மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சாமானிய மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட ஒன்றான உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி 1 முதல்
இதன் மூலம் ஜனவரி 1 முதல் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் உணவகங்களாக அறிவிக்கப்பட்டு டெலிவரி செய்யப்படும் உணவுகளுக்கு 5 சதவீத வரியை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளது. இந்த வரியின் மூலம் மக்கள் ஆர்டர் செய்யும் உணவுகள் விலை அதிகரிக்குமா..?
வரி வசூலிப்பு மாற்றம்
ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பின் படி தற்போது விதிக்கப்பட்டு உள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது இதுநாள் வரையில் இத்தளத்தில் இருக்கும் உணவகங்களில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது.
உணவு விலையில் மாற்றம் இல்லை
இதனால் உணவு விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படாது. இந்த முறையிலான வரி வசூல் மூலம் வரி ஏய்ப்பு, வரிச் செலுத்துவதில் செய்யப்படும் ஏமாற்று வேலைகளை இதன் மூலம் தடுக்க முடியும்.
அவகாசம்
இப்புதிய வரி மாற்றங்கள் அனைத்தும் இத்துறை சார்ந்து நிறுவனங்கள் தங்கள் செயலிகள் மற்றும் கணக்கீடு தளத்தில் மாற்றம் செய்து ஜனவரி 1 முதல் அனைத்து வர்த்தகங்களுக்கும் முறையாக வரி வசூல் செய்து அரசுக்கு செலுத்த வேண்டும்.
உணவகங்கள்
சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் தங்கள் தளத்தில் இருக்கும் உணவகங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்று சரிபார்க்க அவசியம் இல்லை.
ஜிஎஸ்டி அமைப்பு
இதனால் பல பதிவு செய்யப்படாத ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிகள் இந்தத் தளத்தில் வர்த்தகம் செய்து வருகிறது. இவர்களை முறைப்படுத்தவும், அனைத்து விற்பனையகங்களை ஜிஎஸ்டி-குள் கொண்டு வர வேண்டும் என இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
2000 கோடி ரூபாய் இழப்பு
முறைகேடுகள் மற்றும் பதிவு செய்யப்படாத உணவகங்கள் மூலம் கடந்த 2 வருடத்தில் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிலான வரி வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. தற்போது 5 சதவீத வரி வசூலில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் Tax Collectors at Source (TCS) ஆகப் பதிவு செய்யப்படும்.
இரண்டு முறை
மேலும் இந்த 5 சதவீத வரியை இரண்டு முறையில் நடைமுறைப்படுத்த முடியும்..
1. உணவு டெலிவரி நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி வசூல் செய்தால், உணவகங்கள் வரி வசூலிக்கக் கூடாது. இதன் மூலம் உணவகத்தில் இரு பில்லிங் சிஸ்டம் இருக்க வேண்டும் ஒன்று உணவகத்திற்கு வந்து சாப்பிடுபவர்களுக்கும், மற்றொன்று உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும்
2. உணவகங்கள் ஜிஎஸ்டி வசூல் செய்தால், உணவு டெலிவரி நிறுவனங்கள் buyer ஆகக் கருதப்படும். இதனால் உணவு டெலிவரி நிறுவனங்கள் எவ்விதமான வரியும் ஆன்லைனில் ஆர்டர் செய்வோர் மீது வரி வசூலிக்கக் கூடாது.
வரி விதிப்பு அளவில் இரண்டுமே ஒன்று தான், ஆனால் இதில் உணவு டெலிவரி நிறுவனங்கள் வரிச் செலுத்துவதில் தான் மாற்றங்கள் இருக்கும்.