கொரோனா காலத்திலும், தங்கள் வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ள வியாபாரிகளும், பெரும் பணக்காரர்களும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதே போலத் தான் அமேசான் நிறுவனமும் தன் வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ள எல்லா வேலைகளையும் செய்தது. செய்து கொண்டு இருக்கிறது.
அப்படி அமேசான் தன் வியாபாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு, ஊழியர்களை வேலை வாங்கியதற்காக, இப்போது 3 ஊழியர்கள், அமேசான் மீதே வழக்கு தொடுத்து இருக்கிறார்கள்.
எந்த நீதிமன்றம்
அமெரிக்காவில், ஸ்டேட்டன் ஐலாந்து (Staten Island) என்கிற பகுதியில், அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும் JFK8 fulfillment center என்கிற இடத்தில் சுமாராக 5,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த 5,000 ஊழியர்களில், 3 ஊழியர்கள் தான் அமேசான் நிறுவனம் மீது, ப்ரூக்ளினில் இருக்கும் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்களாம்.
என்ன பிரச்சனை
அமேசானின் JFK8 fulfillment center-ல் வேலை செய்யும் ஊழியர்களை கொரோனா பரவுm காலத்திலும், பாதுகாப்பதை விட்டு விட்டு, உற்பத்தியை அதிகரித்து இருக்கிறார்களாம். அதனால் பார்பரா சண்டிலர் (Barbara Chandler) என்பவருக்கு கொரோனா பரவி இருக்கிறதாம். அவரைத் தொடர்ந்து, அவர் வீட்டில் இருப்பவர்களுக்கும் கொரோனா பரவி, அவர் குடும்ப உறுப்பினரில் ஒருவர் கடந்த ஏப்ரல் 7-ல் இறந்தும் இருக்கிறாராம்.
வழக்கு
கொரோனா காலத்திலும், அமேசான் நிறுவனம் கட்டாயப்படுத்தி ஊழியர்களை வேலை வாங்கி இருக்கிறது. அதுவும் பாதுகாப்பாற்ற பணிச் சூழலில் வேலை வாங்கி இருக்கிறது. ஆகையால் ஒரு JFK8 fulfillment center ஊழியருக்காவது கொரோனா தொற்று ஏற்பட, அமேசான் காரணமாக இருந்து இருக்கிறது எனக் குற்றம் சாட்டி வழக்கு தொடுத்து இருக்கிறார்கள்.
அந்த கோரிக்கைகள்
JFK8 fulfillment center ஊழியர்கள் தொடுத்திருக்கும் வழக்கில், அமேசான் கம்பெனி, ஊழியர்களின் பாதுகாப்பு விஷயங்களை முழுமையாக கடை பிடிக்க வேண்டும். அதோடு கொரோனா தொற்று அறிகுறி இருக்கும் ஊழியர்கள் அல்லது கொரோனாவால் தனிமைபடுத்தப்பட்டு இருப்பவர்களை தண்டிக்கக் கூடாது எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஊழியர்கள் எண்ணிக்கை Vs கொரோனா தொற்று
அமேசானில் 2019- ஆண்டு முடிவில் சுமாராக 7.98 லட்சம் பேர் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அமேசானின் பகிர்மான மையங்களில் (Distribution Center) பணியாற்றும் ஊழியர்களில் சுமாராக 800 பேராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என ஒரு ஊழியர் சொன்னதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டு இருக்கிறது.
லாபம் அடைந்த அமேசான்
கொரோனா காலத்தில், அதிகம் லாபம் அடைந்த கம்பெனிகள் பட்டியலில் நிச்சயம் அமேசானுக்கும் ஒரு பங்கு உண்டு. காரணம் மக்கள் கொரோனாவுக்கு பயந்து, வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டில் இருந்த படியே ஆர்டர் போட போட, அமேசானுக்கு எல்லாம் லாபமாக மாறியது. ஃபோர்ப்ஸ் கணக்குப் படி, ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு அக்டோபர் 2019-ல் 114 பில்லியனாக இருந்தது, இப்போது 148 பில்லியான அதிகரித்து இருப்பதே இதற்கு சாட்சி. ஆக அமேசானுக்கு லாபம் இல்லாமல், ஜெஃப் பிசாஸின் சொத்து அதிகரிக்குமா என்ன..?
அமேசான் தரப்பு
இந்த வழக்கு குறித்து அமேசானிடம் கேட்ட போது "கொரோனா தொற்று வந்ததில் இருந்து, அமேசான் நிறுவனம், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் பின்பற்றி வருகிறது" என ஒற்றை வரியில் பதில் கொடுத்து இருக்கிறார்கள்.