பொதுவாகத் தங்களிடம் உள்ள சொத்துக்களை விற்று அதன் மூலம் பார்க்கும் லாபத்திற்கு capital gains tax எனப்படும் மூலதன ஆதாய வரியினைச் செலுத்த வேண்டும்.
இப்படி விற்கப்படும் சொத்தானது பழைய வீடாக இருந்தால் அதன் மீதான மூலதன ஆதாய வரியினை வருமான வரிச் சட்டப்பிரிவு 54-ன் கீழ் குறைக்க முடியும். ஆனால் அந்த வீட்டை விற்றதை அடுத்து புதிய வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது முக்கியமானது.
இன்றைய வேகமான உலகில் மக்கள் சிறு நகரங்களில் இருந்து பெறு நகரங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது. அதே நேரம் பெறு நகரத்தில் இருந்து வெளியேறிச் சிறு நகரங்களுக்குச் செல்பவர்களும் உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் உதாரணத்திற்கு மதுரையில் உள்ள ஒருவர் பணி நிமித்தமாகச் சென்னைக்கு இடம் பெயர்ந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு மதுரை திரும்பி செல்ல விருப்பம் இல்லை. ஆனால் அங்கு வீடு உள்ளது. அதனை விற்றுவிட்டுச் சென்னையில் வீடு வாங்க முடிவு எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது வரியைக் குறைக்க என்ன மாதிரியான விதிகள் உள்ளன என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
முக்கிய விதிகள்
பின்வரும் தகுதிகள் உள்ள போது அவரால் பழைய வீட்டை விற்றுவிட்டு புதிய வீடு வாங்கும் போது மூலதன ஆதாய வரியின் மீது வரி விலக்கினை பெற முடியும். எனவே அந்தத் தகுதிகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
1) வரி விலக்கு பெற விரும்புபவர் தனிநபர் அல்லது இந்து கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும். நிறுவனங்கள் போன்றவற்றின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்று வரி விலக்கு பெற முடியாது.
2) தனிநபரின் பெயரில் அந்த வீடு நீண்ட காலத்திற்கு அவரிடம் இருந்து இருக்க வேண்டும். (குறைந்தது 3 ஆண்டுகள்)
3) பழைய வீட்டை ஒரு வருடத்திற்குள் விற்று விட்டு புதிய வீடு வாங்க வேண்டும் அல்லது வீட்டை விற்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு புதிய வீடு வாங்கும் போது மூலதன ஆதாய வரி மீது விலக்கினை பெற முடியும். அல்லது மூன்று வருடத்திற்குள் புதிய வீட்டினை கட்டும் போதும் வரி விலக்கு கிடைக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டை விற்று புதிய வீடுகள் வாங்கி வரி விலக்கு பெற முடியுமா?
வருமான வரி சட்டப் பிரிவு 54-ன் கீழ் தனிநபர் ஒருவரால் ஒரு வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது மட்டுமே இந்த வரி நன்மையினைப் பெற முடியும். இது போன்று அவரது வாழ்நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு பெற முடியாது.
இந்தியாவில் வீட்டை விற்றுவிட்டு வெளிநாட்டில் வீடு வாங்கும் போது மூலதன ஆதாய வரி விலக்கு கிடைக்குமா?
கிடைக்காது. இந்தியாவில் வீட்டை விற்றுவிட்டு இங்கேயே வாங்கினால் மட்டும் தான் வரி விலக்கு பெற முடியும். இந்தியாவில் வீட்டை விற்றுவிட்டு இங்கேயே வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால - குறைந்த கால மூலதன ஆதாய வரி
ஒரு சொத்தை 36 மாதங்களுக்குக் குறைவாக மட்டும் தங்களது வசம் வைத்து இருந்து விற்றுவிட்டால் அது குறைந்த கால மூலதன சொத்தாகும். இதற்குக் குறைந்த கால மூலதன ஆதாய வரியினைச் செலுத்த வேண்டும். இதுவே 36 மாதங்களுக்கு அதிகமாக ஒரு சொத்தை தன் பெயரில் வைத்து இருந்து விற்கும் போது அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியினைச் செலுத்த வேண்டும்.
வீட்டை விற்றுவிட்டு வருமான வரி சட்டப் பிரிவு 54 கீழ் வரி விலக்கு பெற அது கண்டிப்பாக நீண்ட காலச் சொத்தாக இருக்க வேண்டும்.
வரி விலக்கு பெற்ற உடன் விற்க முடியுமா?
நீண்ட கால மூலதன ஆதாய வரி விலக்கினை பெற்ற 3 வருடத்திற்குள் அந்த வீட்டினை விற்றாலும் இரண்டுக்கும் சேர்த்து வரியினைச் செலுத்த வேண்டி வரும்.
எவ்வளவு வரி விலக்கு கிடைக்கும்?
பழைய வீட்டை விற்று விட்டு அதற்குச் செலுத்த வேண்டிய மொத்த தொகை அல்லது புதிய வீடு வாங்கச் செலவு செய்யப்பட்ட தொகை அல்லது புதிய வீடு கட்ட செலவு செய்யப்பட்ட தொகையினைப் பொருத்து வரி விலக்கு மாறும்.
ஒருவேலை வீட்டை விற்ற பிறகு புதிய வீடு வாங்கவில்லை என்றால் என்ன ஆகும்?
வீட்டை விற்ற பிறகு ஒரு வருடத்திற்குள் வீட்டை வாங்கவில்லை என்றால் வருமான வரி செலுத்தும் போது மூலதன ஆதாய டெபாசிட் கீழ் பணத்தினை முதலீடு செய்துவிட்டு 3 வருடத்திற்குள் வீட்டினை வாங்க அல்லது கட்ட வேண்டும்.
ஒருவேலை வீட்டை விற்ற 3 வருடத்திற்குள் புதிய வீட்டை வாங்கவில்லை என்றால் அந்தத் தொகைக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியினைச் செலுத்திவிட்டு மீத பணத்தினைத் திரும்பப் பெறலாம்.