பொதுவாக பட்ஜெட்டில், ஒரு பொருளின் மீது விதிக்கப்பட்டு இருக்கும் சுங்க வரி, கலால் வரி போன்றவைகளை அதிகரித்தாலும், குறைத்தாலும் அந்தப் பொருளின் விலை மாறுபடும்.
இப்போது ஜிஎஸ்டி வந்த பின், பட்ஜெட்டில் பொருட்களின் விலை சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை எதிர்பார்ப்பது பெரிய அளவில் குறைந்து இருக்கிறது.
இதில் ஜிஎஸ்டி என்றால் என்ன, கலால் வரி சுங்க வரி என்றால் என்ன போன்றவைகளை தெரிந்து கொண்டால் ஏன் பட்ஜெட்டில், ஜிஎஸ்டி தொடர்பான அறிவிப்புகள் வருவதில்லை என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எனவே ஜிஎஸ்டியில் இருந்து தொடங்குவோம்.
GST என்றால் என்ன
கடந்த 01 ஜூலை 2017 அன்று ஜிஎஸ்டி என்கிற சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துவிட்டது. இந்தியாவில் இருந்த பல மறைமுக வரிகளுக்கு பதிலாக ஒரே நாடு ஒரே வரியாக கொண்டு வந்தார்கள். இந்தியா முழுக்க ஒரு பொருளை எங்கு வாங்கினாலும் ஒரே வரி தான். உதாரணமாக: ஒரு கிலோ சீஸை (Cheese) இந்தியா முழுக்க எங்கு வாங்கினாலும் அதே 12 சதவிகிதம் தான்.
அதிகாரம்
ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றும் அதிகாரம், தன்னிச்சையாக நிதி அமைச்சகத்துக்கு கிடையாது. ஜிஎஸ்டி கவுன்சிலுக்குத் தான் உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தால் தான் GST வரி விகிதங்களை மாற்ற முடியும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள், கலால் வரி, வாட் வரி, சேவை வரிகளில் இருந்து, ஜிஎஸ்டி-க்குள் வந்துவிட்டதால், பட்ஜெட்டில் பொருட்களின் விலையை பாதிக்கக் கூடிய பெரும்பாலும் வருவதில்லை. எனவே ஜிஎஸ்டி சார்ந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறாது.
எப்போது ஜிஎஸ்டி செலுத்துகிறோம்
நாம் ஒரு பொருள் அல்லது சேவையை பெறும் போது, ஜிஎஸ்டி வரியை அன்றாடம் செலுத்திக் கொண்டு இருக்கிறோம். வியாபாரிகள் தான் மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என, நம்மிடம் இருந்து வசூலித்த ஜிஎஸ்டியை அரசாங்கத்திடம் செலுத்துகிறார்கள். எனவே பட்ஜெட்டில், ஜிஎஸ்டி பற்றி நாம் கண்டு கொள்ளத் தேவை இல்லை.
Income Tax என்றால் என்ன
ஒருவர் அல்லது ஒரு நிறுவனம், ஒரு நிதி ஆண்டில் சம்பாதித்த மொத்த வருமானத்துக்குச் செலுத்தும் வரி தான் இந்த வருமான வரி. தனி நபர் செலுத்தும் போது அது வருமான வரியாகவும், ஒரு கம்பெனி செலுத்தும் போது அது கார்ப்பரேட் வரியாகவும் வசூலிக்கப்படுகிறது. இதை நேரடி வரிகள் என்று சொல்வோம். வருமான வரியை, நாம் வேலை பார்க்கும் அலுவலகம் டிடிஎஸ் முறையில் பிடித்தம் செய்து அரசிடம் செலுத்தும் அல்லது நாமே முன் வந்து நம் வருமான வரியைச் செலுத்தலாம்.
Income Tax returns என்றால் என்ன
வருமான வரி செலுத்துவது தான் வருமான வரி ரிட்டன்ஸ் என சிலர் தவறான புரிதலுடன் இருக்கிறார்கள். உங்களுக்கு அலுவலகத்திலேயே டிடிஎஸ் பிடித்து வருமான வரி செலுத்திய பின் கூட, நீங்களே முன் வந்து வருமான வரி ரிட்டன் படிவத்தை நிரப்பி தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வருமான வரிப் படிவத்தை முறையாக சமர்பிகவில்லை என்றால் அது சட்டப் படிக் குற்றம்.
அப்படி என்ன இருக்கும் படிவத்தில்
இன்னார் ஆகிய நான், கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இவ்வளவு வருமானம் ஈட்டி இருக்கிறேன். இதற்கு இவ்வளவு வருமான வரியாகச் செலுத்திவிட்டேன். நீங்கள் கூடுதலாக வருமான வரி பிடித்தம் செய்துவிட்டீர்கள், எனவே கூடுதலாக பிடித்தம் செய்த பணத்தை ரீ-ஃபண்ட் கொடுங்கள்... அல்லது... எனக்கு வருமானம் கூடுதலாக இருக்கிறது. எனவே நான் கூடுதலாக இவ்வளவு பணத்தை வருமான வரியாகச் செலுத்தி இருக்கிறேன் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
இன்னார்
என, கடந்த ஒரு நிதி ஆண்டில் நாம் சம்பாதித்த மொத்த பணத்தின் கணக்கு வழக்குகளை சமர்பிக்கும் படிவம் தான் வருமான வரி ரிட்டன்ஸ் படிவம்.
பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்
எனவே வருமான வரி செலுத்தினால் மட்டும் பத்தாது, வருமான வரி ரிட்டன் படிவத்தையும் முறையாக நிரப்பி சமர்பிக்க வேண்டும். பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். இந்த முறையாவது வருமான வரி வரம்பு அதிகரித்தால் சரி. 5 லட்சத்துக்கு கீழ் சம்பாதித்தால் நோ வரி எனக் கொண்டு வாங்க மேடம்.
Standard deduction என்றால் என்ன
நமக்கு வரும் மொத்த வருமானத்தில், 50,000 ரூபாயை அலேக்காக தூக்கி இந்த ஸ்டாண்டர்ட் டிடக்ஷனில் (நிலைக் கழிவு) காட்டி கழித்துக் கொள்ளலாம். போக்குவரத்து செலவு, மருத்துவ செலவு போன்றவைகளைச் செய்து கொள்ள, மத்திய அரசு இந்த நிலைக் கழிவுத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த நிலைக் கழிவின் கீழ் மொத்தமாக 50,000 ரூபாயை மட்டுமே கழித்துக் கொள்ள முடியும்.
Customs என்றால் என்ன
இதை தமிழில் சுங்க வரி என்று சொல்வோம். இந்த சுங்க வரி, பொதுவாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கும் சுங்க வரி விதிக்கிறார்கள். இது ஒரு விதமான மறைமுக வரி தான். ஜிஎஸ்டி வந்த பின்பும், சுங்க வரி தனியாக வசூலிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. எனவே சுங்க வரி தொடர்பான அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
Excise என்றால் என்ன
இந்தியாவில் வியாபாரம் செய்யப்படும் பொருட்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசு விதிக்கும் முக்கிய வரிகளில் ஒன்று தான் இந்த கலால் வரி. ஜிஎஸ்டி வந்த பின், பெரும்பாலான பொருட்களுக்கு விதித்து இருந்த கலால் வரி ரத்து செய்துவிட்டார்கள். ஆனால் கச்சா எண்ணெய் சார்ந்த பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் மதுபானங்கள் போன்றவைகளுக்கு இன்னும் கலால் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது சார்ந்த அறிவிப்புகளையும் இந்த பட்ஜெட்டில் எதிர்பாக்கலாம்.