பொதுவாக பங்கு சந்தையில் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கிடைக்கும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கூறுவார்கள்.
கொரோனாவின் வருகைக்கு பின்னர் கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவில் காணப்பட்டது. எனினும் அந்த சரிவில் இருந்து மீளத் தொடங்கிய சந்தையானது, வலுவான ஏற்றத்தினைக் கண்டது.
இந்த காலக்கட்டத்தில் பல பங்குகளும் மல்டிபேக்கர் பங்குகளாக உள்ளது. அப்படி லாபம் கொடுத்த பங்குகளில் டாடா பவரும் ஒன்று.
பங்கு ஏற்றம்
டாடா பவரின் பங்கு விலையானது 30 ரூபாயில் இருந்து, 237.50 ரூபாய் என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இது இந்த இரண்டு ஆண்டுகால இடைவெளியில் கிட்டத்தட்ட 700 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. எப்படியிருப்பினும் கடந்த சில மாதங்களாகவே இப்பங்கின் விலையானது, செல் ஆஃப் காரணமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது உக்ரைன் - ரஷ்யா போருக்கு இடையில் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.
1 1/2 மாத நிலவரம்
டாடா பவர் பங்கின் விலையானது காந்த ஏப்ரல் 6, 2022 அன்று அதன் 52 வார உச்சத்தினை எட்டியது. இதன் வரலாற்று உச்ச விலை 298.05 ரூபாயாகும். இதனை தொட்ட பிறகு சந்தையானது மீண்டும் சரியத் தொடங்கியது. இன்று இந்த பங்கின் விலையானது 237.50 ரூபாயாக உள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில் இப்பங்கின் விலையானது 20 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது.
ஓராண்டு நிலவரம் என்ன?
இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இப்பங்கின் விலையானது 6.50% அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆறு மாதத்தில் இப்பங்கின் விலையானது 4.50% லாபத்தினை கொடுத்துள்ளது. எனினும் கடந்த ஓராண்டில் 104 ரூபாயில் இருந்து, 237.50 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது சுமார் 130% அதிகரித்துள்ளது.
டாடா பவரின் பங்கு விலையானது கடந்த ஏப்ரல் 3, 2020ல் 30 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 237.50 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
ஒப்பந்தம்
இந்த நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு ஹூண்டாய் நிறுவனத்துடன் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது மேற்கொண்டு இவ்விரு நிறுவனங்களும் வளர்ச்சி காண உதவிகரமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் இவ்விரு நிறுவனகளின் வளர்ச்சி மேம்பட இது காரணமாக அமையலாம்.