மும்பை: ஒரு காலத்தில் பில்லியனராக கொடிகட்டி பறந்த அனில் அம்பானி, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து தற்போது பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வருகிறார்.
ஏற்கனவே கடன் பிரச்சனை காரணமாக தனது சில சொத்துக்களை எல்லாம் விற்று, கடனை அடைத்து வந்தார்.
இவரின் சில நிறுவனங்கள் திவால் நிலைக்கே கூட தள்ளப்பட்டுள்ளன. இப்படி தொடர்ந்து அடியாகவே வாங்கி வரும் அனில் அம்பானிக்கு, தற்போது யெஸ் வங்கியும் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
யெஸ் வங்கி நோட்டீஸ்
இப்படி தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வரும் அனில் அம்பானிக்கு அடுத்தடுத்த அடி விழுந்து கொண்டே இருக்கிறது எனலாம். தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும தலைமையகம் மற்றும் தெற்கு மும்பையில் உள்ள இரு அலுவலகங்களுக்கு, யெஸ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
கடனை அடைக்க தவறியதால் நோட்டீஸ்
இது அனில் அம்பானி இந்த சொத்துகளுக்கு எதிராக 2,892 கோடி ரூபாய் கடனை கட்ட வேண்டியுள்ளதாகவும், கடனை கட்ட தவறியதால் தற்போது மீட்கப்பட இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கடன் வாங்கியவர்களின் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் சட்டத்தின் கீழ், பேக்பேயில் உள்ள நாகின் மஹாலில் இரண்டு தள அலுவலகத்தினையும் கையகப்படுத்தும் நடவடிக்கையும் இதில் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் தலைமையகம்
ரிலையன்ஸ் தலைமையகம் 21,432 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தினை ரிலையன்ஸ் BSES-யினை கையகப்படுத்திய பின்பு, ரிலையன்ஸ் எனர்ஜி என மாற்றப்பட்டது. பின்னர் இது Reliance Infrastructure எனவும் மாற்றப்பட்டது. பின்னர் இந்த குழு 2018ல் சாண்டாக்ரூஸில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
பல அலுவலகங்கள்
இந்த அலுவலகத்தில் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு அலுவலகம் தவிர, ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ், ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பிற குழு நிறுவனங்கள் உள்ளிட்ட ரிலையன்ஸ் நிதி சேவைகளின் அலுவலகங்களும் இதில் உள்ளன. சமீபத்திய மாதங்களில் இந்த குழுக்கள் கொரோனாவின் காரணமாக பூட்டப்பட்டது. ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலான அலுவலகங்கள் ஒரு பிரிவிலும், மறுபுறம் ஜே எல் எல் நிறுவனத்துடன் குத்தகைக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தான் காரணம்
ஏற்கனவே பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டு, பின்னர் தற்போது தான் இயல்பாக செயல்பட ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் அனில் அம்பானியின் தரப்பில் இருந்து 12,000 கோடி ரூபாய் கடன் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டது. கடந்த இரண்டு தசாப்தங்களாகவே கடன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வர்த்தகம் மேம்படவில்லை.
போதிய அவகாசம்
இதனால் போதிய பணப்புழக்கம் இல்லாததால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த மே5ம் தேதியன்று கடனை திரும்ப செலுத்த நிறுவனத்திற்கு 60 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதாக இந்த தனியார் வங்கி தெரிவித்துள்ளது. இதுவரை எந்தவொரு தொகையும் திரும்ப செலுத்தாததால், யெஸ் இவ்வங்கி இந்த அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது.