மும்பை: யெஸ் பேங்க் வங்கி வாடிக்கையாளர்கள் கடந்த மார்ச் 05, 2020 அன்று, வெறும் 50,000 மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனச் செய்திகள் வெளியானது.
அதன் பின் தான், யெஸ் பேங்க் செய்த தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின.
கண்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்கத் தொடங்கியதில் இருந்து... சுமார் 6,300 கோடி ரூபாய் வாரா கடனை மறைத்தது வரை பலதும் இதில் அடக்கம்.
புதிய புதிய சிக்கல்கள்
இது போக, பல கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஓவியங்கள், சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள், லண்டனில் இருக்கும் சொத்து பத்துக்கள், பல போலி நிறுவனங்கள் என யெஸ் பேங்கின் முன்னாள் தலைவர் ரானா கபூரைப் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
வருமான வரி
இப்போது புதிதாக வருமான வரித் துறையும் இந்த பட்டியலில் இணைந்து குடைந்து எடுக்கத் தொடங்கி இருக்கிறது. அப்படி ரானா கபூர் என்ன செய்துவிட்டார்..? ஏன் வருமான வரித் துறையினர் யெஸ் பேங்கின் முன்னாள் தலைவர் ரானா கபூரை வளைக்கிறார்கள்..? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
78 கம்பெனிகள்
யெஸ் பேங்கின் முன்னாள் தலைவர் ரானா கபூரின் குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கும் 78 கம்பெனிகளின் வரவு செலவு விவரங்களை சலிக்கத் தொடங்கி இருக்கிறது வருமான வரித் துறை. ஏன் என்று கேட்டால் வரி ஏய்ப்பு இருக்குமோ எனச் சொல்கிறார்கள். எனவே தான் இந்த அதிரடி நடவடிக்கையாம்.
என்ன விசாரணை
எந்த அடிப்படையில் யெஸ் பேங்கின் management credit committee (MCC) அமைப்பு, இந்த மோசமான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து இருக்கிறார்கள். ரானா கபூர் தலையிட்டு கடன் கொடுக்க வைத்தாரா..? அல்லது ஆர்பிஐ சொல்லி இருக்கும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி கடன் கொடுத்து இருக்கிறார்களா..? என்று தான் விசாரிக்கப் போகிறார்களாம்.
அமலாக்கத் துறை
இதற்கு முன், மத்திய அரசின் அமலாக்கத் துறை (Enforcement Directorate) நடத்திய விசாரணையில், ரானா கபூர், சில பல கம்பெனிகளை நடத்திய விவரங்கள் தெரிய வந்திருக்கிறது. மோசமான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக, கடன் வாங்கிய நிறுவனங்கள் கொடுக்கும் கைமாறுகளை வாங்கிக் கொள்ள இந்த நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.


Click it and Unblock the Notifications