கொரோனாவின் 2வது தொற்று அலை இந்தியாவைப் பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில் ஒரு நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் பலர் உயிரிழந்துள்ளனர்.
உண்மையில் இந்தியாவில் ஆக்சிஜன் இல்லையா..? ஆக்சிஜன் கிடைப்பதில் என்ன தான் பிரச்சனை..? உலகின் முன்னணி பொருளாதார நாட்டில் ஏன் இந்தப் பிரச்சனை..?
7,100 டன் அக்சிஜன் தயாரிப்புத் தளம்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் உட்படத் தினமும் 7,100 டன் அக்சிஜன் தயாரிக்கும் தளம் உள்ளது. இது கண்டிப்பாக இந்தியாவில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமானது.
தேவை இரட்டிப்பு
ஏப்ரல் 12ஆம் தேதி நிலவரத்தின் படி இந்தியாவின் மொத்த ஆக்சிஜன் தேவையின் அளவு 3,842 டன், தற்போது தொற்று அளவு அதிகரித்துள்ளதால் தேவையின் அளவு இரட்டிப்பு ஆனாலும் இந்தியாவிடம் போதுமான ஆக்சிஜன் உள்ளது. சரி அப்போ பிரச்சனை என்ன..? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
போக்குவரத்து தான் உண்மையான பிரச்சனை
போக்குவரத்து தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது, இந்தியாவில் பல பகுதிகளில் பெரிய அளவில் தயாரிக்கப்படும் திரவ ஆக்சிஜனை தேவையான மாநிலங்களுக்கும், மருத்துவமனைக்கும் கொண்டு சேர்ப்பது தான் தற்போதைய முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
ஆக்சிஜன் போக்குவரத்து
இதேபோல் திரவ ஆக்சிஜனை எப்படி வேண்டுமானாலும், எதில் வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியுமா என்றால் அதற்குப் பதில் இல்லை. திரவ ஆக்சிஜனை கொண்டு செல்ல அதற்கான ஸ்பெஷலான டிரக் உள்ளது. இந்த ஸ்பெஷலான டிரக்குளின் எண்ணிக்கை குறைவு அது தான் பிரச்சனை.
டெல்லிக்கான ஆக்சிஜன் சப்ளை
உதாரணமாக டெல்லி மருத்துவமனைகளில் தற்போது அதிகளவிலான ஆக்சிஜென் தேவை இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய அருகில் இருக்கும் 7 மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெற்று வருகிறது. இதில் பெரும்பாலானவை சிறிய உற்பத்தி தளங்கள்.
1000 கிலோமீட்டர் பயணம்
டெல்லிக்கு தேவையான ஆக்சிஜனை அளிக்கும் சில உற்பத்தி ஆலைகள் குறைந்தது 1000 கிலோமீட்டர் பயணம் செய்து பெற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறைந்த ஆக்சிஜன் சப்ளை
இதற்கான காலமும், டிரக்குகளின் எண்ணிக்கை கொண்டு அனைத்து மருந்துவமனைக்குளுக்கு ஆக்சிஜனை சேர்ப்பது தான் தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இந்தப் பிரச்சனைகளின் வாயிலாகத் தான் டெல்லிக்கு கிடைக்க வேண்டிய 378 டன் ஆக்சிஜன் அளவில் 177 டன் மட்டுமே கிடைத்துள்ளது.
ஆக்சிஜன் டிரக் கைப்பற்றல்
ஆக்சிஜன் தேவையும் அதிகமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஒருபக்கம் போக்குவரத்தில் சிக்கல், மறுபுறம் மாநில மற்றும் உள்ளூர் அமைப்புகளை ஆக்சிஜன் டிரக்குகளைக் கைப்பற்றித் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை மட்டுமே பெற்று வருவதும் நாட்டின் பல பகுதிகளில் நடக்கிறது என ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விமானம், ரயில் போக்குவரத்து
மேலும் இந்தியாவில் ஆக்சிஜனை தேவையை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பூர்த்தி செய்ய அனைத்து விதமான போக்குவரத்தையும் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாகச் சரக்கு விமானம், சரக்கு ரயில் சேவைகளையும் பயன்படுத்த அனுமதி அளித்து உள்ளது.
20 மாநிலங்கள் அதிகச் சப்ளை
இதேபோல் நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 20 மாநிலங்களுக்குச் சுமார் 6,822 டன் ஆக்சிஜனை மத்திய அரசு பகிர்ந்து அளித்துள்ளது. மேலும் தற்போது நாட்டில் ஸ்டீல் உற்பத்தி ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றிலும் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது.
முன்கூட்டிய திட்டமிடல்
மேலும் உற்பத்தி ஆலைகளுக்குச் செல்லும் அனைத்து ஆக்சிஜன்களையும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதேவேளையில் இந்தியாவில் கொரோனா தொற்றை எண்ணிக்கை முன்கூட்டியே கணித்து ஆக்சிஜன் உற்பத்தியை சில வாரங்களுக்கு முன்பு உயர்த்தி இருந்தால் கூட இந்தப் பிரச்சனையைச் சமாளித்து இருக்க முடியும் எனப் பல தரப்பினர் அரசுகளைக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி டிரக்குகள்
மத்திய ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய ஜெர்மனி நாட்டில் இருந்து சுமார் 23 மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி டிரக்குகளை இறக்குமதி செய்துள்ளது. இது அதிகம் பாதிப்பு நிறைந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனையிலும் அமைக்கப்படுவதன் மூலம் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
டாடா-வின் உதவி
அரசுக்கும் மக்களுக்கும் உதவி செய்யும் வகையில் இந்தியாவின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் ஆக்சிஜன் போக்குவரத்து பிரச்சனையைத் தீர்க்க 24 சிறப்புக் கண்டைனர்களை இறக்குமதி செய்துள்ளது.
ஆர்கன் மற்றும் நைட்ரஜன்
இதேபோல் மத்திய அரசு ஆர்கன் மற்றும் நைட்ரஜன் வாயுவை போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் டிரக்குகளை ஆக்சிஜென் போக்குவரத்து செய்யும் வகையில் மாற்ற உத்தரவிட்டுள்ளது.
இது போதாது..!
ஆனாலும் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வதைப் பார்க்கும் போது ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் போக்குவரத்தைப் பல மடங்கு மேம்படுத்த வேண்டும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.