யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என கடந்த மார்ச் 05, 2020 அன்று அறிவிப்புகள் வெளியானது.
அதில் இருந்து, யெஸ் பேங்கைப் பற்றியச் செய்திகள், படு ஜோராக வந்து கொண்டு இருக்கிறது.
சரி இந்த மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என ஏதாவது சிக்னல் வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே என வருத்தப்படுகிறீர்களா..?
சிக்னல்கள்
தெளிவாக சிக்னல்கள் வந்தன. ஆனால் நாம் தான், சிக்னல்களைக் கண்டு கொள்ளவில்லை. இந்த சிக்னல்களை அன்றே கவனித்து இருந்தால், யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் உஷாராக தங்கள் டெபாசிட் பணத்தை வெளியே எடுத்து இருக்கலாம். யெஸ் பேங்க் பங்கை வாங்கியவர்களும் தெளிவாக அன்றே ஓரளவுக்கு நல்ல விலைக்கு விற்று இருக்கலாம். சரி அப்படி என்ன சிக்னல்கள் வந்தன என்பதைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.
2015-ல் ஆர்பிஐ நடவடிக்கை
கடந்த 2015-ம் ஆண்டே மத்திய ரிசர்வ் வங்கி, யெஸ் பேங்கின் சொத்துக்களின் தரத்தை பரிசீலித்தது. இதை ஆங்கிலத்தில் Asset Quality Review என்பார்கள். மத்திய ரிசர்வ் வங்கியே ஒரு வங்கியில் இறங்கி வந்து சொத்துக்களின் தரத்தை பரிசீலனை செய்கிறது என்றால் அப்போதே உஷாராகி இருக்கலாம். இது கூட அத்தனை பெரிய சிக்னல் இல்லை என்று சொல்கிறீர்களா..? ஓகே.
வாரா கடன்
கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் ஆர்பிஐ கணக்குப் படி 8,373 கோடி ரூபாய் வாராக் கடன் வந்தது. ஆனால் யெஸ் பேங்கோ வெறும் 2,018 கோடியை மட்டுமே வாராக் கடனாக கணக்கு காட்டியது. ஆக சுமார் 6,355 கோடி ரூபாய் வாரா கடனை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டு பிடித்தது ஆர்பிஐ. இது மிக தெளிவான சிக்னல் இந்த நேரத்தில் நாம் நிச்சயம் உஷாராகி இருக்கலாம்.
பதவி காலம்
யெஸ் பேங்க் இன்று ஓரளவுக்கு பெயர் சொல்லக் கூடிய பெரிய வங்கிகளில் ஒன்றாக வளர்ந்து இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம், அந்த வங்கியின் முன்னாள் தலைவர் ரானா கபூர் தான். அப்படிப்பட்ட ரானா கபூரின் பதவிக் காலத்தை ஜனவரி 31, 2019 உடன் முடித்துக் கொள்ளச் சொன்னது ஆர்பிஐ. 3 ஆண்டுகள் நீட்டிப்பு கேட்ட போது கூட மறுத்தது ஆர்பிஐ. இது அடுத்த பெரிய அலெர்ட்.
பங்கு விற்பனை
அவ்வளவு ஏன், ஒரு கம்பெனியின் புரொமோட்டார், தன் கம்பெனியின் பங்குகளை பெரிய அளவில் விற்கிறார் என்றால் அவருக்கே அந்த கம்பெனி மீது பெரிய நம்பிக்கை இல்லை என்று பொருள்படும். ஒரு காலத்தில் "யெஸ் பேங்க் பங்குகளை நான் விற்கமாட்டேன், அது எப்போதுமே வைரம் போன்றது" என்று சொன்னார் ரானா கபூர். ஆனால் கடந்த நவம்பர் 2019-ல் 900 பங்குகள் போக மீதமுள்ள எல்லா பங்குகளையும் விற்றுவிட்டார். இந்த நேரத்திலாவது ரானா கபூரோடு நாமும் மூட்டை முடுச்சுகளை எடுத்துக் கொண்டு யெஸ் பேங்கில் இருந்து வெளியேறி இருக்க வேண்டுமே.
மிஸ் பண்ணிட்டோமே
ஆனால் நம்மில் பலரும் டெபாசிட் செய்யும் வங்கியைப் பற்றி அதிகம் ஆராய்வதில்லை. பணத்தை போடுவது எடுப்பதோடு நின்று விடுகிறோம். அன்றே இந்த சிக்னல்களை கவனித்து இருந்தால் இன்று நாம் சம்பாதித்த பணத்துக்காக யெஸ் பேங்கிடம் கெஞ்சாமல் இருந்து இருக்கலாம். இனியாவது ஒரு வங்கியில் பணத்தைப் போடும் போது, அந்த வங்கியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். விழிப்புணர்வு பெருகட்டும், தவறுகள் குறையட்டும்.