பெரும்பாலான வங்கிகள் தற்போது வீட்டு கடன், வாகன கடன், பர்சனல் லோன் அளிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து கடனை அளிக்கிறது.
அதுவே வாங்கிய கடனை முடிக்க அதாவது க்ளோஸ் செய்ய சென்றால் அதே வங்கி அதே வாடிக்கையாளர்களுக்கு சிறிய அளவு கூட மதிப்போ மரியாதையோ அளிப்பது இல்லை. இதைத் தான் பொருளாதார வல்லுனர் வ.நாகப்பன் தனது சமீபத்திய ட்வீட்டில் சுட்டிக் காட்டியுள்ளார்
கடன்
இந்தியாவின் இன்றைய பொருளாதார வர்த்தக சூழ்நிலையில் வங்கிகளுக்கும் ரீடைல் கடன்கள் தான் முக்கிய வர்த்தகமாக மாறியுள்ளது. இதனால் கடன் அளிப்பதற்காக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகள் எக்கசக்கம்.
வாடிக்கையாளர் சேவை
கடன் தேவையே இல்லாத போது தினமும் போன் செய்து கடன் வேணுமா சார் என கேட்பதில் துவங்கி கடன் பெற்ற விருப்பம் தெரிவித்தால் வீட்டுக்கே வந்து ஆவணங்களை பெற்றுக்கொண்டு சரி பார்த்து லட்டு மாதிரி பணத்தை வங்கி கணக்கில் போடுவது அல்லது காசோலையாக அளிப்பது வரையில் அனைத்து சேவைகளையும் அளிக்கிறது.
180 டிகிரி
இத்தகையை சேவைகள் தனியார் வங்கிகள் சிறப்பான முறையில் அளிப்பது போல் பொதுத்துறை வங்கிகளும் அளிக்க துவங்கியுள்ளன. ஆனால் கடன் முழுமையாக அடைக்க வரும் போது தனியார் வங்கிகளிலும் சரி, பொதுத்துறை வங்கிகளிலும் சரி, வங்கி அதிகாரிகளும் நடந்துக்கொள்ளும் விதமே வேறு.
வங்கி கிளை
வங்கியில் வாங்கிய கடனை குறிப்பாக வீட்டுக் கடனின் பேலென்ஸ் தொகையை செலுத்த NEFT/RTGS சேவையை பயன்படுத்த முடியாது. அதே போல கடனை அடைக்க எல்லா வங்கி கிளைகளிலும் வசதி கிடையாது. கடனை ப்ரீ க்ளோஸ் செய்ய வேண்டுமானால் அதற்கென்றே ஒதுக்கப்பட்ட பிரத்தியேக வங்கி கிளைக்கு தான் செல்ல வேண்டும்.
அங்கு உட்கார போதுமான சேர்கள் கூட இருப்பது இல்லை. பெரும்பாலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஏதாவது ஒரு ஏரியாவில் தான் இந்த வங்கி கிளை இருக்கும். அங்கும் அரை குறை வெளிச்சத்தில் 2, 3 கவுண்டர்கள் இருக்கும். கடனை அடைக்க வந்தவர் வரிசையில் நின்று முதலில் டோக்கன் பெற்று மீண்டும் நீண்ட வரிசையில் கார்த்திருக்க வேண்டும்.
வங்கி ஊழியர்கள்
அனைத்திற்கும் மேலாக 'இந்த' வங்கி கிளைகளில் இருக்கும் ஊழியர்கள் வேறு ரகம், கடன் வாங்கும் போது வாடிக்கையாளர்களிடம் காட்டிய கவனிப்பு, உபசரிப்புகள் எதுவும் கிடைக்காது. கிட்டத்தட்ட ஒரு மெஷின் மாதிரியே இயங்குவார்கள்.
ப்ரீ க்ளோஸ் சேவை
வங்கி இணைய சேவைகள் வேகமாக வளர்ந்து வரும் வேளையில் ஏன் ப்ரீ க்ளோஸ் சேவைகள் ஆன்லைனில் அளிக்க கூடாது. ஆன்லைனில் க்ளோஸ் செய்த பின் நேரில் வந்து மற்ற ஆவணங்களை வாங்கிச் செல்லுமாறு கூறலாமே. அப்படி செய்தால் பல பிரச்சனைகள் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்வதை தவிர்க்க முடியும். 30 நிமிடத்தில் கடன் பெறும் சேவை இருக்கும் போது 3 மணிநேரம் வங்கியில் காத்திருந்தாலும் கடனை ப்ரீ க்ளோஸ் செய்ய முடியாத நிலை தான் இன்றளவும் உள்ளது.
பணம் மட்டுமே
இவ்விரண்டுக்கும் இருக்கும் ஓரே வித்தியாசம் பணம் மட்டுமே, கடன் வாங்கும் போது வங்கிகளுக்கு லாபம், கடனை மூன்கூட்டியே அடைத்தால் வங்கிகளுக்கு கிடைக்கும் லாபம் குறைகிறது. இவ்வளவு தான். இதற்குத் தான் இந்த மாறுப்பட்ட ட்ரீட்மென்ட். வாடிக்கையாளர் சேவை என்பது கடன் தரும் போது மட்டும் இருக்க கூடாது, ஒழுக்காக முழுக் கடனையும் அடைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகள் அந்த மரியாதையை தர வேண்டும்.