மும்பை: பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஏதாவது தவறு நடந்தால், அந்த தவறை சுட்டிக் காட்டி சரி செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆடிட்டர்கள்.
ஆனால் இங்கு ஆடிட்டர்கள், ஒரு சில தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து மக்களின் பணத்துடன் விளையாடி இருக்கிறார்கள்.
விளைவு இன்று பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் பணத்தை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
என்ன பிரச்சனை
நேற்று (நவம்பர் 11, 2019, திங்கள்), பொருளாதார குற்றப் பிரிவினர், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் ஆடிட்டர்களான ஜெயேஷ் தீரஜ்லால் சங்கானியா மற்றும் கேத்தன் ப்ரவீன் சந்த் லக்த்வாலா ஆகியோர்களை அழைத்து விசாரித்து இருக்கிறார்கள். விசாரணையில் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை.
தொடர்பு
இந்த விசாரணையில், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் ஸ்டேச்சுட்டரி ஆடிட்டர்களாக இருக்கும் இந்த இருவருக்குமே, ஹெச் டி ஐ எல் நிறுவனத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இன்று இந்த இரண்டு ஆடிட்டர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மேற்படி விசாரணைகள் தொடரும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
கடன் மோசடி
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியிடம் இருந்து சட்ட விரோதமாக சுமார் 4,000 கோடி ரூபாயை இந்த ஹெச் டி ஐ எல் (HDIL - Housing Development and Infrastructure Limited) நிறுவனம் மட்டுமே வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் விளக்கம்
இது ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனம் கட்டிடங்கள் கட்டுமானப் பணிகளைச் செய்வது, குடியிருப்புத் திட்டங்களை கட்டுமானம் செய்வது, ஒப்பந்த அடிப்படையில் பெரிய கட்டுமானப் பணிகளைமுடித்துக் கொடுப்பது, வணிக ரீதியிலான கட்டடங்களை கட்டிக் கொடுப்பது, குடிசை மாற்று வாரிய திட்டங்களை எடுத்து கட்டி கொடுப்பது.. என ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பல வேலைகள் செய்து வருகிறார்கள்.
ஹெச் டி ஐ எல் சிறப்புகள்
குறிப்பாக இந்த நிறுவனம் SEZ என்று அழைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில், கட்டுமானத் திட்டங்களை எடுத்து கட்டிக் கொடுக்கிறார்களாம். சாதாரண மலிவு விலை பட்ஜெட் வீடுகள் தொடங்கி, வில்லாக்கள், பங்களாக்கள், பெரிய பெரிய ஷாப்பிங் மால், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள், பெரிய பெரிய அலுவலகங்கள் வரை எல்லா கட்டுமானப் பணிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனம் இந்திய பங்குச் சந்தைகளில் கூட பட்டியல் இடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ நடவடிக்கை
இவ்வளவு நல்ல நிறுவனத்துக்கு தான் பிஎம்சி வங்கி கடன் கொடுத்து இருக்கிறது பிஎம்சி வங்கி. கடன் கொடுத்ததில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஹெச் டி ஐ எல் நிறுவனம், தான் செலுத்த வேண்டிய தவணைகளை முறையாகச் செலுத்தவில்லை. இப்படி கடன் வாங்கிய ஒருவர் முறையாக தவணைகளைச் செலுத்த வில்லை என்றால், அவர்களை வாராக் கடன் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அடுத்த கட்ட நடவடிக்கை
மேற்கொண்டு, அந்த நிறுவனங்களுக்கும் எந்த ஒரு கடன்களையும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக வட்டியும் போடக் கூடாது. அப்படிச் சேர்க்கவில்லை என்றால் அது ஆர்பிஐ சட்ட விதிமுறைகள் படி மிகப் பெரிய தவறு. அந்த தவறைத் தான் பிஎம்சி வங்கி அசால்ட்டாக செய்து இருக்கிறது.
மோசடி
1. தவணைகளை ஒழுங்காகச் செலுத்தாத போதும் ஹெச் டி ஐ எல் நிறுவனத்தை வாராக் கடனில் சேர்க்கவில்லை.
2. மேற்கொண்டு கடன்களை வேறு கொடுத்தார்கள். இப்போது பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் மொத்த கடனில் சுமார் 4000 கோடி ரூபாயை இந்த ஒரு நிறுவனம் மட்டுமே வாங்கி இருக்கிறது.
விளைவுகள்
அதனால் தான் ஆர்பிஐ உடனடியாக தலையிட்டு டெபாசிட் செய்தவர்கள், ஒரு வங்கிக் கணக்குக்கு 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க வேண்டும் என மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. வாடிக்கையாளருக்கு இப்படி என்றால், வங்கி நிர்வாகம் இனி எக்காரணத்தை முன்னிட்டும்
புதிதாக கடன்களைக் கொடுக்கவோ,
கடன்களை ரெனீவ் செய்யவோ,
புதிதாக முதலீடுகளைச் செய்யவோ,
புதிதாக கடன் வாங்கவோ,
புதிதாக டெபாசிட்களை வாங்கவோ,
தன் சொத்துக்களை விற்கவோ கூடாது.
ஆர்பிஐ அனுமதி
அப்படி எதையாவது செய்ய வேண்டும் என்றால் ஆர்பிஐயிடம் இருந்து எழுத்துப் பூர்வமாக ஒப்புதல் வாங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 6 மாத காலத்துக்கு இருக்கும் எனவும் கத்திக்கு மேல் கத்தியை பிஎம்சி வங்கி மீது தொங்கவிட்டு இருக்கிறது ஆர்பிஐ.
7 பேர் இறப்பு
இந்தியாவில் பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலத்தில் பல தரப்பட்ட மக்களும், கொஞ்சம் அதிக வட்டிக்காக இந்த வங்கியில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த பணத்தையே எடுக்க முடியாமல் 7 பேர் இறந்ததற்குக் கூட, இந்த இரண்டு ஆடிட்டர்கள் நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டதை ஒரு காரணமாகப் பார்க்கலாம்.
பார்ப்போம்
ஆனால் அரசு தரப்பு அப்படிப் பார்க்கவில்லை பிஎம்சி வங்கியின் ஆடிட்டராக இருந்து கொண்டு, ஹெச் டி ஐ எல் நிறுவன கடன் மோசடியை ஏன் முறையாக தெரியப்படுத்தவில்லை என்று தான் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதை நோக்கித் தான் விசாரணையும் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் என்ன மாதிரியான மோசடிகளை எல்லாம் பிஎம்சி வங்கி செய்து இருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.