ஸ்விக்கி உள்பட ஆன்லைன் உணவு நிறுவனங்களில் ஒரு உணவு பொருளை ஆர்டர் செய்தால் அந்த உணவு குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்றுதான் அனைத்து வாடிக்கையாளர்களும் எதிர்பார்ப்பார்கள்.
ஒரு சில டெலிவரிமேன்கள் தாமதமாக உணவு கொண்டு வந்தால் அவர்களுக்கு சரியான டோஸ் கிடைக்கும் என்பதும் சிலர் உணவை கேன்சல் செய்து விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த ஒருவர் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்த நிலையில் டெலிவரிமேன் தாமதமாக உணவு கொண்டு வந்தபோது நடந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார். இந்த பதிவை படித்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
ஸ்விக்கியில் ஆர்டர்
பெங்களூரைச் சேர்ந்த லிங்க்ட்-இன் பயனாளர் ரோகித் குமார் சிங் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் தான் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தென்றல் வீசும் பெங்களூரில் ஒரு நாள் உணவு சமைக்க சோம்பேறித்தனமாக இருந்ததால் உணவை ஆர்டர் செய்தேன். அந்த உணவை உடனடியாக கொண்டு வரும்படி டெலிவரிமேனுக்கு போன் செய்து கூறினேன். அவரும் உடனடியாக கொண்டு வருவார் என்று நான் நம்பி இருந்தேன்.
தாமதமான உணவு
ஆனால் குறித்த நேரத்திற்கு மேல் டெலிவரி தாமதமானதை அடுத்து மீண்டும் நான் டெலிவரிமேனுக்கு கால் செய்து எப்போது உணவு வரும் என்று கேட்டேன். அதற்கு மறுபுறம் 'உடனே வந்துவிடும் சார்' என்று பதில் கிடைத்தது .அதன் பின் சில நிமிடங்கள் கடந்த பிறகும் பின்னரும் உணவு வரவில்லை என்பதால் மீண்டும் நான் தொலைபேசியில் அழைத்து, 'சீக்கிரம் வாருங்கள், நான் பட்டினியாக இருக்கிறேன்' என்று கூறினேன்.
உணவு டெலிவரி
அடுத்த பத்து நிமிடங்களில் எனது வீட்டின் காலிங் பெல் அடித்தது. பொறுமை இழந்த நான் அந்த ஸ்விக்கி டெலிவரிமேனை திட்ட வேண்டும் என்றுதான் கதவை வேகமாக திறந்தேன். ஆனால் அவரை பார்த்ததும் ஒரு நிமிடம் நான் திகைத்து போய் நின்றேன். கதவை திறந்ததும் அந்த நபர் என்னை பார்த்து அன்பாக புன்னகைத்து, 'உங்கள் ஆர்டர் இதோ' என்று கூறினார்.
ஸ்விக்கி டெலிவரிமேன்
40 வயது என்ற நடுத்தர வயதுடைய அவர் சிறிது நரைத்த முடியுடன், கையில் ஊன்றுகோலுடன் தன்னை சமப்படுத்திக் கொள்ள முயற்சித்து கொண்டிருந்தார். அவரை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இருப்பினும் அவர் என்னை பார்த்து புன்னகைத்து 'உங்கள் ஆர்டரை கொண்டு வந்து விட்டேன் சார்' என்று அவர் கூறியபோது ஒரு நொடி நான் உணர்ச்சியற்று இருந்தேன்.
குடும்ப சூழ்நிலை
என்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து நான் அதிர்ச்சி அடைந்து உணவை வாங்க கூட மறந்து அப்படியே உட்கார்ந்து விட்டேன். அதன் பின் அந்த நபரிடம் பேச்சுக் கொடுத்து அவரை பற்றி விசாரித்த போது அவரது பெயர் கிருஷ்ணப்பா ரத்தோட் என்றும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஓட்டலில் வேலை செய்து கொண்டு இருந்த அவர், வேலையை இழந்ததாகவும் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி
தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தற்போது ஸ்விக்கி டெலிவரிமேன் வேலை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அவர் தனது குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கும் அவரது உறுதியை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன்' என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
நெட்டிசன்கள்
இந்தப் பதிவிற்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ் கிடைத்துள்ளது என்றும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சில நெட்டிசன்கள் தாங்கள் அந்த நபரை சந்திக்க உள்ளதாகவும் அவரது வாழ்க்கை உண்மையில் அனைவருக்கும் உத்வேகம் அளித்ததாகவும் கமெண்ட் செய்துள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.