இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும், கம்பெனிகளில் அதிகம் சந்தை மதிப்பு கொண்ட கம்பெனிகளை ஒன்றன் பின் ஒன்றாக பட்டியல் போட்டால் 3-வது இடம் இந்த HDFC வங்கிக்கு தான்.
அதாவது இந்தியாவின் அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகள் என எல்லாவற்றையும் சேர்த்தால் கூட HDFC வங்கிக்கு தான் சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் இடம்.
சரி ஆதித்யா பூரி விஷயத்துக்கு வருவோம். யார் இந்த மனிதர். இவர் HDFC பங்குகளை விற்றார் என்கிற செய்தியால், HDFC பங்கு விலை தட தடவென இன்று சரிந்து இருக்கிறதே ஏன்? வாருங்கள் பார்ப்போம்.
ஆதித்யா பூரி
உலகின் தலை சிறந்த வங்கிகள் பட்டியலில் HDFC வங்கியும் இடம் பிடித்து இருக்கிறது என்றால், அதற்கு ஆதித்யா பூரியும் ஒரு முக்கிய காரணம். கடந்த 1994-ம் ஆண்டு முதல் இந்த வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி, பட்டயக் கணக்காளரும் கூட. இவர் தலைமையில் HDFC வங்கி சூப்பராக வியாபாரம் செய்தது.
விளைவு
ஆதித்யா பூரி செய்த வியாபாரம் மற்றும் அதன் வழியாக கிடைத்த லாபம் போன்றவைகள், HDFC வங்கியின் பங்கு விலையில் தெளிவாக பிரதிபலித்தன. 1999 ஆண்டுகளில் சுமாராக 6 ரூபாய்க்கு விற்பனை ஆன பங்கு விலை, இன்று 1,079 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக கடந்த 26 ஆண்டுகளாக ஆதித்யா பூரியின் வெற்றிகரமான தலைமை இதற்கு அடித்தளமாக இருந்து இருக்கிறது.
வெளியேற்றம்
ஆர்பிஐ விதிகள் படி, 2020-ம் ஆண்டிலேயே ஆதித்யா பூரியின் பணிக் காலம், HDFC வங்கியில் நிறைவடைகிறது. இந்த காலகட்டத்துக்கு உள்ளேயே, ஆதித்யா பூரி தன் கை வசம் வைத்திருந்த பெரும் பகுதியான HDFC வங்கி பங்குகளை விற்று காசாக எடுத்துக் கொண்டார். சரி பங்கு விவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
ஆதித்யா பூரி பங்குகள் விவரம்
ஆதித்யா பூரி 0.14 % HDFC வங்கி பங்குகளை தன் வசம் வைத்திருந்தார். அதை கடந்த பிப்ரவரி 2020-லேயே சுமாராக 12 லட்சம் பங்குகளை விற்று 156 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டார். அதன் பின் ஜூலை 21 & 23 தேதிகளில் சுமாராக 78 லட்சம் பங்குகளை விற்று 843 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டார்.
எவ்வளவு மிச்சம்
இத்தனை பங்கு விற்பனைகளுக்குப் பிறகு, ஆதித்யா பூரியின் கையில், தற்போது மிச்சம் 0.01% HDFC வங்கி பங்குகள் மட்டுமே வைத்திருக்கிறாராம். மொத்தம் 3.8 லட்சம் HDFC பங்குகள் இருக்குமாம். இதன் மதிப்பு சுமாராக 43 கோடி ரூபாய் வருமாம். பொதுவாக ஒரு கம்பெனியின் உயர் அதிகாரி அல்லது நிர்வாகிகள், அந்த கம்பெனியின் பங்குகளை விற்கும் போது, அந்த கம்பெனியின் பங்கு விலை சரியத் தான் செய்யும்.
3.50 சதவிகிதம் டவுன்
ஆதித்யா பூரி தன் பங்குகளை விற்ற செய்தி பரவியது மற்றும் HDFC வங்கியின் வாகன கடன் தொடர்பாக வெளியாகும் நெகட்டிவ் செய்திகள் போன்றவைகளால், பங்கு விலை இன்று ஒரே நாளில் 3.50% சரிந்து இருக்கிறது. நேற்று 1,119 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்த HDFC வங்கி பங்கு விலை இன்று 1,079 ரூபாய்க்கு நிறைவடைந்து இருக்கிறது.
அடுத்த தலைவர்
HDFC வங்கி போன்ற மிகப் பெரிய நிறுவனத்தை நடத்துவது ஒன்றும் லேசு பட்ட காரியம் இல்லை. அதை வளர்த்து எடுத்த ஆதித்யா பூரியே, தன் பங்குகளை எல்லாம் விற்று வெளியேறுகிறார் என்றால் பங்குச் சந்தையில் ஒரு பதற்றம் நிலவத் தான் செய்யும். இந்த சவால்களை எல்லாம் அடுத்து வரும் தலைவர் தான் சமாளித்து முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வர வேண்டி இருக்கும். அடுத்து யார் தலைவராகப் போகிறார்களோ அந்த வங்கிக்குத் தான் வெளிச்சம்.