சமீப காலங்களாக ஆண்கள் மட்டும் அல்ல, பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பலருக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கான வழிமுறையும், முதலீடும் இருக்காது. பலர் வழிமுறைகள் தெரிந்தும் பணமில்லாமல் திண்டாடிக் கொண்டு இருப்பர். குறிப்பாக பெண்கள் மிக கஷ்டப்படும் நிலையே உள்ளது.
ஏனெனில் ஒரு கணவன் தொழில் செய்ய போகிறார் என்றால், மனைவி தனது நகைகளை , பணம் கொடுத்து உதவுகிறார், அதே மனைவி ஒரு வர்த்தகம் செய்கிறார் என்றால், அவருக்கு உதவ பல குடும்பத்தார் பெரிதும் ஈடுபாடு காட்டுவதில்லை.
ஆனால் அப்படிப்பட்ட பெண்களுக்கு அரசின் சில திட்டங்கள் கைகொடுத்துள்ளன. கைகொடுத்தும் வருகின்றன. அதிலும் சர்வதேச மகளிர் தினமான இன்று அதனை பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். குறிப்பாக பெண்கள் வெற்றியாளர்களாக மாற அரசாங்கம் பல திட்டங்களை வழங்கி வருகின்றது. ஆக இவற்றை பெற்று பெண்கள் பயனடையலாம். இது பெண்கள் வணிகத்தில் சிறந்தவர்களாக மட்டும் அல்ல, தற்சார்புடன் இருக்கவும் உதவும்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம். இந்த திட்டம் கடந்த 2016ம் ஆண்டில் ஏப்ரல் 5ம் தேதி அடிப்படை நிலையில் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் பழங்குடியின மக்கள், பெண் தொழில் முனைவோருக்கும், நிறுவனம் சார்ந்த கடன் வசதிகளை கிடைக்க செய்வது இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
யாருக்கெல்லாம் கடன்
இந்த திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படும் நிறுவனம் உற்பத்தி சேவைகள் அல்லது வர்த்தக துறைகளில் இயங்கலாம். தனி நபர் அல்லாத நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தபட்சம் 51% பங்கு பெண் தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டும். இந்த திட்டத்தினை பற்றிய முழுமையான விவரம் பெற https://www.standupmitra.in/ என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். அல்லது வங்கிக் கிளைகளிலும் தெரிந்து கொள்லாம்.
கஷ்டப்படும் பெண்களுக்கு
ஸ்டாண்ட் ஆப் இந்தியா திட்டம், தொழில் துவங்கும் முன் கடன் தேவை என்ற கட்டத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. கூடுதலாக, சரக்கு போக்குவரத்துச் சேவைகள், ஆன்லைன் தளங்கள் மற்றும் இனைய சந்தை இடங்களில் பதிவு செய்தல் போன்ற சேவைகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பொருளாதார ரீதியாகப் பின் தங்கி சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் உள்ள தாழ்த்தப்பட்ட சமுகம் மற்றும் பெண்களுக்கு இந்த ஸ்டாண்ட் அப் இந்தியா பெரும் பயன் அளித்து வருகிறது.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்
சிறு குறு மற்றும் தொழில் முனைவோருக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் தான் முத்ரா யோஜனா. இந்த திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 3 வகைகளில் குறுந்தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்கி வருகிறது.
பெண்களுக்கு கடன்
இதன் படி இந்த திட்டத்தின் மூலம் சிசு திட்டம் மூலமாக 50,000 ரூபாய் வரையிலும், இதே கிஷோர் திட்டத்தின் மூலம் 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் வழங்கப்பட்டு வருகிறது. இதே தருண் திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெறலாம்.
இந்த முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, பெண்களுக்கு 19.04 கோடி கணக்குகள் மூலம் 6.36 லட்சம் கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டுள்ளதை தரவுகள் மூலம் அறிய முடிகிறது.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம்
அரசின் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் வரையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டுக்கு தொடங்கினார். இதில் கணக்கு தொடங்குவதன் மூலம் விபத்து காப்புறுதியால் 1 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடாக பெற முடியும்.
பெண்களின் பங்கு அதிகம்
பொதுவாக இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்ச இருப்பு என்பதை வைத்திருக்க தேவையில்லை. இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
எல்லாவற்றையும் விட இந்த திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கின் மூலம் பணம் இல்லாமலேயே 10,000 ரூபாய் ஓவர் டிராப்ட் பெறும் வசதியும் உள்ளது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெண்கள் ஆகும்.