ஏற்கனவே உலகில் கொரோனா வைரஸ் போதுமான அளவுக்கு குடைச்சல்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
போதாக் குறைப்பு அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேறு அவ்வப் போது குட்டையைக் குழப்பிக் கொண்டு இருக்கிறார்.
அந்த வரிசையில் இப்போது புதிதாக இன்னொரு விஷயத்தைச் சொல்லி, ஒட்டு மொத்த உலகத்துக்கும் பகீர் கிளப்பி இருக்கிறார். அப்படி என்ன சொன்னார்?
அமெரிக்க சீன பிரச்சனை
உலகிலேயே கொரோன வைரஸ் அதிக மக்களை பாதித்து இருப்பது அமெரிக்காவில் தான். அதோடு இறந்தவர்கள் எண்ணிக்கையிலும் அமெரிக்கா தான் முன்னணியில் இருக்கிறது. சீனா, சரியாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவில்லை என்கிற ஒரே காரணத்தால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடிக்கடி வாய்க்கால் தகராறு நடந்து கொண்டு இருக்கிறது.
வர்த்தகப் போர்
இதற்கு மத்தியில் 2018-ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டு இருக்கும் வர்த்தகப் போருக்கு போட்ட டிரேட் டீல் வேறு பஞ்சாயத்துக்கு மத்தியில் வந்து போகிறது. சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்கா, சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை வாங்க மறுத்தால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன் என மிரட்டினார்
அமெரிக்க அதிகாரிகள்
சீனாவுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, அமெரிக்கா ஆலோசித்து வருவதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகளே சொல்லி இருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆலோசனைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரை இன்னும் போகவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்களாம்.
ட்ரம்ப் கருத்து
"அமெரிக்காவும் சீனாவும் ஒரு டிரேட் டீலை ஒப்புக் கொண்டு இருக்கிறது. அதன் படி சீனாவும் அமெரிக்காவிடம் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் அது இப்போதைக்கு இரண்டாம்பட்சமாகிவிட்டது. கொரோனா தான் முதல் விஷயமாக இருக்கிறது" என பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார் ட்ரம்ப்.
கூடுதல் வரி
மேற்கொண்டு, அமெரிக்கா, சீனாவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்களை நிறுத்திவிடுமா..? எனக் கேள்வி எழுப்பிய போது "நான் அதை வேறு வழியில் செய்வேன். கூடுதல் பணத்துக்கு, கூடுதலாக வரி விதிப்பேன்" எனச் சொல்லி ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்தையும் கலங்கடிக்கும் விதத்தில் பேசி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். பின்ன உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகள் கூடுதல் வரி விதித்து விளையாடினால் உலக பொருளாதாரம் அடி வாங்கத் தானே செய்யும்..?
பங்குச் சந்தைகள் சரிவு
ட்ரம்ப் கூட்தலாக வரி விதிப்பேன் என்கிற வார்த்தையை விட்ட்து தான் தாமதம்... மே 01, 2020 நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 3.20 % வீழ்ச்சி கண்டது. லண்டனின் எஃப் டி எஸ் இ பங்குச் சந்தையும் 2.34 % வீழ்ச்சி கண்டன. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காணத் தொடங்கினாலே மக்கள் உஷாராக தங்கத்தில் பணத்தை முதலீடுச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள். அது தான் சமீபத்திலும் நடந்து இருக்கிறது.
தங்கம் விலை
சர்வதேச அளவில், கடந்த 30 ஏப்ரல் 2020 அன்று 1,686 டாலரைத் தொட்டு வர்த்தகமான ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, நேற்று மே 01, 2020 அன்று 1,700 டாலரைத் தொட்டு இருக்கிறது. இன்று 1,705 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் ட்ரம்பின் கூடுதல் வரி அச்சுறுத்தல். கடந்த ஏப்ரல் 23 முதல் விலை இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை, ட்ரம்பின் வார்த்தைகளால் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது.
சென்னையில் தங்கம்
இன்று சென்னையில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 46,400 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. ஆக ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,640 ரூபாய் தொட்டு இருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும்... "ட்ரம்ப் சார் எதையும் கொஞ்சம் யோசிச்சு பேசுனீங்கன்னா எல்லாருக்கும் நல்லது.. கொஞ்சம் பாத்து பண்ணுங்க" என்று வேண்டுகோள் தான் வைக்க முடியும். போகிற போக்கில் தங்கத்தை எல்லாம் படமாகத் தான் பார்க்க முடியும் போலிருக்கிறது.