உலகின் முக்கியமான சுற்றுலா நாடாக விளங்கும் தாய்லாந்தில் தற்போது கஞ்சாசிக்கன் என்ற ஒரு விஷயம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் இந்தக் கஞ்சாசிக்கன் அடுத்த சில வருடத்தில் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா என உலகில் பல நாடுகளின் சந்தைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தாய்லாந்து
வடக்குத் தாய்லாந்தில் மருத்துவத்திற்காகப் பயன்படுத்தும் கஞ்சா வளர்க்கும் பண்ணை ஒன்று, அதன் கோழிகளுக்கு ஆன்டிபயோடிக்-கிற்குப் பதிலாகக் கஞ்சா-வை உணவாக அளித்து வருகிறது. இந்தப் புதிய வகை ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்தச் சோதனை நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்துள்ளது என்று கூறியுள்ளனர்.
சியாங் மாய்ப் பல்கலைக்கழகம்
சியாங் மாய்ப் பல்கலைக்கழகத்தின் (Chiang Mai University) விலங்குகள் மற்றும் நீர்வாழ் அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள், ஜனவரி 2021 இல் கோழிகளின் உணவில் இந்தப் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து லம்பாங்கில் உள்ள பண்ணையில் உள்ள 1,000 கோழிகளில் 10% க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இறந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
ஒரு வருட ஆராய்ச்சி
இப்பல்கலைக்கழகத்தின் ஆய்வின் கண்டுபிடிப்புகள் இன்னும் மதிப்பாய்வில் உள்ளன மற்றும் ஒரு வருட மதிப்புள்ள ஆராய்ச்சி முடிவுகளை மட்டுமே வைத்துள்ளது. ஆய்வுக்குத் தலைமை தாங்கிய உதவி பேராசிரியர் சோம்புனட் லும்சங்குல், கஞ்சா தீவனம் கோழிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவதில் செயல்படுவதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பி
பறவைகளைக் கொல்லும் நோயின் கடுமையான தொற்று இல்லாத நேரத்தில் இருக்கும் இறப்புகளுக்கு இணையாகவே இருந்தாலும், குறுகிய கால அடிப்படையிலான ஆய்வில் தெரிகிறது. பறவைகளின் சிறப்பு உணவாகத் தீவனத்திலும் தண்ணீரிலும் நொறுக்கப்பட்ட கஞ்சாவைச் சேர்த்து கொடுக்கப்பட்டு உள்ளது, இதேபோல் இக்காலகட்டத்தில் கோழிகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) மற்றும் மருந்துகள் கொடுக்கப்படவில்லை.
விலை
ஆரோக்கியமான கோழிகளைத் தாண்டி ஆர்கானிக் கோழிகளை விரும்பும் நுகர்வோருக்கு மத்தியில் இக்கோழிகள் அதிக விலைக்கு எளிதாக விற்பனை செய்ய முடியும். கறிக்கோழிகளின் வழக்கமான விலையை விட இருமடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மருந்து செலவுகள்
இந்த ஆய்வு கோழி வளர்ப்பில் இருக்கும் மருந்து செலவுகளைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இயற்கையாகக் கிடைக்கும் மருத்துவக் கஞ்சா பயன்படுத்துவதால் பண்ணை உரிமையாளர்களுக்குப் பெரிய அளவிலான செலவுகள் குறையும்.
கஞ்சாசிக்கன்
ஆர்கானிக் விவசாயம் பிரபலமாவது போல் தற்போது ஆர்கானிக் இறைச்சியும் பிரபலம் அடைகிறது. தாய்லாந்தில் இதைக் கஞ்சாசிக்கன் என அழைக்கப்படுகிறது. இந்த ஆய்வு நீண்ட காலச் சோதனையில் வெற்றி அடைந்தால் கோழி வளர்ப்பில் குறைவான செலவுடன் இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பெரும் மாற்றம்
இது உலகளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும், இதேபோல் கஞ்சா மக்களின் பயன்பாட்டுக்கு எளிதாகக் கிடைத்து விட்டால் இதன் எதிர்வினைகளையும் யோசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒருபக்கம் வர்த்தகம், லாபம், உணவு தேவை ஆகியவற்றைப் பார்க்க வேண்டிய நிலையில் மக்களின் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டியது கட்டாயம்.
தாய்லாந்து
ஆசியாவிலேயே முதல் நாடாகக் கஞ்சாவை வளர்ப்பதையும் விற்பதையும் சில நாட்களுக்கு முன்பு சட்டப்பூர்வமாக்கி உள்ளது தாய்லாந்து. இந்த அறிவிப்பு மூலம் தாய்லாந்து அரசு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்துறையை உருவாக்கும் என நம்புகிறது.
அனுடின் சார்ன்விரகுல்
ஆனால் கஞ்சா-வை பொழுதுபோக்கிற்காக (Recreational) பயன்பாட்டுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது, தாய்லாந்தின் சுகாதார அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) கூறினார். தாய்லாந்து அரசின் இந்த அறிவிப்பு ஜூன் மாதம் 9ஆம் தேதி மாலையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ நோக்கம்
தாய்லாந்து மருத்துவ நோக்கங்களுக்காகக் கஞ்சா-வைப் பயன்படுத்த அனுமதிக்கிறது, இது 2018 முதல் சட்டப்பூர்வமாக உள்ளது. "சுற்றுலாப் பயணிகள் மருத்துவச் சிகிச்சைக்காக வந்தால் கஞ்சா பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினை இல்லை" என்று அனுடின் சார்ன்விரகுல் கூறினார்.