உலகம் முழுவதும் தற்போது பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகளைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கு அல்ல.
இந்தியாவிலும் பல்வேறு வழிகளில் இதன் மீதான முதலீடுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்ஜெட்க்கு பின் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது அமலாக்கத் துறை.
பட்ஜெட் அறிக்கை
பிப்1 தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2018-19ஆம் நிதியாண்டில் பட்ஜெட் தாக்கலில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வேண்டாம் என அறிவித்தார்.
மத்திய அரசு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயற்சி செய்து அதுபற்றிய ஆய்வுகளைச் செய்து வருகிறது. ஆகவே முதலீட்டாளர்கள் அரசின் அறிவிப்புக்குப் பின் முதலீடு செய்யலாம் எனக் கூறினார்.
திடீர் சோதனை
சில வாரங்களுக்கு முன்பு நாட்டின் முக்கியமான கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளத்தில் அதிரடியாக அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிரடியாகச் சோதனை நடத்தியது.
இதில் சில நிறுவனங்கள் பணச் சலவை, மோசடிகள், வரி ஏய்ப்புகள் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிரடி நடவடிக்கை
இச்சோதனையின் அடுத்தகட்டமாக அமலாக்கத் துறை பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களைத் தனிப்பட்ட முறையில் தீவிர கண்காணிப்பில் வைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு அகமதாபாத் மற்றும் சூரத் பகுதியில் இருக்கும் சில பிட்காயின் முதலீட்டாளர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடிதம்
கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளத்தில் செய்யப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய சில கணக்குகளில் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
1 கோடி ரூபாய்
தற்போதைய நிலையில் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளத்தில் கிடைத்த தகவல்களைக் கொண்ட ஒரு நாளுக்கு 1 கோடி ரூபாய் வரையில் பிட்காயினில் முதலீடு செய்யும் நபர்களை அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது.
பிட்காயின் முதலீட்டில் தனிநபர்கள் அல்லாது சில நிறுவனங்களும் முதலீடு செய்து வருவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கி
டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி கூடப் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை, இது போலி முதலீட்டுத் திட்டமாக உள்ளது. ஆகவே இதனால் உங்கள் பணத்தை இழக்க நேரிடம் என்று ஆர்பிஐ எச்சரித்தது.
5,00,000 பேர்
இதுவரை அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சுமார் அதிகச் சொத்துமதிப்புடைய தனிநபர்கள் (HNI) பிட்காயினில் முதலீடு செய்துள்ள 5,00,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீங்கள் இந்த வலையில் சிக்கிக்கொள்ளாமல் உஷாராக இருங்கள்.