டெல்லி: யெஸ் வங்கி மோசடி வழக்கில் கைதான நிறுவனர் ராணா கபூரின் லண்டனில் உள்ள 127 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பரமான அபார்ட்மென்ட் அமலாக்க இயக்குநரகத்தால் முடக்கப்பட்டுள்ளது.
லண்டனின் 77 சவுத் ஆட்லி வீதியில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஆடம்பரமான வீடு, 13.5 மில்லியன் பவுண்டுகள் சந்தை மதிப்பு உள்ளது என்றும் இதனையறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ராணா கபூர் 2017 ஆம் ஆண்டில் 9.9 மில்லியன் பவுண்டுகள் அல்லது 93 கோடி ரூபாய்க்கு டொயிட் கிரியேஷன்ஸ் ஜெர்சி லிமிடெட் என்ற பெயரில் இந்த சொத்தை வாங்கியுள்ளதாகவும் அமலாக்க இயக்குநரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யெஸ் வங்கியின் 4,300 கோடி மதிப்புள்ள மோசடியில் முன்னாள் வங்கி முதலாளி மார்ச் மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரின் சொத்துகள் முடக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த முறைகேடுக்கு உதவியாக இருந்து பணபரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக, டி ஹெச் எஃப் எல் என்ற நிதி நிறுவனத்தின் புரோமோட்டர் கபில் வாதவன், அவரின் சகோதரர் தீரஜ் உள்ளிட்ட 13 பேர் மீது வ்ழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ராணா கபூருக்கு சொந்தமான லண்டன், நியூயார்க், டெல்லி, மும்பை, கோவா உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், டி.ஹெச்.எப்.எல் நிதி நிறுவனத்தின் புரேமோட்டர் கபில் வாத்வான் சகோதரர்களுக்கு சொந்தமான 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் என 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் ஏற்கனவே முடக்கியுள்ளனர்.
சிபிஐ தாக்கல் செய்த வழக்கின் படி, யெஸ் வங்கி டிஹெச்எஃப்எல் அல்லது திவான் ஹவுசிங் அண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 3,700 கோடி ரூபாயை முதலீடு செய்தது, அதே நேரத்தில் ராணா கபூரின் மூன்று மகள்கள் ரோஷ்னி கபூர், ராக்கி கபூர் டாண்டன் மற்றும் ராதா கபூர் ஆகியோருக்கு சொந்தமான டொயிட் என்ற நிறுவனத்திற்கு 600 கோடி ரூபாய் கடனையும் வழங்கியது.
டிஹெச்எஃப்எல் கடன் பத்திரங்களில் வாங்கிய, 3,700 கோடியை யெஸ் வங்கி மீட்டெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சிபிஐ இதை லஞ்சம் என்று பதிவு செய்துள்ளது. ஏனெனில் டொய்ட் உறுதியளித்த டிஹெச்எஃப்எல்லின், ஐந்து சொத்துக்களை 700 கோடி ரூபாய்க்கு பிணையமாக மதிப்பிட்டுள்ளது, இருப்பினும் இந்த சொத்துக்களின் கையகப்படுத்தல் செலவு வெறும் 40 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஹெச்எஃப்எல் குழும நிறுவனமான ஆர்.கே.டபிள்யூ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, மும்பையில் உள்ள பாந்த்ரா மீட்பு திட்டத்திற்காக யெஸ் வங்கி 750 கோடி ரூபாய் கடனை அனுமதித்ததாகவும் அந்த நிறுவனம் குற்றம் சாட்டியது. ஆர்.கே.டபிள்யூ இயக்குனர் தீரஜ் ராஜேஷ் குமார் வாதவனின் உறவினர், கபில் வாதவனால் இந்த முழுத் தொகையும் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதனையெல்லாம் ராணா கபூர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications