கலிபோர்னியா : உலகம் முழுக்க பணியிழப்பு, வேலையின்மை, பொருளாதார மந்தம் என மக்களை ஆட்டிப்படைக்கும் நிலையில், உபெர் மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன? தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த செவ்வாய் கிழமையன்று 435 ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ளது இந்த நிறுவனம்.
தனது உலகளாவிய மொத்த பொறியல் குழுவில் 8 சதவிகித ஊழியர்களை தற்போது வீட்டிற்கு அனுப்பியுள்ளது உபெர்.
முன்னதாக கடந்த மாதத்தில் 400 மார்கெட்டிங் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதுவரை காணாத நஷ்டம்
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி கூறுகையில், நிறுவனம் வளர்ந்துள்ளது உண்மை தான், ஆனால் மீண்டும் அந்த நிலையை அடைய அதை நெறிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் உபெர் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நஷ்டத்தை கண்டுள்ளதாகவும், இது கடந்த காலாண்டில் 5.2 பில்லியன் டாலர் நஷ்டத்தை கண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
செலவினை குறைக்க அதிரடி முடிவு
முன்னதாக முதல் முறையாக தங்களது மார்கெட்டிங் பிரிவிலிருந்து 400 பேரை வெளியேற்றிய போதே இந்த நிறுவனம், புதிய பணியமர்த்தலை முடக்கியதோடு, அவர்களின் நிர்வாகிகளிடம் தங்களது ஊழியர்களை அணிகளை மறு மதிப்பீடு செய்யவும், அதோடு தலைமை இயக்க அதிகாரி மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் பணியை விட்டு நீக்கினார். இவ்வாறாக இந்த நிறுவனம் தொடர்ந்து செலவை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது. இதன் மூலம் செலவினை குறைத்து நிறுவனத்தை சீர்படுத்த இது உதவும் என்றும் கருதப்படுகிறது.
நலிந்து வரும் உணவு டெலிவரி
உபெர் நிறுவனத்தில் சர்வதேச அளவில் கிட்டதட்ட 27,000 பேருக்கு மேல் பணிபுரியும் நிலையில், கிட்டதட்ட இவர்களில் பாதிபேர் அமெரிக்காவில் பணியாற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. உபெர் உணவு டெலிவரி வர்த்தகத்தோடு, போக்குவரத்துக்கான ஆட்டோ, கார், இரு சக்கர சர்வீஸூம் செய்து வருகிறது. அதிகரித்து வரும் போட்டியால், உபெர் மட்டும் அல்லாது, இதற்கு போட்டி நிறுவனங்களான மற்ற நிறுவனங்களும் நலிந்து வருவதும் நாம் காண முடிகிறது.
அமேசான் வருகை பின்பு
தற்போதே இந்த நிலைமை எனில், ஆன்லைன் சில்லறை வர்த்தக வியாபாரத்தின் ஜாம்பவான் ஆன அமேசான், அடுத்த மாதம் இந்த உணவு டெலிவரி துறையில் நுழையவிருக்கும் இந்த நிலையில், பல உணவகங்களோடு குறைந்த பட்ச கமிஷனுடன் கைகோர்த்து வருவதாகவும், கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இன்னும் இந்த பணி நீக்கம் தொடருமா? இல்லை அடுத்து என்ன நடக்கும் என்றும் பதற்றத்திலேயே பணியாளர்கள் பணியாற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்று காலை ஒரு கட்டுரையில் கூறியது போல, இந்தியர்கள் மட்டும் அல்லாது சர்வதேச அளவிலும் அனைவரின் கவலையே வேலையின்மையாகத் தான் உள்ளது என்பது சரியாகத் தான் உள்ளது.