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 100 சதவீத வேரியபிள் பே தொகையும், C3A பிரிவு மற்றும் அதற்கு மேல் இருக்கும் ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறன் மற்றும் வர்த்தகப் பிரிவின் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் போனஸ் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
C3 பிரிவு
C3 பிரிவுக்கு மேல் assistant consultant, associate consultant, மற்றும் consultant பிரிவில் இருக்கும் உயர் அதிகாரிகளாகும்.
ஊழியர்கள் எண்ணிக்கை
டிசிஎஸ் தனது காலாண்டு முடிவில் ஊழியர்கள் எண்ணிக்கை 30 மாதங்களுக்குப் பின்பு குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் காலாண்டில், அதன் முந்தைய காலாண்டை ஒப்பிடுகையில் 2,197 பேர் குறைவாக உள்ளனர்.
6,13,974 ஊழியர்கள்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வெளியிட்ட டிசம்பர் காலாண்டு முடிவுகள் படி இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் 6,16,171ல் இருந்து 6,13,974 ஆகக் குறைந்துள்ளது.