இந்தியாவின் முன்னணி கேப் சர்வீஸ் நிறுவனங்களில் ஒன்றான உபேர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புது புது வசதிகளை செய்து கொடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உபேர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் கேப் சர்வீஸ் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வாகனங்களை எந்த நகரத்தில் உபெர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
உபெர் நிறுவனம்
உபெர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியாக டெல்லி என்சிஆர் பகுதியில் மின்சார வாகனங்களை கேப் சர்வீசுக்கு பயன்படுத்த உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் தற்போது முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு மட்டும் மின்சாரம் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்றும் உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சார வாகனம்
இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் அந்த வகையில் வரும் மாதங்களில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை கேப் சேவைக்க்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் உபர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்பதிவு - ரத்து
மேலும் மின்சார வாகனங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த விரும்பினால் 30 நாட்களுக்கு முன்பாக பிக்கப் நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் மின்சார வாகனங்களை முன்பதிவு செய்ய செயலியில் புதிய ஆப்சன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகனங்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பயண நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தங்களது பயணத்தை ரத்து செய்யலாம் என்றும் உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள்
மேலும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. உதாரணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் 100 மின்சார வாகனம் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல் மற்ற மாநிலங்களும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 18,000 சார்ஜிங் மையங்களை அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.