யெஸ் பேங்க். ஒரு காலத்தில் தனியார் வங்கித் துறையிலேயே மின்னிக் கொண்டு இருந்த, ஒரு நல்ல வங்கி. தற்போது, தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.
அது எல்லாம் பழைய பெருமை, இப்போதைய நிலவரத்துக்கு வருவோம்.
யெஸ் பேங்க் எவ்வளவு பெரிய வங்கி, யெஸ் பேங்கில் என்ன தான் பிரச்சனை, 50,000 ரூபாய் கட்டுப்பாடு என்றால் என்ன, 5 லட்சம் வரை பணம் எடுக்கலாம் என்கிறார்களே அது யாருக்கு, யெஸ் பேங்க் எப்போது பழைய நிலைக்கு வரும், நம் டெபாசிட் பணத்துக்கு பங்கம் வருமா..? என எல்லா கேள்விகளுக்கு பதில் காண்போம்.
எவ்வளவு பெரிய வங்கி
யெஸ் பேங்கை நம்பி பல லட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள் சுமாராக 2.09 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட் செய்து இருக்கிறார்கள். சுமார் 2.25 லட்சம் கோடி கடன் கொடுத்து இருக்கிறார்கள். வாராக் கடன் 17,134 கோடி ரூபாய் இருக்கிறது. 1,337 ஏடிஎம்களும் 1,122 வங்கிக் கிளைகளும் இருக்கின்றன. சுமாராக 28.6 லட்சம் டெபிட் கம் ஏடிஎம் கார்ட்கள் பயன்பாட்டில் இருக்கிறதாம். சுருக்கமாக இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார் வங்கி இது.
என்ன பிரச்சனை
யெஸ் பேங்கில் ஒரு பக்கம் வாரா கடன்கள் அதிகரித்துவிட்டது. மறு பக்கம் புதிதாக கடன் கொடுக்க போதுமான நிதி இல்லை.
புதிதாக கடன் கொடுக்க பணத்தை திரட்டச் சொன்னது ஆர்பிஐ. ஆனால் குறித்த நேரத்தில் யெஸ் பேங்கால் பணத்தை திரட்ட முடியவில்லை. நிறைய டெபாசிட் பணம் தொடர்ந்து வெளியெறிக் கொண்டு இருந்தது. அதனால் தான் 50,000 ரூபாய் மட்டுமே டெபாசிட்டர்கள் பணத்தை எடுக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.
50,000 ரூபாய் மட்டும்
யெஸ் பேங்கில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் 50,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும். இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 03, 2020 வரை தொடருமாம். 50,000-க்கு மேல் பணம் எடுக்க ஆர்பிஐ எழுத்துப் பூர்வமாக அனுமதி கொடுக்க வேண்டும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஸ்பெஷல் கேஸ்களுக்கு 5 லட்சம்
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிப் பிரச்சனையை நினைவில் வைத்துக் கொண்டு, இந்த முறை மத்திய ரிசர்வ் வங்கி ஆறுதலாக ஒரு விஷயத்தைச் செய்து இருக்கிறது. அது தான் 5 லட்சம் ரூபாய் வரைக்குமான வரம்பு. யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாயை எல்லோரும் எடுக்க முடியாது.
யார் எடுக்கலாம்
1. மருத்துவ செலவுகள் இருப்பவர்கள்
2. உயர் கல்விக்கு பணத்தைச் செலவழிக்க இருப்பவர்கள்
3. திருமணம் போன்ற அத்தியாவசியச் செலவுகள்
4. தவிர்க்க முடியாத செலவுகள் போன்றவைகளுக்கு மட்டுமே, யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாயை எடுக்க ஆர்பிஐ அனுமதி வழங்க வாய்ப்பு இருக்கிறதாம். மேலே சொன்ன காரணங்கள், வங்கியில் பணம் போட்டு இருப்பவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
எடுத்துக்காட்டு
உதாரணமாக: ஷியாம் யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் 6 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறார். அவரைச் சார்ந்து இருக்கும் மகன், மகள், மனைவி, பெற்றோர்கள் போன்றவர்களுக்கு மேலே சொன்ன தேவைகளில் ஏதாவது இருந்தால், அதைக் குறிப்பிட்டு 5 லட்சம் ரூபாயைக் கொடுக்கச் சொல்லி ஆர்பிஐ இடம் அனுமதி கேட்கலாம்.
எப்போது பழைய நிலைக்கு வரும்
தற்போது 50,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாடு எப்போது மாறும் என்கிற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. ஆர்பிஐயின் மீட்புத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்திய பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். எஸ்பிஐ வங்கியின் முன்னாள் முதன்மை நிதி அதிகாரி பிரசாந்த் குமாரை, யெஸ் பேங்கை நிர்வகிக்கச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.
பணத்துக்கு பங்கமா
யெஸ் பேங்கை நம்பி தங்கள் பணத்தை டெபாசிட் செய்து இருப்பவர்களை, தைரியமாக இருக்கச் சொல்லி இருக்கிறார் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ். அதோடு யெஸ் பேங்க் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும், டெபாசிட்தாரர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்.
5 லட்சம் கேரண்டி
யெஸ் பேங்க் திவாலாவது எல்லாம் மிக மிக அரிது, அப்படி திவாலாக இந்திய அரசோ, ஆர்பிஐயோ விடாது. ஒருவேளை, யெஸ் பேங்க் திவால் ஆனால் கூட, Deposit Insurance and Credit Guarantee Corporation வழியாக ஐந்து லட்சம் ரூபாய் வரைக்கும் பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளலாம். எனவே டெபாசிட்டர்கள் பயப்படத் தேவை இல்லை.